நாகர்கோவில்: படுத்த படுக்கையான மனைவிக்கு வசதியாக புதுமையான கட்டிலைக் கண்டுபிடித்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சரவணமுத்துவுக்கு தேசிய புதுமை விருது கிடைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் சரவணமுத்து. இவரது மனைவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பின்னர் அவர் எழுந்து நடமாட முடியாத சூழ் நிலை ஏற்பட்டது. இன் நிலையில் தன் மனைவி கழிப்பறை செல்வதற்கு படும் கஷ்டங்களை கண்கூடாகப் பார்த்த சரவணமுத்து, வயதானவர்களும், முதியோர்களும் படும் கஷ்டத்தை புரிந்து கொண்டார்.
இதையடுத்து இப்படி நடமாட முடியாதவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தார். அதில் உருவானதுதான் ரிமோட் கண்ட்ரோல் கட்டில்.
முயற்சி திருவினையாக்கும்!
பல முயற்சிகளை செய்து பின், தன் மனைவியின் படுக்கைக்கு கீழேயே ஒரு கழிப்பறையை செட் செய்தார். இதை படுக்கையில் இருப்பவர்களே மற்றவரின் உதவி இல்லாமல் பயன்படுத்தும் வகையில் வடிவமைத்தார்.
இந்த படுக்கை கழிப்பறையில் பிளஷ் டேங்க், படுக்கையின் நடுவே ஒப்பன், செப்டிக் டேங்கிற்கான இணைப்பு போன்றவை பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இதனை படுக்கையில் இருப்பவர்களே ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆப்ரேட் செய்து கொள்ளும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எப்படி ஆப்ரேட் செய்வது?
இதில் மொத்தம் மூன்று பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் முதல் பட்டன் படுக்கையில் கீழேயுள்ள கழிப்பறையின் மூடியை திறக்கவும், இரண்டாவது பட்டன் கழிப்பறையை திறக்கவும், மூன்றாவது பட்டன் பிளஷ் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த கண்டுபிடிப்பு பலராலும் பாராட்டப்பட்டடது. தற்போது இதற்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. தேசிய கண்டுபிடிப்பு குழுமத்தின் தேசிய புதுமை விருது சரவணமுத்துவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதைத் தொடர்ந்து சரவணமுத்துவின் நவீன கட்டிலுக்கு ஆர்டர்கள் குவிகின்றனவாம். . ஏற்கனவே 350 பெட் ஆர்டர்கள் வந்த நிலையில் புதிய ஆர்டர்களால் மகிழ்ச்சி என்கிறார் சரவணமுத்து.
இந்தக் கட்டில் மட்டும் என்றில்லாமல், மின்சாரம் இல்லாத சமயங்களில் எழுதுவதற்கு வசதியாக விளக்குடன் கூடிய பேனா, சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்காக காற்றை சுத்தம் செய்து ஃபில்டர் பண்ணி சுவாசிக்கக் கூடிய மாஸ்க், தேங்காய் உரிக்கும் கருவி என பல புதிய உபயோகமானக் கருவிகளைச் செய்துள்ளார் சரவண முத்து.