டெல்லி: மத்திய அரசின் தொடர்ச்சியான வரி சீர்த்த நடவடிக்கையால் ஜிஎஸ்டி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டி புதிய சாதனை படைத்துள்ளதாக ஜிஎஸ்டியின் தலைமை செயல் அதிகாரி பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டபோது பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை சுமார் 60 லட்சமாக இருந்தது, தற்போது இரு மடங்காக அதிகரித்துள்ளது.
மத்திய அரசு எடுத்து வரும் தொடர்ச்சியான வரி சீர்திருத்த நடவடிக்கையின் காரணமாக ஜிஎஸ்டியில் பதிவு செய்வோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே நாடு ஒரே வரிமுறை
வாட் வரி, சுங்க வரி, நுழைவு வரி என பல முனைவரிகளாக இருந்ததால் தான் வரி ஏய்ப்பு நடக்கின்றது என்பதால், அதை முற்றிலும் ஒழித்துவிட்டு மற்ற நாடுகளைப்போல் ஒரே நாடு, ஒரு வரி என்ற முழக்கத்தோடு ஒற்றை வரி முறையை மட்டுமே நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற முனைப்பில் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டது.
ஜிஎஸ்டி வட்டம்
ஜிஎஸ்டி வரிமுறையை அமல்படுத்துவதற்கு முன்பே வாட் வரி விதிப்பு முறையில் இருந்தவர்கள் அனைவரையும் ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் இணைவதற்கு போதிய கால அவகாசமும் வழங்கப்பட்டது. அதே போல் புதிதாக ஜிஎஸ்டி வரி விதிப்பில் பதிவு செய்வதற்கும் போதிய ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.
ஜிஎஸ்டியை புரிந்துகொள்வதில் சிரமம்
தொடக்கத்தில் வர்த்தகர்களுக்கும் தொழில் துறையினருக்கும் வாட் வரிவிதிப்பு முறைக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கும் உள்ள வேறுபாடுகளையும் நுணுக்கங்களையும் புரிந்துகொள்வதில் சற்று சிரமமாக இருந்ததால் ஜிஎஸ்டி வரிமுறையில் தங்களை இணைத்துக்கொள்வதில் கால தாமதம் தாழ்த்தி வந்தனர்.
முதலில் 30 லட்சம் தான்
வர்த்தகர்களும் தொழில் நிறுவனங்களும் ஆரம்பத்தில் ஜிஎஸ்டியில் இணைவதற்கு தயக்கம் காட்டிய காரணத்தினால் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதற்கு முன்பு வரையிலும் ஜிஎஸ்டியில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் குறைவாகவே இருந்தது. இதனால் அனைத்து தொழில் நிறுவனங்களையும் வர்த்தகர்களையும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு வட்டத்திற்குள் கொண்டு வரும் முயற்சியில் ஜிஎஸ்டி ஆணையம் சற்று தீவிரம் காட்டியது.
அப்புறம் 60 லட்சம்
ஜிஎஸ்டி ஆணையம் எடுத்த தீவிர முயற்சியால் ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்ட போது ஜிஎஸ்டியில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை சுமார் 60 லட்சமாக உயர்ந்தது. இடையில் ஜிஎஸ்டி இணையதளத்தில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டபோதிலும் ஜிஎஸ்டியில் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை சீராக உயரத் தொடங்கியது.
சிறு, குறு நடுத்தர தொழில்கள்
வாட் வரிவிதிப்பு முறையில் வரியில்லாத மற்றும் குறைந்த வரிவிகிதமாக இருந்த பல பொருட்கள் ஜிஎஸ்டியில் 18 முதல் 28 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்த வர்த்தகர்கள் குடிசைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜிஎஸ்டியில் பதிவு செய்யாமல் ஒதுங்கி இருந்தனர்.
ஜிஎஸ்டி வரி குறைப்பு
சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அனைத்தையும் ஜிஎஸ்டி வட்டத்திற்குள் கொண்டுவருவதற்காக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெறும் மாதாந்திர ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து, உட்ச பட்ச வரிவிகிதத்தில் இருந்த பல பொருட்கள் 5 முதல் 12 சதவிகிதமாகவும் வரி இல்லாத பொருட்களாகவும் ஆக்கப்பட்டன.
இரு மடங்காக உயர்வு
ஜிஎஸ்டி கவுன்சில் எடுத்த தொடர்ச்சியான நடவடிக்கைகளால் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட புதிதில் 60 லட்சமாக இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து, கடந்த மார்ச் மாத இறுதி நிலவரப்படி ஜிஎஸ்டியில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்து 1.21 கோடி பேராக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆண்டு தோறும் ஜிஎஸ்டி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக ஜிஎஸ்டி ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.
57.12 கோடி இ-வே பில்கள்
கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலையில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி, அறிமுக தருவாயில் ஜிஎஸ்டி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 60 லட்சமாக இருந்தது. ஆனால், தற்போது வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்து 1 கோடியே 21 லட்சமாக அதிகரித்துள்ளது. அதே போல் சுமார் 57.12 கோடி இ-வே பில் தயாரிக்கப்படுவதாகவும் ஜிஎஸ்டி அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.
25.21 கோடி பேர் வரி தாக்கல்
நாளொன்றுக்கு சராசரியாக சுமார் 18 லட்சம் பேர் ஜிஎஸ்டி வரிக்கணக்குத் தாக்கல் செய்வதாகவும் அவர் தனது புள்ளி விவரத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுவரை ஜிஎஸ்டி வரிமுறையின் கீழ் 25.21 கோடி பேர் தாக்கல் செய்த வரிக் கணக்குகளை கையாண்டிருப்பதாகவும், பிரகாஷ் குமார் தெரிவித்திருக்கிறார்.