நீரவ் மோடி மீது பஞ்சாப் நேஷனல் பேங்க் ஊழல் வழக்குகள் பூதாகாரமாக வெடித்துக் கொண்டிருந்த நேரத்தில் 89 கோடி ரூபாய் பணத்தை பரிமாற்றம் செய்திருக்கிறாராம்.
இந்தியாவில் அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை என பல்வேறு விசாரணை அமைப்புகள் நீரவ் மோடி மீது வழக்கு தொடுத்த பின் அடுத்த சில மாதங்களிலேயே சிங்கப்பூரில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு சுமார் 89 கோடி ரூபாயை மாற்றி இருக்கிறாராம்.
பதுக்கள்
நீரவ் மோடி தன் சிங்கப்பூரின் Belvedere Holdings Group Ltd என்கிற நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து சுவிட்சர்லாந்தில் இருக்கும் EFG Bank AG என்கிற வங்கிக் கணக்குக்கு 89 கோடி ரூபாயை இரண்டு முறையாக பணப் பரிமாற்றம் செய்திருக்கிறார்களாம். நீரவ் மோடி சிங்கப்பூரில் இருக்கும் நிறுவனத்தை தன் தங்கை பூர்வி மோடி மூலம் தான் நிர்வகித்து வந்தாராம். ஆகையால் அவரை வைத்தே இந்தப் பணப் பரிமாற்றத்தையும் மேற்கொண்டதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
மற்ற சொத்துக்கள்
அதோடு நீரவ் மோடிக்கு துபாய், ஹாங்காங் போன்ற நாடுகளில் இருக்கும் கடைகள் மற்றும் நிறுவனங்களிலும் நிறைய சொத்துக்களை வைத்திருந்தாராம். இந்த இரண்டு இடங்களில் இருந்து நீரவ் மோடிக்கு இருந்த பல்வேறு சொத்துக்களில் 66 கோடி ரூபாய் மதிப்பிலான வைரங்கள், 6.5 கோடி ரூபாய் ரொக்கப் பணம், 150 பெட்டிகள் நிறைய விலை உயர்ந்த முத்துக்கள், சுமார் 50 கிலோ தங்கம் என பல சொத்துக்களை தன் கூட்டாளிகள் மற்றும் ஊழியர்கள் மூலம் எங்கேயோ பதுக்கி வைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
பறிமுதல்களைத் தடுக்க
இந்தியாவின் அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை என பல அமைப்புகளும் நீரவ் மோடியின் சொத்துக்களை தேடித் தேடி பறிமுதல் செய்து கொண்டிருக்கின்றன. விசாரணை தொடங்குவதற்கு முன்பே இப்படி சொத்துக்களைப் பறிமுதல் செய்வார்கள் என்கிற விஷயம் தெரிந்தே சொத்துக்களை விவரமாக பதுக்கிவிட்டதாகவும் சொல்கிறார்கள் விசாரணை அமைப்பு அதிகாரிகள்.
சாட்சிகள்
நீரவ் மோடியின் நகைக் கடை ஊழியர்களில் ஒருவர் சுபாஷ் பரப். நீரவ் மோடிக்கு மிக வேண்டிய, நெருக்கமான ஊழியர். தற்போது சுபாஷ் எகிப்தில் இருக்கும் ஃபயர் ஸ்டார் இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்தில் இருப்பதை இந்திய விசாரணை அமைப்புகள் கண்டு பிடித்திருக்கிறார்களாம். இந்த ஃபயர் ஸ்டார் நிறுவனமும் நீரவ் மோடியுடையது. திவாலான நிறுவனத்தில் ஊழியர்களுக்கு என்ன வேலை என இந்திய விசாரணை அமைப்புகள் கேள்வி கேட்கிறார்கள். இதனால் நீரவ் மோடி தன் சொத்துக்களைப் பதுக்குவதையும் உறுதி செய்யதிருக்கிறார்கள்.
ரெட் நோட்டிஸ்
ஏற்கனவே நீரவ் மோடிக்கு ஜூலை 2018-ல் இண்டர்போல் ரெட் நோட்டிஸ் கொடுத்தது. அதே சமயத்தில் தான் நீரவ் மோடியின் நெருக்கமான ஊழியர் சுபாஷ் பரப்புக்கும் சேர்த்து ரெட் நோட்டிஸ் கொடுத்து இருக்கிறார்களாம். எனவே நீரவ் மோடியோடு சர்வதேச அளவில் தேடப்பட்டு வருபவர்கள் சுபாஷ் பரப்பும் ஒருவர்.
சுபாஷ் முக்கியம்
நீரவ் மோடியின் ஆறு ஹாங்காங் நிறுவனங்கள் தான் பஞ்சாப் நேஷனல் பேங்கில் Letter Of Undertaking மூலம் 8200 கோடி ரூபாயை வாங்கினார்கள். அதற்கு முக்கிய நபராக இருந்த பணத்தை கையாண்டது, நிறுவனத்தை செயல்படுத்தியது எல்லாமே இந்த சுபாஷ் பரப் தானாம்.
ஊழல் பாக்கி
கடந்த 2011 முதல் 2018 வரையான ஏழு ஆண்டுகளில், நீரவ் மோடியின் நிறுவனங்களுக்கு சுமார் 24,000 கோடி ரூபாய் மதிப்பிலான Letter Of Undertaking-களை பஞ்சாப் நேஷனல் வங்கி கொடுத்திருக்கிறது. அதில் மோசடி செய்ததாக இன்னும் நிலுவையில் சுமார் 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான Letter Of Undertaking-கள் கிடப்பில் இருக்கின்றதாம்.
நீரவ் மோடிக்கு தொடர்பு
மத்திய புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கத் துறையின் கூற்றுக்கள் படி நீரவ் மோடிக்கு ஏழு வெளிநாடுகளில் பிசினஸ் விசா மற்றும் தங்கி இருப்பதற்கான ரெசிடென்ஸி விசா இன்னும் காலாவதி ஆகாமல் இருக்கிறதாம். கனடா நாட்டில் 2019 வரைக்கான பிசினஸ் விசா, அமெரிக்காவில் 2020 வரைக்கான விசா, இங்கிலாந்தில் 2025 வரைக்குமான விசா, சிங்கப்பூர், ஹாங்காங், துபாய் போன்ற நாடுகளில் வேலை பார்ப்பதற்கும், தங்கி இருப்பதற்குமான விசா அடுத்த சில ஆண்டுகளுக்கு இருக்கிறதாம். எனவே நீரவ் மோடிக்கு ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் சொத்துக்கள் இருக்க வாய்ப்பு அதிகம் என்றே இந்தைய அமைப்புகள் கணித்திருக்கிறார்களாம்.