டெல்லி: தற்போது மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்நாத் சிங் ஒரு அரசியல் வெடி குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார். "ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் போடுவோம்" என பாஜக சொல்லவில்லை என அந்தர் பல்டி அடித்திருக்கிறார்.
கறுப்புப் பணத்தை மீட்போம் எனத் தான் சொன்னோம், தகுந்த நடவடிக்கைகளை எடுப்போம் எனத் தான் சொன்னோம் எனச் சொல்லி பரபரப்பு கிளப்பி இருக்கிறார்.
அதோடு சொன்ன படி கறுப்புப் பணத்துக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. எங்கள் பாஜக அரசு தான் கறுப்புப் பணம் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுப் படையை (SIT - Special Investigation Team) அமைத்தது எனவும் சொல்லி இருக்கிறார்.
சத்தியப் பத்திரம்
பாரதிய ஜனதா கட்சியின் சத்தியப் பத்திரங்கள் (தேர்தல் வாக்குறுதிகள்) எல்லாம் பொய், ஏற்கெனவே சொன்னவைகளை எல்லாம் செய்யவே இல்லை. குறிப்பாக ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன் எனச் சொன்னது எல்லாம் இன்னும் செய்யவில்லை என காங்கிரஸ் தங்கள் பிரச்சாரங்களில் வாட்டி வதக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மறுப்பு
அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில் தான் ராஜ்நாத்சிங் இந்த ஸ்டேட்மெட்களை விட்டிருக்கிறார். அதோடு 2014 காலங்களில் இந்தியாவில் இருந்து திருடப்பட்ட கறுப்புப் பணம் மீண்டும் இந்தியாவுக்கே கொண்டு வர வேண்டும் என்பது முக்கியப் பிரச்னைகளில் ஒன்றாக இருந்தது எனவும் சொல்லி இருக்கிறார்.
சுட்டிக் காட்டு
ஆனால் இந்த வருட 2019 மக்களவைத் தேர்தலுக்காக பாஜக வெளியிட்டிருக்கும் சத்தியப் பத்திரத்தில் (தேர்தல் வாக்குறுதிகளில்) இணைப் பொருளாதாரத்தை முடக்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறது. ஆக இணைப் பொருளாதாரம் இருக்கிறது என்றால் கறுப்புப் பணம் இருக்கிறது என்று தானே அர்த்தம். அதைப் பற்றி எந்த பாஜக பெரும் தலைகளும், தொண்டர்களும் ஏன் பாஜக சார்பில் எவரும் பேசவில்லை என்பதையும் எதிர்கட்சிகள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
சொன்னதைச் செய்யவில்லை
குறிப்பாக காங்கிரஸ் இந்த விஷயத்தைக் குறிப்பிட்டு "ஏற்கனவே மோடி அரசு வெளிநாடுகளில் முறைகேடாக பதுக்கி இருக்கும் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வரவில்லை. இப்போது மீண்டு ஆட்சிக்கு வந்தால் கொண்டு வந்து விடுவார்களாம்"என பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் பொறுப்பல்ல
மேலும் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறைகள் பல்வேறு அரசியல் தலைவர்கள் வீட்டில் சோதனை நடத்துவது குறித்தும் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு "அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறை இரண்டுமே தனி தன்னாட்சி அமைப்புகள். இந்த அமைப்புகளுக்கு தேர்தல் ஆணையத்தின் தேர்தல் விதிமுறைகள் பொருந்தாது. அவர்களுக்கு கிடைத்திருக்கும் விவரங்கள் அடிப்படையில் அவர்கள் செயல்படுகிறார்கள். அதற்கு அரசை பொறுப்பாக்க முடியாது" எனச் சொல்லி மறுத்திருக்கிறார் ராஜ்நாத் சிங்.