மும்பை : காவிரிப் படுக்கை பகுதிகளில் உள்ள நிலப்பகுதி மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும், வேதாந்தா நிறுவனத்திற்கும் இரண்டு மண்டலங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் உரிமத்தை மத்திய பெட்ரோலியத்துறை கடந்த ஆண்டு வழங்கியிருந்தது. ஆனால் தற்போது கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிதாக எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.
காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது, மேலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் மத்திய அரசு அமைதி காத்து வந்த நிலையில், தற்போது ''Open Acrege Licensing Policy'' மூலம் மீண்டும் தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை துவங்க விண்ணப்பித்துள்ளது வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்கள்.
தமிழகத்தில் வேதாந்தா இதுவரை காப்பர் உருக்கு ஆலை மட்டுமே வைத்திருந்த நிலையில், தற்போது முதன் முறையாக எண்ணெய் மற்றும் சுரங்க கிணறுகள் அமைக்கும் பணியைத் துவங்கவுள்ளது. அதேசமயம் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் எண்ணெய் கிணறுகள் மற்றும் சுரங்களை அமைத்துள்ள வேதாந்தா தமிழகத்திலும் அமைக்க விண்ணப்பித்துள்ளது கவனிக்கத்தக்கது.
வேதாந்தா 274 கிணறுகள் அமைக்க திட்டம்
வேதாந்தா நிறுவனம் இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில், 274 கிணறுகளை ஆழமற்ற கடல் பகுதிகளுக்குள்ளும், அதாவது காரைக்கால், நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள நிலப்பகுதியில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், புவனகிரி உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிதாக எண்ணெய் கிணறுகள் ரூ.5150 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது.
ஓ.என்.ஜி.சி 67 கிணறுகள் அமைக்க திட்டம்
அதேசமயம் ஏற்கனவே இங்கு எண்ணெய் எரிவாயு கிணறு அமைத்திருக்கும் ஓ.என்.ஜி.சி நிறுவனமானது மேலும் 67 கிணறுகளை அமைக்க விண்ணப்பங்களை மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஒ.என்.ஜி.சி. அமைக்கவுள்ள 27 கிணறுகளுக்கு முதற்கட்டமாக சுற்றுச்சூழல் ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு அச்சுறுத்தலே
ஏற்கனவே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூலம் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வந்த வேதாந்தா நிறுவனத்திற்கு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான உரிமம் வழங்கப்பட்டால், மேலும் தமிழ் நாடு சுடுகாடாக மாறிவிடும், இது தமிழகத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மக்களையும் மனதில் கொண்டு அனுமதி தரவேண்டும்
ஒரு புறம் இதனால் பொருளாதாரம் சற்றே முன்னடையும் என்றாலும், ஒருபுறம் சுற்றுச் சூழலுக்கு ஏதேனும் பாதிப்புகள் உண்டாகுமா? என்ற கேள்வியும் மனதில் எழுகிறது. இதனால் அரசு எந்த ஒருமுடிவு எடுத்தாலும் மக்களையும், சுற்று சூழலையும் மனதில் கொண்டுஎடுக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோள்.