கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தை ஸ்டெர்லைட் புகழ் வேதாந்தா நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் தான் இயங்கி வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் கெய்ர்ன் நிறுவனத்தில் இருந்து மூன்று முக்கிய அதிகாரிகள் தங்கள் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார்கள்.
கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி (CEO) சுதிர் மாதுர் மற்றும் முதன்மை நிதி அதிகாரி (CFO) பங்கஜ் கால்ரா ஆகிய இரண்டு மிகப் பெரிய நிர்வாகிகளும் கடந்த வாரத்தில் ராஜினாமா செய்திருக்கிறார்களாம்.
2011-ம் ஆண்டில் இருந்து வேதாந்தா நிறுவனம் கெய்ர்ன் நிறுவனத்தை கையகப்படுத்தத் தொடங்கினார்கள். அதன் பிறகு மட்டும் கெய்ர்ன் நிறுவனத்தில் இருந்து மாதுர் உட்பட நான்கு முதன்மைச் செயல் அதிகாரிகள் தங்கள் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார்கள்.
2012-ம் ஆண்டு அப்போதைய கெய்ர்ன் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ராகுல் திர் ராஜினாமா செய்தார். அவருக்குப் பின் மே 2014-ல் இளங்கோ மற்றும் ஜூன் 2016-ல் மயங் அஷார் என மூன்று பேர் ராஜினாமா செய்திருக்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன் தான் கெய்ர்ன் நிறுவனத்தின் முதன்மை உள் தணிக்கை மற்றும் ரிஸ்க் உறுதிப்படுத்தும் இயக்குநர் (chief internal audit and risk assurance director)அனுப் சக்ரபர்த்தி ராஜினாமா செய்தார்.
இப்போது வேதாந்தா நிறுவனத்தின் அலுமினியம் மற்றும் பவுடர்கள் பிரிவின் முதன்மைச் செயல் அதிகாரியாக இருக்கும் அஜய் தீக்ஷித், கெய்ர்ன் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக பதவிக்கு வந்திருக்கிறார்.
இப்போது வரை வேதாந்தா நிறுவனத்தில் இருந்தோ அல்லது கெய்ர்ன் நிறுவனத்தில் இருந்தோ பெருந் தலைகளின் பதவி விலகல் குறித்து எதையும் சொல்லவில்லை. வழக்கம் போல பசப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இதைக் குறித்து நிறுவனத்தில் இருந்து வெளியேறிய அதிகாரிகளும் இதுவரை எதையும் பேசவில்லை. பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் இதுவரை மெளனமாகவே இருக்கிறார்கள். ஆனால் சில பெரிய மனிதர்கள் "இப்படி எளிதில் ஒரு நிறுவனத்தின் சி இ ஓ-க்கள் எல்லாம் ராஜினாமா செய்ய மாட்டார்கள். நிர்வாகத்துக்கும், அதிகாரிகளுக்கு கடுமையான கருத்து வேறுபாடுகள் இருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட ராஜினாமாக்கள் எல்லாம் சாத்தியம்" எனச் சொல்லி இருக்கிறார்கள்.
சமீபத்தில் Open Acreage Licensing Policy முறையில் நடந்த எண்ணெய் மற்றும் கேஸ் ஏலத்தில் 41 இடங்களில் எண்ணெய் மற்றும் கேஸ் எடுப்பதற்கான உரிமங்களைப் பெற்றிருக்கிறது வேதாந்தா.