டெல்லி: லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பு வெளியாகி வருவதால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்திற்குப் பின் இந்த உயர்வை இந்திய ரூபாய் எட்டி உள்ளது.
அந்நியச் செலாவணிச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடந்த 2018 ஆகஸ்ட் முதல் சரிவடைந்து வந்தது. ஆனால், கடந்த ஒரு மாதத்தில் ரூபாய் மதிப்பு ஆசியாவின் இதர கரன்சிகளை விட அதிகரித்துள்ளது. இதற்கு மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சுமார் 273 இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என வெளியான கருத்துக் கணிப்புகள் தான் காரணம் என்று தெரிவித்துள்ளது.
அதிக வருவாய் ஈட்டும் நோக்கில், அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது. இரண்டாவது முறையாக மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமையும் என்ற எதிர்பார்ப்பு, சர்வதேச நிதி நிலவரம் போன்றவற்றால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு
மோடியே மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பில் அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்வதால் டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு தொடர்ந்து 5ஆவது வாரமாக உயர்ந்து வருகிறது. நேற்று, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 0.15 காசுகள் குறைந்து, 68.81ல் நிலை கொண்டது. கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக 70.86ஆக உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதத்தில் சுமார் 365 கோடி டாலர் அளவுக்கு கடன் பத்திரங்களில் அந்நிய முதலீடு மேற்கொள்ளப்பட்டது முக்கிய காரண மாகும்.
ரூபாய் மதிப்பு உயர்வு
கடந்த சில நாட்களாக சந்தையில் அமெரிக்க டாலரின் வரத்து அதிகரித்துள்ளதே இந்த உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. கடந்த ஓராண்டில் இல்லாத வகையில் முதன்முறையாக முதலீட்டாளர்கள் இந்திய ரூபாயை அதிகம் வாங்கியதாலும் ரூபாயின் மதிப்பு உயர்வடைந்துள்ளது.
கருத்துக்கணிப்புகள் பாஜகவிற்கு சாதகம்
லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு முன்பு சரிவில் இருந்த இந்திய ரூபாய் மதிப்பானது தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் உயர்ந்து வருகிறது. மோடியே மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருவதால் டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தேர்தலில் வெற்றி பெற வியூகம்
கடந்த டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டசபைத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக படுதோல்வி அடைந்து. இதனால் வரும் லோக்சபாத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது சந்தேகம் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இதனால் அதிர்ச்சியடைந்து பாஜக தேர்தலில் வெற்றபெற தேவையான நடவடிக்கைககளை மேற்கொள்ள ஆரம்பித்து.
சாதகமாக்கிய பாஜக
ஏதாவது ஒரு சம்பவம், ஒரு நிகழ்ச்சி, ஒரு மேஜிக் நடந்துவிடாதா, அது நமக்கு சாதகமாக அமையாதா என்ற பெரும் ஏக்கத்தில் இருந்த பாஜகவுக்கு கடந்த பிப்ரவரியில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா என்ற இடத்தில் நமது ராணுவத்தினர் மீது நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் திருப்புமுனையாக அமைந்துவிட்டது.
தீவிரவாத முகாம்கள் அழிப்பு
தீவிரவாத தாக்குதலில் நமது ராணுவ வீரர்கள் 42 பேர் வீர மரணம் அடைந்ததை அடுத்து நமது ராணுத்தினர் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களின் மீது விமான தாக்குதல் நடத்தியது. விமான தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டாலும், நமது விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டார்.
சாதகமாக்கிய பாஜக
இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கும் உலக நாடுகளின் கண்டனங்களுக்கும் பணிந்து வேறு வழி இல்லாத பாகிஸ்தான் விங் கமாண்டர் அபிநந்தனை விடுவித்தது. இந்த சம்பவம் இந்திய அரசியலையும், இந்தியப் பங்குச் சந்தையையும் அப்படியே மாற்றி விட்டது என்று சொல்லலாம். தாக்குதல் சம்பவத்திற்கு பின்பு எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் பாஜகவுக்கே சாதகமாக அமைந்தன.
இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு
கருத்துக் கணிப்புகள் வெளியான சூட்டோடு லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பாஜக சந்தோசத்தில் துள்ளிக்குதிக்க ஆரம்பித்துவிட்டது. இதையடுத்து பங்குச் சந்தைகளும் உயர ஆரம்பித்தன. அந்நிய நேரடி முதலீட்டாளர்களும்(FII), இந்திய நிறுவன முதலீட்டாளர்களும்(Institutional Investors) போட்டி போட்டு இந்தியப் பங்குச் சந்தையில் முதலீட்டைக் குவிக்க தொடங்கினர்.
ரூபாய் மதிப்பு உயர்வு
லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு பின்பு பெட்ரோல், டீசல் விலையும் பெரிதாக உயரவில்லை. இந்தியப் பங்குச் சந்தைகளும் தொடர்ந்து ஏறிக்கொண்டே செல்கிறது. இதனால் அந்நியச் செலாவணிச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கிறது. கடந்த 5 வாரங்களாகவே ரூபாயின் மதிப்பு கூடிக்கொண்டே செல்கிறது.
உயரும் ரூபாய் மதிப்பு
ஆசியக் கண்டத்தின் மற்ற நாடுகளின் கரன்சிகள் எல்லாம் தள்ளாட்டத்துடன் இருக்கும்போது இந்திய ரூபாயின் மதிப்பு மட்டும் அமெரிக்க டாலருக்கு எதிராக கடந்த 5 வாரங்களாக தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அடுத்தடுத்து வரும் தேர்தல் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் மோடியே மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார் என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்வதால் அந்நியச் செலாவணிச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பும் கூடக்கொண்டே செல்கிறது. இந்தியப் பங்குச் சந்தைகளும் தினம் தினம் புதிய உச்சத்தை நோக்கி செல்கிறது.
முதலீடுகள் அதிகரிப்பு
கருத்துக்கணிப்புகளின் விளைவாக பங்குகள் (Shares), கடன் பத்திரங்கள்(Debentures) போன்றவற்றில் அதிக அளவில் அந்நிய முதலீடுகள் குவிந்து வருகின்றன.ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சில நாடுகளின் மத்திய வங்கிகள், பணவாட்டத்தை கட்டுப்படுத்த, வட்டி குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதன் காரணமாகவும், இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் அதிக அளவில் டாலரில் முதலீடு செய்து வருகின்றனர்.
லேசான சரிவு
கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது. கடந்த 18ஆம் தேதி நிலவரப்படி, அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளில் சுமார் 330 கோடி டாலர் முதலீடு செய்துள்ளனர். கடன் பத்திரங்களில் சுமார் 140 கோடி டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதிக அளவில் டாலர் குவிந்ததால், கடந்த ஆண்டு ஆகஸ்டுக்கு பின் அந்நியச் செலாவணிச் சந்தையில் ரூபாய் மதிப்பு புதிய உச்சத்தை எட்டியது. இதனிடையே உயர்ந்து வந்த ரூபாய் மதிப்பு, முதலீட்டார்கள் லாப நோக்கில் பங்குகளை விற்றதால், இரு தினங்களாக சற்று சரிவை சந்தித்தன.