சென்னை: ஒரு 10 வயது குழந்தை என்றால் என்ன செய்யும். அம்மா அப்பா சொல்வதைக் கேட்டு நடந்து கொள்ளும். தனக்கு தேவையானதை அப்பா அம்மாவிடம் கேட்கும். அடம் பிடிக்கும், விளையாடும், சாப்பிடும்.
சக குழந்தைகளோடு செல்லச் சண்டைகள் போடும், பள்ளிக் கூடம் போகும், அவ்வப் போது வேண்டிய பொருட்கள் கிடைக்கவில்லை என்றால் கதறி அழும். அதிக பட்சம் வகுப்பிலேயே முதல் ரேங்க் எடுத்து அப்பா அம்மாவை ஆச்சர்யப்படுத்தும்.
இவ்வளவு தானே குழந்தைகள் என நாம் வரையறுத்து வைத்திருந்தோம். ஆனால் இன்று ஒரு குழந்தை தன் 8-வது வயதிலேயே இளம் வயது தொழில்முனைவோருக்கான விருதை தட்டிச் சென்று இருக்கிறார் இஷானா.
சாஃப்ட் டாய்ஸ்
டெட்டி பியர் பார்த்திருக்கிறீர்களா..? அது எப்படி பஞ்சு போலவே இருக்கும். இது போல மென்மையாக பஞ்சுகள், துணி மணிகள் போன்ற இலகுவான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பொம்மைகள் தான் சாஃப்ட் டாய்ஸ்கள்.
வீடே தயாரிப்பு ஆலை
தன் அப்பா மற்றும் அம்மா உடனேயே தங்கி இருக்கும் வீட்டில் சாஃப்ட் டாய்ஸ்களை தயாரித்துவிடுகிறார் இந்த 8 வயது இஷானா. தயாரித்த பொம்மைகளை அழகாக பேக் செய்து, அதை பொது இடங்களில் ஸ்டால்கள் மூலம் விற்பனை செய்து கல்லாவும் கட்டி விடுவாராம் இந்த சென்னைச் சிறுமி.
பிடிக்கும் கற்றுக் கொண்டேன்
இஷானாவுக்கு எல்லா குழந்தைகளைப் போலவே பொம்மைகள் என்றால் கொள்ளைப் பிரியம். எல்லா குழந்தைகளும் பொம்மை கிடைத்தால் விளையாடுவார்கள். இஷானா ஒரு படி மேலே போய் அந்த பொம்மையை எப்படி செய்கிறார்கள்..? ஏன் இத்தனை சாஃப்டாக இருக்கிறது..? இதில் என்ன மெட்டீரியல் பயன்படுத்துகிறார்கள் என சுற்றி இருப்பவர்களிடம் கேட்டு, இணையத்தில் படித்து தெரிந்து கொண்டாராம்.
உற்பத்தி
இத்தனை படித்த இஷானா திடீரென சாஃப்ட் டாய்ஸ்களைச் செய்வது எப்படி எனவும் தேடிப் பிடித்துவிட்டார். அதே செய்முறைகளில் செய்துப் பார்த்துவிட்டார். ஒரு அழகான பொம்மை அவுட் புட்டாக வந்துவிட்டது. பெற்றோர்கள் அரண்டு விட்டார்களாம். அப்போது வரை இஷானாவுக்கு பொம்மைகளை செய்து விற்கலாம் என்கிற ஐடியாவே கிடையாதாம். பொழுது போகவில்லையா உட்கார்ந்து முடிந்த வரை பொம்மைகளோடு விளையாடி விட்டு, பிடித்த கலர்களில் பொம்மைகளைச் செய்யத் தொடங்கிவிடுவாராம்.
கேலரி
அப்படி பொழுது போகாமல் செய்து வைத்த பொம்மைகளை எல்லாம் இஷானாவின் அம்மாவின் தோழி ஒருவர் பார்த்து அசந்துவிட்டாராம். அந்த அம்மாவின் தோழி சொல்லித் தான் சாஃப்ட் டாய்ஸ் வியாபாரமே தொடங்கினார்களாம். ஆனால் தன் அப்பா போல எல்லா அப்பாக்களாலும் பொம்மைகளை வாங்கித் தர முடியாது எனச் சொல்லி பொம்மைகளை தயாரித்து இலவசமாக கொடுக்கத் தொடங்கினார் இஷானா. யாருக்கு தெரியுமா..?
இவர்களுக்கு தான்
இஷானா தயாரித்த பொம்மைகளை, அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பொம்மைகளோடு அன்பை அள்ளிக் கொடுத்திருக்கிறார். அந்த அன்பு என்னமோ செய்ய இஷானாவின் பிஞ்சு மனதும் பெருங்கடலாய் விரிந்துவிட்டது. உற்பத்தி அளவும் பெருகுகிறது. பொம்மைகளோடு தான் விளையாடுவதை கொஞ்சம் நிறுத்தி விட்டு தன்னை போன்ற குழந்தைகள் பொம்மைகளோடு விளையாட நிறைய பொம்மைகளை தயாரிக்கத் தொடங்கினார். இந்த முறை ஆதரவற்ற குழந்தைகள், ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் முகத்தில் சிரிப்பைக் கொடுத்தாள் அந்த மகராசி.
பணம் உதைக்குது
வரும் குழந்தைகளுக்கு எல்லாம் இலவசமாக பொம்மைகளைக் கொடுக்கும் நிலையில் இஷானாவின் பெற்றோர்கள் இல்லை. ஒரு கட்டத்தில் காசு இல்லை பொம்மை பிறகு செய்து கொள்ளலாம் எனச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். இஷானாவுக்கு மனம் வாடியது. அப்போது தான் இஷானாவின் அம்மா பொம்மைகளை விற்கலாம் எனச் சொல்கிறார். அரை மனதோடு சம்மதிக்கிறாள்.
கல்லூரி வாசல்
இப்போது தயாரிக்கும் பொம்மைகளை அருகில் இருக்கும் பள்ளிக் கூடங்கள், கல்லூரி வாசலில் ஸ்டால்கள் அமைத்து விற்றுவிடுகிறாராம். இப்போது பொம்மைகளுக்கான அடக்க விலையை மீட்டுக் கொண்டு வரும் லாபத்தில் மீண்டும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பொம்மை செய்து கொடுக்கிறாள் இந்த பொம்மாயி.
அந்த டெக்னிக்
தன்னுடைய பிசினஸில் பெரிய வியாபாரிகளைப் போல வால்யூம் மற்றும் விலைகளைப் பற்றி எல்லாம் பேசாமல் கப்சிப் என ஒரு சின்ன டெக்னிக்கை ஃபாலோ செய்கிறாராம். "தன்னிடம் இரண்டு பொம்மைகளை வாங்கினால் மூன்றாவதாக ஒரு பொம்மையை இலவசமாகத் தருவாளாம். ஆனால் அந்த பொம்மையை வாங்குபவர்களே ஆதரவற்ற குழந்தைகளுக்கோ, உடல் முடியாத குழந்தைகளுக்கோ கொடுத்து அழகு பார்க்க வேண்டும்" என்பது மட்டுமே ஸ்ட்ரிக்ட் கண்டீஷன்.
பணமாகவும் கொடுக்கலாம்
அப்படி இனாமாக பொம்மைகளை வாங்க முன் வராதவர்களிடம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பொம்மை கொடுக்க தனியே உண்டியல் வைத்து பணத்தை திரட்டி இவரே தயாரித்து கொடுத்து வருகிறாராம். பிசினஸாக செய்யத் தொடங்கிய பின் இலவசமாக கொடுக்கும் பொம்மைகளின் எண்ணிக்கை இரு மடங்காகி இருக்கிறதாம். ஒரு ஆதரவற்ற குழந்தைக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இது தானே அவசியம் என நினைப்பது தான் நம்மைப் போன்ற படித்த புத்திசாலிகளின் வாதம். ஆனால் "அவங்களும் ஒரு குழந்தை தான, அப்ப அவங்களுக்கு பொம்ம வேண்டாமா..?" என இந்த சமூகத்தைப் பார்த்து கேள்வி எழுப்பி இருக்கிறாள் இந்த இனியவள் இஷானா. அவள் கேட்ட கேள்விக்கு பொம்மைகள் வழியாக அவளே பதில் எழுதிக் கொண்டிருக்கிறாள். வாழ்த்துக்கள் இஷானா.