மும்பை: ஐடிபிஐ வங்கியின் பங்குகளில் முதலீடு செய்துள்ள எல்ஐசி அதன் பங்குகளை குறைப்பதற்கு 10 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
ஐஆர்டிஏ அளித்த சிறப்பு அனுமதியின் பேரிலேயே பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்டுள்ள பொதுத்துறை நிறுவன பங்குகளில் எல்ஐசி முதலீடு செய்து வருகிறது.
முன்னுரிமை அடிப்படையில் அளிக்கப்பட்ட அனுமதியின் பேரில் 51 சதவிகித ஐடிபிஐ வங்கியின் பங்குகளை 15 சதவிகிதமாக குறைக்கவேண்டும் என்று ஐஆர்டி அவ்வப்போது வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
15.60 லட்சம் கோடி ரூபாய்
இந்தியாவின் மிகப்பெரிய அரசுத்துறை காப்பீடு கழகம் மற்றும் முதலீட்டு நிறுவனமான எல்ஐசி 1956ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்றைக்கு இதன் சொத்து மதிப்பு சுமார் 15.60 லட்சம் கோடி ரூபாயாகும். நாட்டின் மிகப்பெரிய நம்பகமான மிகவும் பாதுகாப்பான காப்பீட்டு நிறுவனமாகவும் உள்ளது.
பங்குச் சந்தையின் ஆபத்பாந்தவன்
எல்ஐசி கழகம் எப்படி தன்னுடைய சந்தாதாரர்களுக்கு ஆபத்துக் காலத்தில் உதவும் நண்பனாக உள்ளதோ, அதே போல் இந்தியப் பங்குச் சந்தைகள் எப்போதெல்லாம் ஆட்டம் கண்டு வீழ்ச்சியை சந்திக்கிறதோ அப்போதேல்லாம் உடனடியாக எல்ஐசியை கூப்பிட்டு பங்குச் சந்தையில் முதலீடு செய்து இந்தியப் பங்குச் சந்தையை காப்பாற்றும் ஆபத்பாந்தவனாக எல்ஐசி உள்ளது.
மக்கள் நலத்திட்டத்திற்கு உதவி
பங்குச் சந்தையில் முதலீடு செய்வதோடு நில்லாமல் நாட்டின் உள்கட்டமைப்புப் பணிகள், ரயில்வே, சாலைப் போக்குவரத்து, குடிநீர், நீர்ப்பாசனம், மின்சாரம், தகவல் தொடர்பு, சுகாதாரம் போன்ற மத்திய மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டத்திற்கு உதவிடும் வகையில் முதலீடு செய்தும் மக்கள் பணியாற்றிவருகிறது.
சிறப்பு அனுமதி
எல்ஐசி தன்னிடம் உள்ள பணத்தை அவ்வப்போது ஐஆர்டிஏவின் அனுமதியின் பேரில் அவ்வப்போது இந்தியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பொதுத்துறை நிறுவன பங்குகளை வாங்கி லாபம் சம்பாதித்து வருகிறது. அதுபோலவே, ஐஆர்டிஏ வின் சிறப்பு அனுமதியின் பேரில் அரசின் பொதுத்துறை வங்கியான ஐடிபிஐ வங்கியின் பங்குகளில் அவ்வப்போது முதலீடு செய்து வருகிறது.
ஐடிபிஐயில் 51 சதவிகிதம்
ஐடிபிஐ வங்கியில் அவ்வப்போது சிறிது சிறிதாக முதலீடு செய்த வந்த எல்ஐசி கடந்த ஜனவரி மாதத்தோடு 51 சதவிகித பங்குகளை வாங்கி முடித்தது. பொதுவாக மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் தலைவராக குடியரசுத் தலைவரே இருக்க வேண்டும் என்பது கண்டிப்பான விதியாகும். ஐடிபிஐ வங்கியின் பெரும்பகுதி பங்குகளை எல்ஐசி வாங்கியதால், அதை படிப்படியாக 15 சதவிகிதத்திற்கு கீழ் குறைக்க வேண்டும் என்று ஐஆர்டிஏ அவ்வப்போது வலியுறுத்தி வந்தது.
சந்தையை பாதிக்கும் முடிவு
மத்திய அரசின் விதிமுறைகளின் படி ஐடிபிஐ வங்கியிலும் எல்ஐசி தனது பங்கு மூலதனத்தை படிப்படியாக 15 சதவிகித அளவிற்கு குறைக்கவேண்டியுள்ளது. இதற்காக அந்த எல்ஐசிக்கு போதிய கால அவகாசம் வழங்கப்படும் என ஐஆர்டிஏ கூறியிருந்தது. ஆனால ஐஆர்டிஏ காலக்கெடு விதித்தால் அது பங்குச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தும் என ஐஆர்டிஏவின் ஆயுட்கால உறுப்பினர் நிலேஷ் சாத்தி கருத்து தெரிவித்தார்.
15 சதவிகிமாக குறையுமா
அதன் பிறகு ஐடிபிஐ வங்கியில் பங்கு மூலதனத்தை 15 சதவீதமாக குறைப்பது குறித்து எல்.ஐ.சி. நிறுவனத்திடம் ஐஆர்டிஏ கருத்துக் கேட்டுள்ளதாக தகவல் வெளியானது. காலக்கெடு குறித்து நாங்களே முடிவு செய்வோம் என்றும், இதனை எல்.ஐ.சி.யின் முடிவுக்கு விட மாட்டோம் என்றும் ஐஆர்டிஏ தலைவர் சுபாஷ் சந்திர குன்ட்டியா (Subash Chandra Khuntia) அப்போது கூறினார்.
10 ஆண்டுகள் தேவை
ஐஆர்டிஏ தலைவர் இப்படி சொன்னாலும் ஐடிபிஐ வங்கியில் தனது பங்கு மூலதனத்தை 15 சதவிகிதமாக குறைப்பதற்கு எல்ஐசிக்கு 9 முதல் 10 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐடிபிஐ வங்கியின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் எல்ஐசிக்கு போதிய கால அவகாசம் தர வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்று கூறப்படுகிறது.
வாராக்கடன் அதிகரிப்பு
ஐடிபிஐ வங்கிக்கு மொத்த வாராக்கடன் 31.78 சதவீதமாக உள்ளதை அடுத்து ரிசர்வ் வங்கியின் உடனடி சீர்திருத்த நடவடிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதன் 51 சதவிகித பங்குகளை எல்ஐசி வாங்கியது. இந்த வங்கிக்கு 1.5 கோடி வாடிக்கையாளர்கள், 18 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.