டெல்லி: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கடன் அளித்த முதன்மை வங்கியான எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் கூட்டமைப்பு ஜெட் எர்வேஸ் நிறுவனத்தின் பங்கு விற்பனையை இன்று தொடங்கியுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கடன் கொடுத்தவர்களின் பட்டியலில் எஸ்பிஐ வங்கி முதலிடத்தில் உள்ளது. எஸ்பிஐ வங்கி மட்டும் ரூ.8000 கோடிக்கு மேல் உள்ளதாக தெரிகிறது.
ஜெட் ஏர்வேஸ் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து கடன் தொகையை சரிக்கட்ட முடியவில்லை என்றால் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
பாதாளத்தை நோக்கி
நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே செல்லும் கடன் மற்றும் கடனுக்கான வட்டி, அதனால் ஏற்படும் நெருக்கடி, குத்தகை பாக்கி, ஊழியர்களின் சம்பளப் பிரச்சனை, விமானங்களுக்கு எரிபொருள் வாங்கிய செலவு, கூடிக்கொண்டே செல்லும் நிர்வாகச் செலவுகள் இவை எல்லாம் சேர்ந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை படு பாதாளத்தை நோக்கி வேக வேகமாக இழுத்துச் சென்றன.
எஸ்பிஐ மட்டுமே ரூ.8000 கோடி
கடன் சுமையை குறைக்க மத்திய அரசு தலையிட்டு வங்கிகளை கடன் கொடுக்க அழுத்தம் கொடுத்தது. ஆனால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு ரூ.8000 கோடிக்கு மேல் கடனை வாரி வழங்கிய எஸ்பிஐ வங்கியும் மற்ற வங்கிகளும் தலைவர் பதவியில் இருந்து நரேஷ் கோயல் பதவி விலகினால் மட்டுமே மேற்கொண்டு கடன் தர முடியும் என்று நிபந்தனை விதித்தது.
26 சதவிகித பங்குகள்
கடன் கொடுத்தவர்கள் கழுத்தை பிடிக்க மூலையில் மாட்டிக்கொண்ட எலி போல் தப்பிக்க வழி தெரியாத தலைவர் நரேஷ் கோயல் பதவி விலகினார். பதவி விலகியதோடு தன் வசம் இருந்த 51 சதவிகித பங்குகளில் 26 சதவிகித பங்குகளை கடன் வழங்கிய வங்கிகளுக்கு தாரை வார்த்துவிட்டார்.
1500 கோடி முதலீடு
நரேஷ் கோயல் தன்னிடம் இருந்த பெரும்பான்மை பங்குகளை கடன் வழங்கிய வங்கிகளுக்கு கொடுத்துவிட்டதை அடுத்து பெரும்பான்மை பெற்றுவிட்ட வங்கிகள் கூட்டமைப்பு அந்நிறுவனத்தில், 1,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று எஸ்.பி.ஐ தலைவர் ரஜ்னிஷ் குமார் டில்லியில் மத்திய விமான போக்குவரத்து மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகளை சந்தித்து பேசினார். எஸ்பிஐ தலைவர், விமான போக்குவரத்து மற்றும் நிதியமைச்சக அகிகாரிகளின் கூட்டு சந்திப்பை அடுத்து, வங்கிகள் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது.
ஜெட் ஏர்வேஸ் விற்பனைக்கு
பிரதிநிதிகளின் கூட்டத்தின் முடிவில், வங்கிகள் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டது. அதில் ஜெட் ஏர்வேஸ் பங்கு விற்பனை ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி முடிவடையும். இறுதியில் பங்குகளின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். அதில் வங்கி கூட்டமைப்பு நிர்ணயித்துள்ள மதிப்பீட்டுத் தொகைக்கு மாறாக விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில் மாற்றுத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பின்னர் பரிசீலிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
வங்கிகள் கூட்டமைப்பு தன் வசம் உள்ள பங்குகளை விற்பதற்கு முடிவெடுத்ததை அடுத்து ஜெட் ஏர்வேஸ் பங்கு விற்பனை இன்று தொடங்கி வரும் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறுகிறது.
ஃப்ளைட்டுக்கு பெட்ரோல் கிடையாது
தொடக்கத்தில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு என 124 விமான சேவைகளை இயக்கி வந்தது. நிதி நெருக்கடி மற்றும் எரிபொருள் வாங்கியதற்கான நிலுவை பாக்கி காரணமாக தற்போது 24 சேவைகளாக சுருங்கி விட்டது. இந்நிலையில் விமான எரிபொருள் நிலுவை காரணமாக, பெட்ரோல் வழங்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் திடீரென மறுத்து விட்டது. எனினும் மாலை 5 மணி அளவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மீண்டும் பெட்ரோல் சப்ளை செய்யத் துவங்கியது. இதனால் ஜெட் ஏர்வேஸ் நெருக்கடியில் இருந்து மீண்டது.
பிரச்சனை ஏதும் இல்லை
முன்னதாக சிவில் விமான போக்குவரத்துத் துறை செயலாளர் பிரதீப் சிங் கரோலா கூறுகையில், தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 26 விமானங்களை இயக்கி வருகிறது. ஆகவே இனிமேல் சர்வதேச விமான சேவையை தொடர்வதற்கு பிரச்சனை ஏதும் இல்லை என்று கூறியுள்ளார்.