டெல்லி: உலகின் மிகப்பெரிய எஃகு உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் லட்சுமி மிட்டல் தன் தம்பி பிரமோத் மிட்டலின் கடனை அடைத்த பெருந்தன்மை அனைத்து தொழில் அதிபர்களுக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரமோத் மிட்டலின் இரு நிறுவனங்களின் கடன் சுமையான ரூ.1600 கோடியை முழுவதும் அடைக்கப்பட்டதால், பிற குற்ற வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.
இக்கட்டான சூழ்நிலையில் எங்களுக்கு ஆதரவளித்து கடன் சுமையில் இருந்து எங்கள் குடும்பத்தை காப்பாற்றி அவருடைய மதிப்பை பன்மடங்கு உயர்த்தி விட்டார் என பிரமோத் மிட்டல் கூறியுள்ளார்.
அது போன வாரம், இது இந்த வாரம்
கடந்த வாரம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி தன்னுடைய தம்பி அனில் அம்பானி, எரிக்ஸன் நிறுவனத்திற்கு தரவேண்டிய 550 கோடி ரூபாய் கடனை சரியான நேரத்தில் அடைத்து தனது தம்பியை காப்பாற்றி அனைத்து தொழில் அதிபர்களையும் ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது அனைவருக்கும் தெரியும்.
லட்சுமி மிட்டல்
முகேஷ் அம்பானி தன் தம்பியை காப்பாற்றிய உணர்ச்சிபூர்வமான சம்பவம் நம் மனதைவிட்டு இன்னும் நீங்காமல் இருக்கும்போது, அடுத்த உணர்ச்சிகரமான காட்சியாக உலகில் எஃகு உற்பத்தியில் தனக்கென தனி இடம்பிடித்திருக்கும் ஏர்சிலர் மிட்டல் நிறுவனத்தின் தலைவர் லட்சமி மிட்டல் தன் இளைய தம்பியான பிரமோத் மிட்டலின் 2210 கோடி ரூபாய் கடனை தக்க சமயத்தில் அடைக்க உதவி செய்துள்ளார்.
91ஆவது இடத்தில் லட்சுமி மிட்டல்
லட்சுமி மிட்டலும் பிரமோத் மிட்டலும் கடந்த 1994ஆம் ஆண்டு வரை ஒன்றாவே எஃகு உற்பத்தி தொழிலை நடத்தி வந்தனர். அதன் பின்னர் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் இருவரும் வேறு வேறு திசையில் பிரிந்துவிட்டனர். லட்சுமி மிட்டல் சிறிது சிறிதாக வளர்ந்து இன்றைக்கு உலகின் எஃகு உற்பத்தியில் தனக்கென தனி சாம்ராஜ்யம் அமைத்துக் கொண்டார். இன்றைக்கு உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் ரூ1 லட்சம் கோடி சொத்து மதிப்புடம் 91ஆவது இடத்தில் உள்ளார்.
பிரமோத் மிட்டல்
அண்ணனுடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக பிரிந்துவந்த பிரமோத் மிட்டல் தானும் அண்ணனைப்போல் எஃகு உற்பத்தி நிறுவனத்தையே தொடங்கினார். குளோபல் ஸ்டீல் ஹோல்டிங்ஸ் லிட்(Global Steel Holdings Ltd) மற்றும் குளோபல் ஸ்டீல் பிலிப்பைன்ஸ் இன்க் (Global Steel Philippines Inc) என்ற இரு நிறுவனங்களை தொடங்கி நடத்திவந்தார்.
ஸ்டேட் ட்ரேடிங் கார்பரேஷன்
பிரமோத் மிட்டல் தன்னுடைய எஃகு உற்பத்தி தொழிலுக்கான மூலப்பொருட்களை மாநில அரசின் ஸ்டேட் ட்ரேடிங் கார்பரேசன் (State Trading Corporation) நிறுவனத்திடம் தொடர்ந்து வாங்கி நடத்தி வந்தார். எஸ்டிசி நிறுவனம் ஏற்றுமதி, இறக்குமதித் தொழில் ஈடுபட்டுள்ள நிறுவனமாகும். கடந்த 2003ஆம் ஆண்டு முதலே பிரமோத் மிட்டல் எஸ்டிசியுடன் வர்த்தகத் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
உலகளாவிய பொருளாதார நெருக்கடி
எஸ்டிசி நிறுவனத்துடன் சுமூகமாக நடந்துவந்த வர்த்தக உறவு, எஃகு தொழிலில் ஏற்பட்ட எதிர்பாராத நெருக்கடியாலும், 2008 முதல் 2010ஆம் ஆண்டு வரையில் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார நெருக்கடியாலும் மேலும் பலத்த நட்டத்தை சந்தித்தது. இதன் காரணமாக அடிமேல் அடிவாங்கிய பிரமோத் மிட்டலின் ஜிஎஸ்பிஐ(GSPI) ஸ்டேட் ட்ரேடிங் கார்பரேஷனுக்கு தரவேண்டிய கடன் கூடிக்கொண்டே போனது.
கடன் தொகை ரூ.1605 கோடியா
பிரமோத் மிட்டல் எஸ்டிசி நிறுவனத்துக்கு தரவேண்டிய கடனும் வட்டியும் கூடிக்கொண்டே செல்ல அமலாக்கத்துறையும், சிபிஐயும் இணைந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி பிரமோத் மிட்டலின் இரண்டு நிறுவனங்களின் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. இடையில் ஏற்பட்ட சமரச பேச்சுவார்த்தியின் படி பிரமோத் மிட்டல் எஸ்டிசிக்கு 1605 கோடி ரூபாயை 13.5 சதவிகித வட்டியுடன் திரும்ப செலுத்த ஒப்புக்கொண்டார்.
நீண்டகால உறவு
கடன் பிரச்சனை குறித்து விளக்கமளித்த பிரமோத் மிட்டல் ஜிஎஸ்ஹெச்எல் மற்றும் ஜிஎஸ்பிஐ நிறுவனங்கள் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வர்த்த உறவில் இருந்து வந்தோம், இடையில் தொழிலில் ஏற்பட்ட சிக்கலாலும், 2008 முதல் 2010ஆம் ஆண்டு வரை உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியாலும் எங்கள் நிறுவனங்கள் கடும் நட்டத்தை சந்திக்க நேர்ந்தது.
கூடிப்போன கடன் சுமை
உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட நட்டத்தால் கடன் சுமை ஏறிக்கொண்டே போனது. இருந்தாலும் எஸ்டிசிக்கு தரவேண்டிய கடனை வட்டியுடன் கண்டிப்பாக திரும்ப செலுத்துவேன் என்று பிரமோத் மிட்டல் தெரிவித்தார்.
கொடையாளி லட்சுமி மிட்டல்
பிரமோத் மிட்டலின் இக்கட்டான நிலையை அறிந்து கொண்ட லட்சுமி மிட்டல் உடனடியாக தம்பியின் கடனை முழுவதும் அடைக்க முன்வந்தார். பிரமோத் மிட்டல் எஸ்டிசிக்கு செலுத்தவேண்டிய கடன் தொகையான 1605 கோடி ரூபாயை வட்டியுடன் நீதிமன்றத்தின் மூலமாக செலுத்திவிட்டார்.
பிரமோத் நெகிழ்ச்சி
தன்னுடைய இக்கட்டான நிலைமையை உணர்ந்த அண்ணன் லட்சுமி மிட்டல் கடன் முழுவதையும் செலுத்திவிட்டதை அறிந்த பிரமோத், இக்கட்டான சூழ்நிலையில் எங்களுக்கு ஆதரவளித்து கடன் சுமையில் இருந்து எங்கள் குடும்பத்தை காப்பாற்றி அவருடைய மதிப்பை பன்மடங்கு உயர்த்தி விட்டார் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.