டெல்லி: சில மணி நேரங்களுக்கு முன் தான் பாஜக தன் 2019 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை வெளியிட்டது. அந்த அறிக்கையைப் படிக்கும் போதே நமக்கு சில கேள்விகள் எழுகிறது.
பாஜகவின் தேர்தல் வாக்குறுதி அறிக்கைகளை சங்கல்ப பத்திரம் என்றே பேசித் தொடங்கினார்கள் பாஜக தலைவர்கள். அவ்வளவு ஏன் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிப் புத்தகத்திலேயே சங்கல்ப பத்திரம் என்று தான் அச்சிட்டிருக்கிறார்கள்.
சங்கல்பம் என்றால் சத்தியம் என பொருள் எடுத்துக் கொள்ளலாமாம். அதை அப்படியே போட்டிருக்கலாமே. அதை ஏன் சமஸ்கிருதத்தில் போட்டார்கள் என்பது புரிகிறது தானே..! சரி நம் விஷயத்துக்கு வருவோம்..! என்ன சொல்லி இருக்கிறார்கள் தேர்தல் வாக்குறுதி புத்தகத்தில்..?
700 லட்சம் கோடி ரூபாய்
இப்போது இந்தியா ஒரு 2 ட்ரில்லியன் டாலர் நிறுவனம். வரும் 2025-க்குள் இந்தியப் பொருளாதாரத்தை 5 ட்ரில்லையன் டாலர் பொருலாதாரமாகவும், 2032-க்குள் 10 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றப் போகிறார்களாம். ஆக இந்த வருடம் முதல் ஒவ்வொரு வருடம் 0.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் வளர்ந்தால் தான் மோடிஜியின் கணக்கு டாலி ஆகும். சாத்தியமா..?
கணக்கீடு
2019-ல் 2 ட்ரில்லியன் டாலர். 2032-ல் 10 ட்ரில்லியன் டாலர். என்றால் ஒவ்வொரு ஆண்டும் இந்தியப் பொருளாதாரம் சுமார் 14 சதவிகிதத்துக்கு குறைவில்லாமல் வளர வேண்டும். அப்போது தான் 2032-வது ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 10 ட்ரில்லியன் டாலராக இருக்கும். இதுவரை இந்திய சரித்திரத்தில் ஒரு சில ஆண்டுகள் தான் 10 சதவிகித வளர்ச்சியைக் கண்டிருக்கிறோம். இதில் 15% வளர்ச்சி எல்லாம் சாத்தியமா மக்களே..?
88 லட்சம் பேருக்கு பதில்
நேர்மையாக வரி செலுத்துபவர்களுக்கு சன்மானங்கள் வழங்கப்படும், வரிகள் குறைக்கப்படும், வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வோம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் பணமதிப்பிழப்பு என்கிற ஒரு விஷயத்தால் மட்டும் ஏற்கனவே வரி செலுத்திக் கொண்டிருந்த அல்லது வரி படிவம் தாக்கல் செய்து கொண்டிருந்த 88 லட்சம் பேர் 2016 - 17 நிதி ஆண்டுக்கு வரி தாக்கல் செய்யவில்லை. காரணம் வேலை இழப்பு. இதை எப்படி சாத்தியப்படுத்தப் போகிறார்கள்...?
அவசரம்
ஜிஎஸ்டியை எளிமைப்படுத்துவோம் என்கிறார்கள்... மக்கள் கேட்கும் ஒரே கேள்வி எப்படி..? இன்னும் எத்தனை முறை ஜிஎஸ்டி என்கிற குட்டையை குழப்பிக் கொண்டே இருப்பார்கள். பிசினஸ் செய்பவர்கள் எல்லாம் என்ன தான் செய்வார்கள். எப்போது பிடித்தம் செய்து வைத்திருக்கும் ஜிஎஸ்டி தொகைகளை திருப்பிக் கொடுப்பார்கள்..? இதற்கு இன்னும் பதில் இல்லை. இதில் ஜிஎஸ்டி வரி முறையை எளிமைப்படுத்தப் போகிறார்களாம். இதை அமல்படுத்தும் முன்பே யோசித்திருக்கலாமே..? அன்றே பலரும் அவசரப்பட வேண்டாம் எனச் சொன்னார்களே..? என்ன ஆனது..?
ரியல் எஸ்டேட்
2024-க்குள் 100 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவின் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் துறையில் முதலீடு செய்ய வைப்பார்களாம். வரவேற்கத் தக்கது. ஆனால் கட்டும் வீட்டை யாருக்கு விற்பதாக உத்தேசம். பொருளாதார நிலையற்ற தன்மையால் யாரிடமும் பணம் இல்லை, ஏற்கனவே இந்தியாவில் சுமார் 4 கோடி பேருக்கு வேலை இல்லை. அதனால் சுமார் 15 கோடி பேருக்கு அன்றாட தேவைகளே எட்டாக் கனிகளாக இருக்கின்றன. இப்படி அன்றாடத் தேவைகளான உணவுக்கே வழி இல்லாத போது ரியல் எஸ்டேட் துறை எப்படி வளரும்..? யாரிடம் வீடுகளை விற்பீர்கள்..? அம்பானிகளிடமா..?
ரஃபேல் ஊழல்
மேக் இன் இந்தியா திட்டத்தை பாதுகாப்பு துறைக்கும் கொண்டு வரப் போகிறார்களாம். எப்படி முன் அனுபவமே இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரஃபேல் வியாபாரத்தில் பங்கு கொடுத்தது போலவா..? இந்தியாவில் ஹெச்.ஏ.எல் விமான உற்பத்தி நிறுவனத்தை எதற்கு வைத்திருக்கிறார்கள்..? இதுவரை தேஜாஸ் விமான தயாரிப்பு தவிர வேறு எதாவது உருப்படியாக தயாரித்துக் கொண்டிருக்கிறதா என்ன..?
மற்றவைகள்
60 வயதுக்கு மேற்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஒரு பென்ஷன் திட்டம் கொண்டு வருவோம். இதனால் வயதான விவசாயிகளுக்கு ஒரு சமூக பாதுகாப்பு கிடைக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள். மிக நல்ல விஷயம் நிதி எங்கே..? வரும் 2022-க்குள் குடிசை வீடுகளில் வாழ்பவர்கள் அல்லது நல்ல வீடுகளில் வசிக்க முடியாதவர்களுக்கு ஒரு நல்ல வீட்டை கட்டிக் கொடுப்போம். 2022-க்குள் அனைத்து கிராம பஞ்சாயத்துக்களும் ஒரு அதிவேக இணைய நெட்வொர்க் உடன் இணைக்கப்படுவதை உறுதி செய்வோம். 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாயில் தண்ணீர் கொடுப்போம். படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. நடந்தால் இன்னும் நன்றாக இருக்கும். நடக்குமா..? என்பது தான் சந்தேகம்.