டெல்லி: Prompt Corrective Action என்பது தான் PCA வின் விரிவாக்கம். வங்கிகளின் நிதி நிலையைப் பொறுத்து தான் ஆர்பிஐ-ன் PCA திட்டத்தில் வங்கிகள் பட்டியலிடப் படுவார்கள். இந்த பிசிஏவில் பட்டியலிட்டிருந்த 11 வங்கிகளில் ஐந்து வங்கிகளை சக்தி காந்த தாஸ் வெளியேற்றியது இந்திய பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கும் எனச் சொல்கிறது Oxford Economics limited என்கிற அமைப்பு.
இந்த அமைப்பின் அறிக்கைகளையும், எச்சரிக்கைகளையும் பார்ப்பதற்கு முன் பிசிஏ பற்ரி கொஞ்சம் விரிவாக பார்த்துவிடுவோமா..? ஆர்பிஐ-ன் PCA-திட்டத்தில் பட்டியலிடப்படும் வங்கிகள் பெரிய தொகை டெபாசிட்டுகளை வாங்கக் கூடாது. அதே போல் இருக்கும் டெபாசிட்டுகளைக் கூட மறு டெபாசிட்டுகளாக (Renew) செய்யக் கூடாது.
ஆர்பிஐ அனுமதி இல்லாமல் புதிய சேவைகளை வழங்கவோ, கூடுதல் கட்டணங்களை வசூலிக்ககவோ, மற்ற வங்கிகளிடம் கடன் வாங்கவோ, புதிய கிளைகளை திறக்கவோ கூடாது.
ஆர்பிஐ கண்காணிப்பு
மிக முக்கியமாக PCA திட்டத்தின் கீழ் இருக்கும் வங்கிகள் ஆர்பிஐ அனுமதி இல்லாமல் பெரிய கடன் தொகைகளை வழங்கக் கூடாது. குறிப்பாக கார்ப்பரேட்டுக்கு பெரிய கடன் தொகைகளை வழங்கவே கூடாது. இப்படி இந்தியாவின் 11 அரசு வங்கிகள் இந்த PCA திட்டத்தின் கீழ் பட்டியலிட்டது உர்ஜித் தலைமையிலான ஆர்பிஐ.
பலவீனம்
அந்த அளவுக்கு பொதுத் துறை வங்கிகளின் நிதி நிலை பலவீனமாக இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகள் இப்படியே விட்டால் இந்திய வங்கிகள் மொத்தமாக திவால் ஆகிவிடும் என தில்லாக சொல்லி PCA திட்டத்தை ஒழுங்காக பயன்படுத்தியவர் உர்ஜித் படேல்.
மத்திய அரசு
"எப்பா உர்ஜித், நீங்க சொன்ன PCA திட்டத்தால மொத்த இந்தியாவும் ஸ்தம்பிச்சி இருக்கு. PCA திட்டத்த வாபஸ் வாங்குங்க" என வழக்கம் போல நிதி அமைச்சகம் அழுத்தம் கொடுத்தது. "என் காலத்தில் இந்திய வங்கிகள் திவால் ஆவதை நான் விரும்பவில்லை" என ஒற்றை வரியில் பதிலளித்து PCA திட்ட உரையாடலுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் உர்ஜித் படேல்.
சக்தி காந்த தாஸ்
மேலே சொன்ன பிசிஏ திட்ட அமல்படுத்துதல் உட்பட ஏழு முக்கிய காரணங்களால் உர்ஜித் படேல் ராஜினாமா செய்தார். தன் சொல் பேச்சை கேட்கும் ஒரு நல்ல அதிகாரியை தேடிக் கொண்டிருந்த போது தான் நம் முன்னாள் பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்தி காந்த தாஸ் கண்ணில் படுகிறார். அவரை பதவியிலும் அமர்த்தி விட்டது மத்திய அரசு.
5 வங்கிகள் வெளியேற்றம்
சக்திகாந்த தாஸ் ஆர்பிஐ கவர்னராக வந்த அடுத்த 3 மாதங்களுக்குள்ளேயே 5 பொதுத்துறை வங்கிகளை இந்த கடுமையான பிசிஏ திட்டத்தில் இருந்து விடுவித்துவிட்டார். பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் என மூன்று அரசு வங்கிகளை ஜனவரி 31, 2019-லும், கார்ப்பரேஷன் பேங்க் மற்றும் அலஹாபாத் பேங்க் ஆகிய இரண்டு அரசுத் துறை வங்கிகளோடு, தனியார் வங்கியான தன லஷ்மி வங்கியையும் கடந்த பிப்ரவரி 26, 2019 அன்று விடுவித்துவிட்டார்.
Oxford கருத்து
Oxford Economics Limited என்கிற அமைப்பு "சக்திகாந்த தாஸ் குறுகிய கால நன்மைகளைக் கருத்தில் கொண்டு இந்தியாவின் ஐந்து அரசு வங்கிகளை வெளியெ எடுத்தது தவறு" எனச் சொல்லி இருக்கிறது. இந்த ஒரு தளர்வினால் இந்தியாவில் புதிதாக வாராக் கடன்கள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கணித்திருக்கிறது.
முயற்சிகள் வீண்
கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து ஆர்பிஐ இந்தியாவின் அரசு மற்றும் தனியார் வங்கிகளை முழு மூச்சாக கவனித்து வந்தது. அதில் நிதி நிலை மோசமான 11 வங்கிகளை மட்டும் பிசிஏ திட்டத்தில் சேர்த்து அவர்களின் நிதி நிலைகளை சரி செய்து கொண்டிருந்தது. ஆனால் இன்று அதில் 5 வங்கிகளை பிசிஏ திட்டத்தில் இருந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் கடன் வசதிகளுக்காக வெளியே விட்டது சரி இல்லை என்றும் சொல்லி இருக்கிறது.
குறுகிய காலம்
இப்போது குறுகிய காலத்தில் இந்திய பொருளாதாரத்தை சரி செய்ய, நீண்ட காலத்துக்கு இந்திய பொருளாதார வளர்ச்சியை விலை கொடுக்க வேண்டி இருக்கும். அதோடு இந்தியாவுக்கு வரும் முதலீடுகளும் பெரிய அளவில் குறையும் எனவும் அந்த அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள்.
உலக வாராக் கடனில் நம்பர் 1
ஏற்கனவே இந்தியா தான் உலகிலேயே மோசமான வாராக் கடன் விகிதத்தை வைத்திருக்கிறது. அதனால் தான் மோடி தலைமையிலான அரசு பொதுத்துறை வங்கிகளுக்கு பணம் கொடுத்து உதவியது. இதுவரை இந்தியாவுக்கு 14 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனாக இருக்கிறது.
பொருளாதா மந்த நிலை
இப்படியே போய்க் கொண்டிருந்தால் இந்திய தொழிற் துறைகள் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் போகும். ஆக ஒரு பக்கம் வாராக் கடன் அதிகரித்துக் கொண்டிருந்தால், மீண்டும் தொழிற் துறையினருக்கு வங்கிகள் கடன் கொடுக்கத் தயங்கும், கடன் கொடுக்க பணமும் இருக்காது. எனவே நிறுவனங்களுக்கான முதலீடுகள் குறைந்து இந்தியப் பொருளாதாம் எதிர்பார்க்கும் 8 - 9% ஜிடிபி வளர்ச்சியும் சாத்தியமில்லாமல் போய்விடும் என்கிறது அந்த Oxford Economic limited அறிக்கை.