மயிலாடுதுறை: நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை தாலுகாவின் பிரசித்தி பெற்ற புனுகீஸ்வரர் சிவாலயமும், சாரங்கபாணி பெருமாள் ஆலயமும் அருகருகிலேயே தானிருக்கிறது.
இந்த இரண்டு கோவிலுக்கும் செல்லும் முன் நாம் ரவுலா பர்வீனின் கடையைத் தாண்டித் தான் செல்ல வேண்டும். மயிலாடுதுறை புகழ் பாயம்மா பூக்கடை இது தான்.
நீங்கள் நினைப்பது சரி தான் ஒரு இஸ்மாலியப் பெண் மணி தன் குடும்பத்தோடு இரண்டு இந்து கோயில்களுக்கு முன் பூ மற்ரும் பூஜை சாமான்களை வியாபாரம் செய்து தன் வாழ்கையை அழகாக ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
சாதிக் பாஷா
கடையில் பிஸியாக இருக்கும் சாதிக் பாஷா பூக்களை சரி செய்து கொண்டே பேசத் தொடங்குகிறார். "மயிலாடுதுறையில் ஆறுமுகம் சேர்வை பூக்கடையில் 15 வருடத்துக்கு மேல் வேலை பார்த்தேன். அந்த நல்லவரின் உதவியோடு தான் நான் தனியாக வந்து பூ விற்கத் தொடங்கினேன். முதலில் சைக்கிளில் சின்ன சின்ன தட்டிகளில் பூக்களை வைத்துக் கொண்டு விற்றுக் கொண்டிருந்தேன்.
கடை
2000-க்குப் பிறகு தான் இப்போது நீங்கள் பார்க்கின்ற பூக்கடை போட்டேன். அதே ஆண்டில் தான் ரவுலாவையும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டேன். அதன் பிறகு கூட இந்த இடத்திலும் தட்டிக்களை வைத்து தான் வியாபாரம் பார்த்தோம். இப்போது தான் சில வருடங்களுக்கு முன் பில்டிங் கட்டி வியாபாரம் பார்த்து வருகிறோம்.
ரவுலா வருகை
திருமணத்துக்குப் பின் தான் ரவுலா என் கடைக்கு வந்து உதவத் தொடங்கினாள். இன்று என் கடையில் நான் வியாபாரம் பார்ப்பதை விட, அவள் வியாபாரம் பார்ப்பது தான் அதிகம். என்னிடம் சங்கோஜப்பட்டு பூ வாங்காமல் போவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் ரவூலாவிடம் அப்படி யாரும் நடந்து கொண்டதில்லை என்கிறார் பாஷா. ஆகையினால் எங்கள் பூக் கடையின் பெயரே பாயம்மா கடை என்றாகிவிட்டது.
குழந்தைகள்
என் மகன் மற்றும் மகள்களை மாமியார் பார்த்துக் கொள்கிறார். அதனால் இங்கு வியாபாரத்துக்கு வர முடிகிறது. முடிந்த அளவு ஒன்றாக சேர்ந்து உழைக்கிறோம், ஓடுகிறோம். நிம்மதியாக நாட்கள் கழிகிறது. ஆனால் நிறைய எதிர்ப்புகளையும் சந்தித்திருக்கிறோம். சில இந்து அமைப்புகள் கூட எங்களை இங்கிருந்து காலி செய்யச் சொல்லி இருக்கிறார்கள், மிரட்டி இருக்கிறார்கள். ஆனால் எங்கள் பூக்களின் மீதிருக்கும் நம்பிக்கை காரணமாக எங்களை வாழ வைக்கும் வாடிக்கையாளர்களால் தான் இன்னும் இங்கு வியாபாரம் பார்க்க முடிகிறது என்கிறார் ரவுலா.
பூஜை தெரியும்
நாங்கள் பிறப்பாலும், பின்பற்றும் மத வழியாலும் இஸ்லாமியர்கள் தான். ஆனால் ஒரு வியாபாரியாக, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு என்ன மாதிரியான பூஜை சாமான்கள் எல்லாம் தேவையோ அதை எல்லாம் வாங்கி விற்று வருகிறோம். மதங்கள் மக்களை இணைப்பதற்கே என்பதை எங்கள் வாழ்கையில் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இஸ்லாமியர்களாகிய எங்களிடம் இந்துக்கள் பூக்களை வாங்கிக் கொண்டு கோவிலுக்குச் சென்று இறைவனிடம் சமர்பிக்கும் போது அது அவர்களுக்கு மட்டும் கோவில் இல்லை, எங்களுக்கும் தான் என்று பூரிக்கிறார் ரவுலா. அதை சிரிப்பில் ஆமோதிக்கிறார் சாதிக் பாஷா.