ஆம்ஸ்டர்டேமில் இருந்து புறப்பட வேண்டிய ஒரு ஜெட் ஏர்வேஸ் விமானத்தை பறிமுதல் செய்திருக்கிறது ஆம்ஸ்டர்டேமில் இருக்கும் ஒரு விமான கார்கோ நிறுவனம்.
என்ன காரணம் எனக் கேட்டால் வழக்கம் போல கார்கோ ஏஜெண்ட் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகைகளை செலுத்தவில்லையாம். அதனால் தான் ஜெட் ஏர்வேஸின் Boeing 777-300 ER (VT-JEW) விமானத்தை பறிமுதல் செய்து வைத்திருக்கிறார்களாம்.
ஜெட் ஏர்வேஸ் விமானம் செலுத்த வேண்டிய தொகைகளைக் கொடுக்காததால் தரை இறக்கப்பட்டிருக்கிறது. இதுவரை விமானப் பறிமுதல் அளவுக்கு எல்லாம் எந்த நிறுவனத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விமானம் பறிமுதல் ஆவதும் இதுவே ஜெட் ஏர்வேஸுக்கு முதல் முறையாம்.
எண்ணிக்கை
விமானங்களுக்கு கொடுக்க வேண்டிய லீஸ் தொகை பாக்கி கொடுக்காததால் ஏற்கனவே பல விமானங்கள், ஜெட் ஏர்வேஸின் பல விமான தடங்களில் விமானங்களைச் செலுத்தாமல் தரை இறக்கப்பட்டிருக்கிறது. பல வழிதடங்களில் 119 விமானங்களை இயக்க வேண்டிய ஜெட் ஏர்வேஸ் தற்போது வெறும் 32 விமானங்களை இயக்கி வருகிறது.
சம்பள பாக்கி
சமீபத்தில் தான் ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் தங்களின் சம்பள பாக்கிகளை உடனடியாகத் தர வேண்டும் எனக் கடிதம் எழுதினார்கள். அப்படி கொடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சம்பளத்தை பெறவும் நடவடிக்கை எடுப்போம் எனவும் நோட்டிஸ் அனுப்பி ஜெட் ஏர்வேஸை உறைய வைத்தார்கள்.
நிதி நெருக்கடி
25 ஆண்டுகளாக இந்தியாவில் கோலொச்சி வந்த ஜெட் ஏர்வேஸ் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. விமான எரிபொருள் வாங்கிய கடன் பாக்கி தொகை, விமானங்களுக்கு கொடுக்க வேண்டிய குத்தகை தொகை, ஊழியர்களுக்கான சம்பள பாக்கித் தொகை என எந்த பக்கம் பார்த்தாலும் ஜெட் ஏர்வேஸ் கடனில் மிதக்கிறது.
எஸ்பிஐ
கடந்த மார்ச் மாதத்தில் தான் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல் தன் தலைவர் பதவியில் இருந்து இறங்கினார். அதன் பின் நிர்வாகம் எஸ்பிஐ இடம் இருக்கிறது. ஆனால் இதுவரை எஸ்பிஐ-யால் எந்த ஒரு தீர்க்கமான முடிவையும் எடுக்க முடியவில்லை. சொன்ன படி முதலீடுகளும் செய்யவில்லை. மொத்த நிறுவனமும் ஏதோ தேக்கத்தில் நிற்கிறது.