டெல்லி: தனக்கு சேர வேண்டிய 40 கோடி ரூபாய்க்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மஹிந்திர சிங் தோனி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.
கடந்த 2009-ம் ஆண்டு மஹிந்திர சிங் தோனியை அம்ரபாலி குழுமம் தன் பிராண்டின் தூதராக நியமித்துக் கொண்டது, அதன் பின் பல அம்ரபாலி குழும நிறுவன விளம்பரங்களிலும் நடித்துக் கொடுத்தார் தோனி. அதோடு பல்வேறு விளம்பரப் படங்களிலும் தோனியின் படத்தை பயன்படுத்திக் கொண்டார்கள்.
2009-ல் போட்ட ஒப்பந்தப் படி தோனி 2016 வரை அம்ரபாலி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பிராண்ட் தூதராக பல்வேறு நிறுவன விஷயங்களில் இருப்பார் எனச் சொல்லப்பட்டிருக்கிறதாம்.
கைது
சமீபத்தில் தான் அம்ரபாலி ரியல் எஸ்டேட் குழுமம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் செய்தியும் வெளியானது. அதோடு சுமார் 46000 பேரிடம் வீட்டை கட்டிக் கொடுப்பதாகச் சொல்லி பணம் வாங்கிக் கொண்டு எந்த ஒரு வீட்டையும் கட்டிக் கொடுக்காமல் ஏமாற்றிய குற்றத்துக்காகவும் அம்ரபாலி நிறுவன உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டார்கள்.
38 கோடி பாக்கி
தற்போது தோனி அம்ரபாலி ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் நடித்ததற்கு கொடுக்க வேண்டிய பணத்தை கடந்த நான்கு ஆண்டுகளாக கொடுக்கவில்லை. அதனால் விளம்பரங்களில் நடித்ததற்கு கொடுக்க வேண்டிய தொகை 22.53 கோடி ரூபாய்க்கு, நான்கு ஆண்டு காலத்துக்கு 18 சதவிகிதம் வட்டி (Simple Interest) போட்டு 16.42 கோடி ரூபாய் என மொத்தம் 38.95 கோடி ரூபாயை தருமாறு உச்ச நீதிமன்றத்திடம் சொல்லி இருக்கிறார்.
ஆதாரங்கள்
தோனி தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் அம்ரபாலி நிறுவனத்துக்கும், தோனிக்கும் இடையில் போட்டுக் கொண்ட ஒப்பந்தங்கள், தருவதாகச் சொன்ன தொகைகள், நடித்துக் கொடுத்த விளம்பரங்களின் பட்டியல், 2016-க்கு முன்பு வரை மேற்கொண்ட விளம்பரங்களுக்கு கொடுத்த தொகைகள் என பல்வேறு ஆதாரங்களை சமர்பித்திருக்கிறார்கள்.
சிறையில் அதிகாரிகள்
கடந்த பிப்ரவரி 28, 2019-ல் தான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் அம்ரபாலி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அனில் சர்மா மற்றும் அம்ரபாலி நிறுவனத்தின் இரண்டு இயக்குநர்கள் சிவ ப்ரியா மற்றும் அஜய் குமார் ஆகியோர்கள் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications