டெல்லி : பணப் பரிவர்த்தனைகளின் போது விதிகளை மீறி செயல்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து 36 வங்கிகளுக்கு 71 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
விதிகளை மீறி செயல்பட்ட வங்கிகளில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியும், தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கியும் அடங்கும். விரைவான பணப்பரிமாற்றத்திற்கு பயன்படும் ஸ்விஃப்ட் மென்பொருளை முறைகேடாக பயன்படுத்தியதாலேயே வங்கிகளுக்கு ஆர்பிஐ அபராதம் விதித்துள்ளது.
ஸ்விஃப்ட் (SWIFT) மென்பொருளை தவறாகப் பயன்படுத்தியே பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 14000 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடியில் நீரவ் மோடி, மேஹூல் சோக்ஸி உள்ளிட்ட பலர் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
உள்நாட்டு பணப்பரிமாற்றம்
வங்கிகள் ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பணப்பரிமாற்றம் செய்வதற்கு 2 முறைகளைக் கையாள்கின்றன. இதில் உள்நாட்டிற்குள் பரிமாற்றம் செய்வதற்கு நெஃப்ட்(NEFT), ஆர்டிஜிஎஸ்(RTGS) மற்றும் ஐஎம்பிஎஸ்(IMPS) என்ற மூன்று வழிகளில் பணப்பரிமாற்றம் செய்வது வாடிக்கை. இதில் நாம் கையாளும் தொகைக்கு ஏற்ப பரிமாற்றம் செய்யும் முறையும் மாறுபடும்.
வெளிநாட்டு பணப்பரிமாற்றம்
சர்வதேச பணப்பரிமாற்றம் செய்வதற்கு ஸ்விஃப்ட்(Society for Worldwide Iinterbank Financial Telecommunications - SWIFT) என்னும் மென்பொருளை பயன்படுத்துவது வழக்கம். அதாவது எந்த ஒரு ஏற்றுமதியாளரோ அல்லது இறக்குமதியாளரோ ஸ்விஃப்ட் மென்பொருளைப் பயன்படுத்தித்தான் பணப்பரிமாற்றம் செய்யமுடியும். சுருக்கமாக சொல்வதென்றால் முறையான வெளிநாட்டு பணப்பரிமாற்றத்திற்கு நிச்சயம் ஸ்விஃப்ட் மென்பொருள் இல்லாமல் பரிமாற்றம் செய்ய முடியாது.
ஸ்விப்ட் இல்லாமல் முடியாது
உள்நாட்டு பணப்பரிமாற்றத்திற்கு ஐஎஃப்எஸ்சி (IFSC) நம்பர் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்திற்கு ஸ்விஃப்ட் நம்பர் மிக அவசியம். ஸ்விஃப்ட் நம்பரை மாற்றி பணப்பரிமாற்றம் செய்ய நினைத்தால் நாம் அனுப்பும் பணம் நாம் அனுப்ப நினைத்த வாடிக்கையாளருக்கு போய்ச் சேராது.
நீரவ் மோடி, மேஹூல் சோக்ஸி
ஸ்விஃப்ட் (SWIFT) மென்பொருளை தவறாகப் பயன்படுத்தியே பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 14000 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடியில் நீரவ் மோடி, மேஹூல் சோக்ஸி உள்ளிட்ட பலர் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
ஆர்பிஐ கட்டுப்பாடு
பணப்பரிவர்த்தனையில் ஸ்விஃப்ட் மென்பொருளைப் பயன்படுத்தி நடந்த இந்த மிகப்பெரிய மோசடிக்குப் பிறகு வங்கிகள் இதை பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை ஆர்பிஐ விதித்தது. அதுமட்டுமில்லாமல் வங்கிகள் ஸ்விஃப்ட் மென்பொருளை தவறாகப் பயன்படுத்தும் போதெல்லாம் அதை பயன்டுத்திய வங்கிகள் மீது ஆர்பிஐ கோடி கணக்கில் அபராதம் விதித்து வருகிறது.
ரூ.2 கோடி அபராதம்
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் மிகப்பெரிய மோசடி நடைபெற்ற பிறகும் பணப்பரிவர்த்தனை செய்ய மீண்டும் மீண்டும் ஸ்விஃப்ட் மென்பொருள் பயன்படுத்தி மோசடி செய்தது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பஞ்சாப் நேஷ்னல் வங்கிக்கு ரூ.2 கோடி அபராதம் விதிப்பதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ, ஐசிஐசிஐ
பணப்பரிமாற்றத்திற்காக ஸ்விஃப்ட் மென்பொருளை தவறாக பயன்படுத்தியதற்காக பாங்க் ஆஃப் பரோடா, சிட்டி யூனியன் வங்கி, ஹெச்எஸ்பிசி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ வங்கி, மற்றும் யெஸ் வங்கி என பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கு ரூ.1 கோடி முதல் ரூ.4 கோடி வரை ஆர்பிஐ அபராதம் விதித்தது. அதற்கான முறையான உத்தரவை ஆர்பிஐ கடந்த ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி 25ஆம் தேதியன்றும் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பியது.
ரூ.71 கோடி அபராதம்
ஒட்டுமொத்தமாக பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் சேர்ந்து 36 வங்கிகள் மீதும் ஸ்விஃப்ட் மென்பொருளை தவறாக பயன்படுத்திய காரணத்திற்காக ஆர்பிஐ ரூ.71 கோடி அபராதம் விதித்துள்ளது.