டெல்லி: குத்தகைதாரருக்கு வாடகை பணம் தராததால் ஜெட் ஏர்வேஸின் மேலும் 15 விமானங்கள் ஓடுதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை அடுத்து தற்போது சேவையில் உள்ள ஜெட் ஏர்வேஸ்
விமானங்களின் எண்ணிக்கை 29ஆக குறைந்துள்ளது.
கடந்த செவ்வாயன்று தாக்கல் செய்துள்ள ஒழுங்குமுறை விதிகளில் எத்தனை விமானங்கள் தற்போது சேவையில் உள்ளன என்பது பற்றிய விவரங்களை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவிக்கவில்லை.
கடன் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு தீர்த்து வைத்தாலும் விமானங்களை நிறுத்தி வைப்பது தொடர்கதையாகவே உள்ளது.
பைலட்களின் சம்பளப் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் திணறிவரும் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் போயிங் 737 விமான பைலட்களை, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலும் வேண்டுமானால் சம்பளம்
இல்லாத விடுமுறையில் செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
கடன் பிரச்சினையால் தடுமாற்றம்
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஒரு பக்கம் கடன்தாரர்களுக்கு பணம் தரமுடியாமல் திண்டாடி வந்தது. கூடவே நிர்வாகச் செலவுகளும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. நிலைமையை சமாளிக்க
முடியாமல் குத்தகைத் தொகையையும் கடனுக்கான வட்டியையும் தராமல் ஒத்தி வைத்துக்கொண்டே சென்றது. ஜெட் ஏர்வேஸ் பிரச்சனை தீவிரமாவதை தாமதமாக புரிந்துகொண்ட மத்திய அரசு
உடனடியாக தலையிட்டு கடன் பிரச்சனையை முவுக்கு கொண்டுவந்தது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு
மற்றொரு பக்கம் பொறியாளர்கள், பைலட்கள், பொது மேலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் தரமுடியாமல் முழித்து வருகிறது. வங்கிகள் அளித்த கடன் தொகையில்
பைலட்களின் சம்பளத்தில் டிசம்பர் மாத நிலுவையை மட்டுமே ஜெட் எர்வேஸ் நிர்வாகம் தர ஒப்புக்கொண்டது. பாக்கியை வரூம் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் முழுவதும் செலுத்திவிடுவதாக
ஒப்புக்கொண்டது. வேறு வழியில்லா பைலட்களும் அரைமனதாக ஒப்புக்கொண்டனர்.
சம்பளம் இல்லாத விடுமுறை
பைலட்களின் சம்பளப் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் திணறிவரும் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் போயிங் 737 விமான பைலட்களை, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலும் வேண்டுமானால் சம்பளம்
இல்லாத விடுமுறையில் செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
3 நாட்கள் விடுப்பு
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிலைமையை புரிந்துகொண்ட போயிங் B737 விமான பைலட்கள் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் ஏப்ரல் 26ஆம் தேதி வரையில் தொடர்ந்து 5 நாட்கள் வேலை
செய்துவிட்டு 3 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொள்வதாக முடிவெடுத்துள்ளனர். மேலும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலும் ஓய்வில் செல்வதற்கான விண்ணப்பத்தை விமானிகள் குழுவுக்கு
அனுப்பியுள்ளனர் என்று போயிங் B737 விமான பைலட் அமிஷ் வேத் தெரிவித்துள்ளார்.
விமானிகள் விடுமுறை
விமானிகள் விடுமுறையில் செல்வது பற்றி கருத்து தெரிவித்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தகவல் தொடர்பாளர், இது பொதுவாக அனைத்து விமான நிறுவனங்களும் மேற்கொள்ளும் உத்திதான்.
இதனால் பைலட்கள் விடுமுறையில் தங்களின் சொந்த பணிகளை மேற்கொள்ள எளிதாக இருக்கும். பைலட்கள் விரும்பும்போது மீண்டும் பணியில் சேர்ந்துகொள்ள முடியும், என்று கூறினார்.
மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர்
இதற்கிடையில் ஜெட் ஏர்வேஸ் விமானகளின் தேசிய உள்நாட்டு விமானகளின் குழவான நாக் (NAG) மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு எழுதிய கடிதத்தில், தங்களின்
சம்பளப் பிரச்சனையில் தலையிட்டு நிலுவை சம்பளத்தோடு வட்டி மற்றும் அனைத்து சலுகைகளையும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வழங்க உதவி செய்யுமாறு, தெரிவித்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ் பங்குகள்
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கடன் மற்றும் ஊழியர்களின் சம்பளப் பிரச்சனையால் ஜெட் ஏர்வேஸ் பங்குகளில் முதலீடு செய்துள்ள பங்குதாரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 2ஆம்
தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் இதன் விலை 0.39 சதவிகிதம் குறைந்து ரூ.264.90க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
குத்தகை பாக்கியால் நிறுத்தம்
பைலட்களின் பிரச்சனையாலும் குத்தகை பாக்கியாலும் விமானங்களை இயக்க முடியாத விரக்தியில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 80 போயிங் 737 விமானங்கள் உள்பட மொத்தம் 115 விமாங்களை
தன்வசம் வைத்துள்ளது. இதில் பெரும்பாலான விமானங்கள் குத்தகை பாக்கிக்காக நிறுத்தி வைத்துள்ளது. மேலும் 15 விமானங்கள் ஓடுதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை அடுத்து தற்போது
சேவையில் உள்ள ஜெட் ஏர்வேஸ் விமானங்களின் எண்ணிக்கை 29ஆக குறைந்துள்ளது.
நிதி நிலைமை சிக்கல்
கடன், குத்தகை பாக்கி மற்றும் பைலட்களின் சம்பளப் பிரச்சனையை தெளிவாக விளக்கி ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நாங்கள் அனைத்து விமான
குத்தகைதார்களிடமும் நிறுவனத்தின் நிதி நிலைமையை விளக்கியும், அதை சரிப்படுத்துவதற்கு எடுத்துவரும் தீவிர முயற்சிகளைப்பற்றியும் தொடர்ந்து விரிவாக தெரிவித்து வந்தோம்.
குத்தகைதாரர்களும் எங்களின் நிலைமையை புரிந்துகொண்டு எங்களுக்கு பக்கபலமாக இருந்து வந்தன என்று குறிப்பிட்டுள்ளது.
பயணிகள் பாதிப்பு
விமான சேவையை நடத்துவதில் தற்போது ஏற்பட்டுள்ள இடையூறுகளை குறைக்க அனைத்து முயற்சிகளையும் நிர்வாகம் எடுத்து வருவதாகவும், இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஜெட் ஏர்வேஸ்
விமான பயணிகளின் பயணத் திட்டத்திற்கு மாற்று ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சார்பாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.