பீஜிங்: சீன மருத்துவர் ஒருவர் 3000 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள நோயாளிக்கு 5ஜி தொழில்நுட்பத்தின் மூலம் ரிமோட் கண்ட்ரோல் உதவியுடன் மூளை அறுவை சிகிச்சை செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.
ரிமோட் உதவியுடன் மூளை அறுவை சிகிச்சை செய்த நிகழ்வு மருத்துவ துறையில் புதிய சாதனை என மருத்துவ உலகில் பிரமிப்புடன் பார்ககப்படுகிறது.
5ஜி தொழில் நுட்பத்தில் இதற்க முன்பு ஒரு பன்றிக்கு அறுவை சிகிச்சை செய்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
பான்பராக் கறை
இந்தியாவில் மருத்துவத் துறையைப் பொருத்தவரையில் அரசு மருத்துவமனைகளை விட தனியார் மருத்துவமனைகள் தரம் உயர்ந்ததாக உள்ளது. அரசு மருத்துவமனைகள் தரம் என்னவென்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் விதத்தில் தான் உள்ளது. மருத்துவமனைகளில் ஒவ்வொரு சுவர் மூலையிலும் வெற்றிலை போட்டு துப்பிய கறை, பான்பராக் கறை, ஒடிந்த கை இல்லா இருக்கைகள் என இன்னும் எவ்வளவோ அத்தனையும் நாம் எதிர்பார்க்கலாம்.
தரத்திற்கு உத்தரவாதம்
இந்தியாவுக்கு அடுத்த பக்கத்தை புரட்டினால் அண்டை நாடான சீனா. அங்கு கம்யூனிச ஆட்சி நடப்பதால் அங்கு எல்லாமே தரத்திற்கு உத்தரவாதம் தான். உற்பத்தித் துறை முதல் சேவை துறை வரை அத்தனையும் தரம் வாய்ந்தவையாக உள்ளன. தரம் குறைந்தால் தண்டனை அதிகமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.
தொழில்நுட்பத்துறையின் பலம்
தொழில்நுட்பத்துறையில் சீனா நம்மை விட அதிக பலம் வாய்ந்தாகவே உள்ளது. சீனா அதிக திறன் கொண்ட சூப்பர் பவர் கம்ப்யூட்டரை கண்டுபிடித்து 3 வருடங்கள் ஆகிவிட்டது. நாம் அதைப்பற்றி யோசிக்கக் கூட நினைக்கவில்லை. சீனாவுடன் நம்மை ஒப்பிட்டால் தொழில்நுட்பத்தில் நாம் சில வருடங்கள் பின்னோக்கியே இருக்கிறோம் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.
5ஜி மொபைல் ஃபோன் மட்டுமே
தொழில்நுட்பத் துறையைப் பொருத்தவரையில் 5ஜி மொபைல் ஃபோன் மட்டுமே நமக்குத் தெரியும். ஆனால் சீனா 5ஜி தொழில்நுட்பத்தை மருத்துவத் துறையில் பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது,
5ஜி தொழில் நுட்பம்
தொழில்நுட்பத் துறையில் உலகில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் அடுத்த விஷயம் 5ஜி தொழில்நுட்பம் தான். 5ஜி தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் காட்டி வரும் சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மூலம், 5ஜியை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர தீவிரமாக முயற்சித்து வருகின்றன.
பன்றிக்கு அறுவை சிகிச்சை
சில வருடங்களுக்கு முன்னர் சீனாவில் மருத்துவர்கள் 5ஜி தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒரு பன்றிக்கு மட்டுமே அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்தனர். மருத்துவத்துறையை பொருத்தவரை புதிய ஆராய்ச்சியை விலங்குகளையும் எலிகளையும் வைத்து தான் பரிசோதனை செய்வது வழக்கம்.
ரிமோட் மூலம் 5ஜி அறுவை சிகிச்சை
பன்றிக்கு செய்த மருத்துவ அறுவை சிகிச்சை வெற்றி பெற்றதால் தற்போது அதைவிட ஒரு படி மேலே சென்று, சீன மருத்துவர் ஒருவர் சுமார் 3000 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள நோயாளிக்கு வீடியோ மூலம் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
தென் சீனாவில்
பெய்ஜிங் அரசு மருத்துவமனையில் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தென் சீனாவில் உள்ள ஹைனன் பிராந்தியத்தில் இருந்து, லிங் ஜிபேய் என்ற மருத்துவர் அவருக்கு 5ஜி தொழில்நுட்பத்தின் மூலம் ரிமோட் கண்ட்ரால் உதவியுடன் அந்த அறுவை சிகிச்சையை செய்தார்.
வீடியோ கான்ஃபரன்சிங்
மூளையில், பேஸ்மேக்கர் போன்ற ஒரு கருவியை பொருத்தும் இந்த 5ஜி அறுவை சிகிச்சை மிகவும் கடினமானதாக கருதப்படுகிறது. இந்த ஆபரேஷனை, 5ஜி தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் ஹுவெய் நிறுவனத்துடன் சேர்ந்து, லிங் ஜிபேய் செய்துள்ளார். வீடியோ மூலம் தான் செய்த அறுவை சிகிச்சை, நேரில் இருந்து செய்வது போல, எந்த தங்கு தடையும் இல்லாமல், தெளிவாக இருந்ததாக லிங் தெரிவித்துள்ளார்.