மும்பை: பஞ்சாப் நேஷனல் பேங்கின் ஊழல் புகழ் நீரவ் மோடி தன் கலைக் களஞ்சியங்களில் சேமித்து வைத்திருந்த விலை உயர்ந்த ஓவியங்களை எல்லாம் ஏலம் விட்டு சுமார் 55 கோடி ரூபாயை திரட்டி இருக்கிறது இந்திய வருமான வரித் துறை.
Saffronart's Spring என்கிற லைவ் ஏல நிறுவனம் தான் இந்திய வருமான வரித் துறை சார்பாக நீரவ் மோடியின் ஓவியங்களை 54.84 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்றுக் கொடுத்திருக்கிறது.
நீரவ் மோடியின் ஓவியங்கள் மூலம் கிடைத்த, இந்த 54.85 கோடி ரூபாயும், வருமான வரித் துறையில் வரி மீட்பு அலுவலகத்துக்கு சென்று சேர்ந்திருக்கிறதாம்.
ஒரே ஓவியம் 25 கோடி
1973-ம் ஆண்டு வி.எஸ்.காய்தோண்டேவினால் வரையப்பட்ட ஒரு ஓவியம் 25.2 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறார்களாம். வி.எஸ் காய்தோண்டே வரைந்த ஓவியங்களிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட நான்காவது ஓவியம் இது. அப்படிப்பட்ட ஓவியரின் ஓவியத்தைத் தான் வைத்திருந்தார் நம் நீரவ் மோடி.
ராஜா ரவிவர்மா
நீரவ் மோடியின் இரண்டாவது ஓவியம் உலகப் புகழ் பெற்ற ராஜா ரவி வர்மாவினால் வரையப்பட்டது. இந்த உலகப் புகழ் பெற்ற ஆயில் பெயிண்டிங்கு ஏலத்தில் 16.1 கோடி ரூபாய்க்கு எடுத்திருக்கிறார்களாம்.
பறிமுதல்
மேலே சொன்ன இரண்டு ஓவியங்களோடும் சின்னதும் பெரிதுமான இன்னும் பல ஓவியங்களை நீரவ் மோடியின் வீட்டில் சோதனை நடத்திய போதே சொத்துக்களோடு சொத்துக்களாக பறிமுதல் செய்துவிட்டார்களாம். அதனால் தான் இப்போது ஏலத்தில் விட்டு 55 கோடி ரூபாய் திரட்ட முடிந்ததாம்.
ஓவியர்கள்
இந்த இரண்டு ஓவியர்களோடு FN Souza, Akbar Padamsee, Jagdish Swaminathan, Rameshwar Broota என இந்தியாவின் பல முன்னனி ஓவியர்களின் ஓவியங்களையும் ஏலத்தில் விட்டிருக்கிறார்களாம்.
முதல் முறை
இந்தியாவிலேயே முதல் முறையாக ஓவியங்கள் மற்றும் கலைப் பொருட்களை விற்றுக் கொடுக்க ஒரு தொழில்சார்ந்த ஏல நிறுவனத்திடம் ஓவியங்களைக் கொடுத்து வரி பாக்கிகளை திரட்டுவது வருமான வரித் துறைக்கு இதுவே முதல் முறையாம்.
மற்ற அமைப்புகள்
வருமான வரித் துறையினரைத் தொடர்ந்து இப்போது பல்வேறு விசாரணை அமைப்புகளும், தாங்கள் பறிமுதல் செய்திருக்கும் நீரவ் மோடியின் விலை உயர்ந்த பொருட்களை ஏலத்தில் விட்டு தங்களுக்கு வந்து சேர வேண்டிய வரிகள், அபராதங்களை எடுத்துக் கொள்ள நினைக்கிறார்களாம்.
கார்களா..?
குறிப்பாக அமலாக்கத் துறை தன் வசம் இருக்கும் நீரவ் மோடியின் விலை உயர்ந்த Rolls Royce, Porsche, Mercedes Benz, Audi, Maserratti கார்களை ஏலத்தில் விட்டு வரி பாக்கிகளை திரட்ட இருக்கிறார்களாம்.