மும்பை: இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி 2019ஆம் நிதியாண்டில் எதிர்பார்த்த வளர்ச்சியை எட்ட முடியாமல் தவிக்கும்போது நடப்பு 2020ஆம் நிதியாண்டிலும் அதே வளர்ச்சியை அல்லது அதைவிட குறைவாகவே இருக்கலாம் என்று நாஸ்காம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சீராக இல்லாத காரணத்தினால் தகவல் தொழில்நுட்பத்துறையின் ஏற்றுமதியும் சரிவையே கண்டுவருகிறது. மேலும் இந்திய தகவல் தொழில்நுட்பத்துறைக்கு எதிராக அமெரிக்காவின் நிலைப்பாடும் இந்திய தகவல் தொழில்நுட்பத்துறைக்கு கெட்டகாலமாகவே பார்க்கப்படுகிறது.
மேலே எறியப்பட்ட எந்த ஒரு பொருளும் கண்டிப்பாக கீழே வந்து தான் ஆகவேண்டும். இது தான் இயற்கை மற்றும் இயற்பியல் விதியும் கூட. இது அனைத்துக்கும் பொருந்தும். அதுதான் தற்போது இந்திய தகவல் தொழில்நுட்பத்துறைக்கும் நடந்து வருகிறது.
பறக்க ஆரம்பித்த ஐடி துறை
கடந்த 1990ஆம் ஆண்டு மத்திய காலங்களில் முதல் படியில் கால் வைக்க ஆரம்பித்த இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் மேல் எழும்பு கட்டி பறக்க ஆரம்பித்தன. இடையில் சிறு சிறு சலசலப்புகள் இருந்தாலும் நிற்காமல் பறக்க ஆரம்பித்தன.
அந்நியச் செலாவணி வருவாய்
இந்தியாவின் அந்நியச் செலாவணி வருவாயில் பாதிக்கு மேல் வருமானத்தை தருபவை தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களே ஆகும். இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறையில் முதல் மூன்று இடங்களில் உள்ள டாடா கன்சல்டன்ஸி, இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் தகவல் தொழிநுட்பத்துறையில் ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணி வருவாயை இந்தியாவுக்க கொண்டு வருவதில் முன்னணியில் உள்ளன. இன்றும் இந்த நிலை தொடர்கிறது.
பங்குச்சந்தைகள் சரிவு
இந்தியப் பங்குச் சந்தைகளின் தினசரி வர்த்தகமும் தகவல் தொழில்நுட்பத்துறையை சார்ந்தே உள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறை சரிவை சந்தித்தால் பங்குச்சந்தைகளும் சரிவையே காண்கின்றன. இது கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் நிகழ்வாகும்.
நிதிநிலை அறிக்கை
தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணியில் உள்ள டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ நிறுவனங்களின் காலாண்டு மற்றும் இறுதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் படியே சந்தையின் போக்கும் இருக்கும். கூடவே வரும் நிதியாண்டுக்கான உத்தேச மதிப்பீடையும் தனது அறிக்கையில் தெரிவித்துவிடும். இது ஆண்டு தோறும் நடைபெறுவது வாடிக்கையாகும்.
வளர்ச்சி விகிதம் எப்படி
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையை வழிநடத்தும் நாஸ்காம் (NASSCOM) அமைப்பும் ஆண்டுதோறும் தகவல் தொழில்நட்பத்துறையின் செயல்பாடுகள், நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் லாபம், அடுத்து வரும் ஆண்டில் அதன் வளர்ச்சி விகிதம் எப்படி இருக்கும் என்பதையும் முன்கூட்டியே திட்டமிட்டு அறிக்கையாக வெளியிடும்.
நேர்மாறாக மாறிய வளர்ச்சி விகிதம்
நாஸ்காம் தனது திட்ட மதிப்பீட்டு அறிக்கையில் கடந்த 2019ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சி 9.2 சதவிகிதமாக இருக்கக்கூடும் என்றும், கூடவே முந்தைய நிதியாண்டான 2018ஆம் ஆண்டைக்காட்டிலும் 1.4 சதவிகிதம் கூடுதலாகவே இருக்கலாம் என்று மதிப்பிட்டிருந்தது. ஆனால் உண்மையில் தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகள் அதற்கு நேர்மாறாக உள்ளன.
ஐடி நிறுவனங்களின் உண்மை நிலை
நாஸ்காம் மதிப்பீட்டைக் காட்டிலும் உண்மையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளியிட்ட 2019ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் நடப்பு நிதியாண்டின் 2020ஆம் வழிகாட்டு (Guideline Report) அறிக்கையும் சரிவை நோக்கி செல்வதாக காட்டுகின்றன. கடந்த நிதியாண்டைக்காட்டிலும் நடப்பு நிதியாண்டில் வருவாய் குறைவாகவோ அல்லது முந்தைய ஆண்டைப்போலவே இருக்கக்கூடும் என்று அறிவித்துள்ளன.
வருவாய் சரிவு
அக்சென்டர் நிறுவனம் கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டின் வருவாய் வளர்ச்சி 11 சதவிகிதமாக காட்டி இருந்தது. அதுவே நடப்பு நிதியாண்டில் அதாவது 2018ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி வரையிலான 2 காலாண்டுகளில் முறையே 9.5 மற்றும் 9 சதவிகிதமாக இருக்கக்கூடும் என்றும், அதுவே அடுத்து வரும் மார்ச் முதல் மே வரையில் 8.5 சதவிகிதமாகவும், ஜூன் முதல் ஆகஸ்டு வரையிலான 4ஆவது காலாண்டில் 7 சதவிகிதமாக சரியும் என்றும் தன்னுடைய வழிகாட்டு அறிக்கையில் கூறியுள்ளது.
வருவாய் குறைவு
பிரபல பங்குச் சந்தை தரகு நிறுவனமான நமுரா ஃபைனான்சியல் அட்வைசரி அண்டு செக்யூரிட்டிஸ் (இந்தியா) பி. லிட் நிறுவனம், கடந்த மார்ச் 29ஆம் தேதியன்று தனது அறிக்கையை அனுப்பி உள்ளது. அதில் அந்நிறுவனத்தின் அடுத்த நிதியாண்டின் வருவாய் வரும் ஆண்டில் ஒரளவு எதிர்பார்த்த அளவில் இருக்கக்கூடும் என்றும் ஆனால் முந்தைய ஆண்டைக்காட்டிலும் குறைவாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
நிதிச்சிக்கல்கள்
அக்சென்டர் நிறுவத்தின் வங்கிகள், நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டு பிரிவுகளின் வருவாய் தொடர்ந்து சரிவையே கண்டுவருகிறது. முந்தைய ஆண்டை விட 2019ஆம் ஆண்டின் பிப்ரவரி காலாண்டில் 2 சதவிகித வருவாயை மட்டுமே கண்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டின் இதே பருவத்தில் 7 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய காரணமாக ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் கடுமையான நிதிச் சிக்கல்களே காரணம் என்று நமுரா கூறியுள்ளது.
சரிவுக்குக் காரணம் என்ன
மற்றொரு சந்தை ஆய்வு நிறுவனமான கோட்டக் இன்ஸ்ட்டிடியூசன் ஈக்விட்டியும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வருவாய் சிவப்பு நிறத்திலேயே அதாவது இறங்கு முகத்திலேயே இருக்கும் என்ற தெரிவித்துள்ளது. பெரும்பாலான தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் அனைத்துமே கடந்த நிதியாண்டைப் (2019) போலவே நடப்பு நிதியாண்டிலும் (2020) கிட்டத்தட்ட அதே அளவிலான வருவாய் அல்லது அதை விட குறைவாகவோ ஈட்டும். அது அந்த நிறுவனங்கள் பெறும் வெளிநாட்டு ஆர்டர்களின் அளவு மற்றும் மதிப்பைப் பொருத்து அமையும் என்றும் தெரிவித்துள்ளது.
டிசிஎஸ் சீரான வளர்ச்சி
அக்சென்டர் நிறுவனத்தின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளில் சரிவை சந்தித்து வந்தாலும் முந்தைய ஆண்டுகளில் 10 முதல் 11 சதவிகித வளர்ச்சியை கண்டுள்ளது உண்மை. இது ஒருபுறம் இருக்க, தகவல் தொழில்நுட்பத் துறையின் முதல் இடத்திலுள்ள டிசிஎஸ் நிறுவனம் தொடர்ந்து சீரான வளர்ச்சியை கண்டுவருகிறது.
டிசிஎஸ் vs இன்போசிஸ்
டிசிஎஸ் நிறுவனத்திற்கு போட்டியாக உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சியானது கடந்த 19ஆம் நிதி ஆண்டில் ஓரளவு மத்திமமாக இருந்தாலும் நடப்பு 2020ஆம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விசா கெடுபிடிகள்
தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சியின் மற்றொரு அம்சமாக டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலையில்லாமல் இருந்து வருகிறது. இது இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் லாபத்தை பாதிக்கும் அம்சமாக இருக்கக்கூடும். மேலும் சமீப காலமாக இந்திய தகவல் தொழில்நுட்பத்துறைக்கு எதிராக அமெரிக்க அரசு எடுத்து வரும் விசா கெடுபிடுகள் போன்றவற்றால் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்நாட்டிலேயே தன்னுடைய வருவாயை பெருக்க அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. இது வரும் ஆண்டுகளில் வருவாயை அதிகரிக்கும் முயற்சியாகும் என்று கோட்டக் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உச்சத்திற்கு சென்று வீழும்
ஒட்டுமொத்தமாக பார்த்தால் பெரும்பாலான தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் எல்லாம் சந்தையில் 25 முதல் 30 சதவிகிதம் குறைவான விலையிலேயே விற்பனையாகி வருகின்றன என்று ஜேஎம் ஃபைனான்சியல் இன்ஸ்ட்டிடியூசனல் செக்யூரிட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மொத்தத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சி விகித சரிவானது படிப்படியாக குறைந்தால் நடப்பு 2019-20ஆம் ஆண்டின் இறுதி வாக்கில் இத்துறையின் பங்குகள் எல்லாம் மீண்டும் உச்சத்திற்கு செல்லும். மறுபடியும் மேல் இருந்து கீழ் நோக்கித்தான். இதுதான் இயற்கையின் தத்துவம்.