டெல்லி: ஒரு காலத்தில் இந்தியாவின் முன்னணி தனியார் பயணிகள் விமான சேவை நிறுவனமாக இருந்த ஜெட் ஏர்வேஸ் இப்போது மீள முடியாத கடன் மற்றும் கட்டண பாக்கிப் பிரச்னைகளில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிறுவனத்தில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள், விமானிகள் மற்றும் விமானப் பணிப் பெண்கள் இன்னும் ஜெட் ஏர்வேஸில் தான் பணியாற்றுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடுமையான நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
31 மார்ச் 2008 -ம் ஆண்டின் நிதி நிலை அறிக்கைகள் படி 253.06 கோடி ரூபாய் நஷ்டம் எனத் தொடங்கிய ஜெட் ஏர்வேஸின் கெட்ட காலம் 2014 வரை தொடர்ந்தது. 31 மார்ச் 2014 நிதி நிலை அறிக்கைகள் படி நிகர நஷ்டம் 3667 கோடி ரூபாயாக விண்னைத் தொட்டது. அதன் பின் அடித்துப் பிடித்து மார்ச் 2015-ல் நஷ்டத்தை 1,813 கோடி ரூபாயாக குறைத்தார்கள்.
கொஞ்சம் லாபம்
மார்ச் 2016 மற்றும் மார்ச் 2017 ஆகிய ஆண்டுகளில் யாரும் எதிர்பாராத விதத்தில் ஜெட் ஏர்வேஸ் சுமார் 1200 மற்றும் 1500 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியது. மீண்டும் மார்ச் 2018-ல் நஷ்டம் 767 கோடியாக சரிந்திருக்கிறது.
கடன்
இப்போது சுமார் 7,000 கோடி ரூபாய்க்கு கடன் வேறு கழுத்தை நெறித்துக் கொண்டிருக்கிறது. அந்த கடனையும் நிறுவனத்தால் அடைக்க முடியவில்லை. அவ்வளவு ஏன் விமான சேவை நிறுவனத்துக்கு அதி முக்கியமான விமானிகள் மற்றும் விமானப் பணிப் பெண்களுக்கு கூட ஒழுங்காக சம்பளத்தைக் கொடுக்க முடியாமல் தவிக்கிறது. இதனால் பல்வேறு விமானிகள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை விட்டு விலகிக் கொண்டிருக்கிறார்கள்.
விமானங்கள் ரத்து
இதனால் பல்வேறு வழி தடங்களில் விமானங்களை இயக்க முடியாமல் நிறுவனமே முன் வந்து தன் சேவையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இப்படி நிறுத்தும் விமானங்களில் பெரும்பாலானவைகள் லீஸ் தொகை கொடுத்து எடுத்தவைகள். இப்போது நிறுத்தப்பட்டுள்ள 50 லீஸ் விமானங்களை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் லீஸ் தொகைக்கு எடுத்து ஓட்ட விருப்பம் காட்டி உள்ளது. பேச்சு வார்த்தையும் நடந்து கொண்டிருக்கிறது.
வேண்டுகோள்
இதற்கிடையே ஜெட் ஏர்வேஸ் நிறுவன பைலட்டுகள் தங்கள் சம்பள பாக்கியை உடனே வழங்காவிட்டால் வருகிற 1-ம் தேதி முதல் விமானங்களை இயக்க மாட்டோம் என்று தெரிவித்து உள்ளனர். இந்த சூழலில், 13 சர்வதேச வழித்தடங்களில் ஏப்ரல் இறுதிவரை விமான சேவையை நிறுத்தி வைக்க இருப்பதாக ஜெட் ஏர்வெஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
7 விமானங்கள் நிறுத்தம்
பங்குச்சந்தையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கொடுத்த தகவலின் படி, லீஸ் ஒப்பந்தத்தின் படி செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையினை செலுத்தாததால், கூடுதலாக 7 விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாம். ஆக இதுவரை சுமார் 70 விமானங்கள் மட்டுமே செயல்பட்டு வந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் இப்போது மேலும் 7 விமானங்கள் தரை இறக்கப்பட்டு 63 ஆக சரிந்திருக்கிறது.