டெல்லி: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பும் ஜிஎஸ்டியும் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க காரணம் என்று பிரதமர் மோடி கூறினாலும் எதிர்கட்சியினர் மோடிக்கு எதிராக முன் வைக்கும் குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமான குற்றச்சாட்டாக இருக்கிறது. பேசி பேசியே ஆட்சியை பிடித்த பிரதமர் மோடி. 10 ஆண்டுகாலம் பேசாமலேயே ஆட்சி நடத்தியவர் மன்மோகன் சிங். இருவரின் ஆட்சி காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருந்தது. நாட்டின் உண்மையான வளர்ச்சி என்ன என்று பார்க்கலாம்.
தலைமைப் பொருளாதார ஆலோசகர் ரிசர்வ் வங்கி ஆளுநர் என்று பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த அனுபவம் கொண்ட மன்மோகன் சிங், பிரதமராகப் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை எடுத்தார். இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 9 சதவிகித வளர்ச்சியைத் தொட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் உள்ளிட்ட நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
மன்மோகன் சிங் ஆட்சியின் போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 10.08 சதவிகிதமாக உயர்ந்ததாக மத்திய புள்ளியல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த விகிதமான தாராளமயக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பின்னர் எட்டப்பட்ட உச்ச அளவு என்று தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக 2006 -2007ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 10.08 சதவிகிதமாக இருந்தது.
காங்கிரஸ் கட்சி விமர்சனம்
மோடி அரசு 2014 முதல் 2019 வரையிலும் மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 10 ஆண்டுகள் (2004-2014) ஆட்சியிலும் இருந்துள்ளன. மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தின் முடிவில் வேளாண் துறை 3.7 சதவிகித வளர்ச்சியையும், ஜிடிபி 7.9 சதவிகித வளர்ச்சியையும் பதிவு செய்தது. 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பத்தாண்டு கால மன்மோகன்சிங் பிரதமராக பதவி வகித்த காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி விகிதம் சராசரியாக 8.1 சதவிகிதம் இருந்ததாகவும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் சராசரியாக 7.3 சதவிகிதம் இருந்ததாகவும் காங்கிரஸ் கட்சி விமர்சிக்கின்றது.
ஏறி இறங்கிய ஜிடிபி
மன்மோகன் சிங் ஆட்சி செய்த முதல் ஐந்தாண்டில் பொருளாதாரம் சராசரியாக 8.42% என்ற அளவில் வளர்ந்தது. 2006-07 நிதியாண்டில் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு 9.57% என்று சாதனை படைத்தது. இரண்டாவது ஐந்தாண்டுக் காலத்தில் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 6.70% ஆகக் குறைந்தது. கடைசி இரு ஆண்டுகளில் 5 சதவிகிதத்திற்கு கீழே சென்றது. இதுவே காங்கிரஸ் ஆட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.
உண்மையா மாய தோற்றமா
பொருளாதார விகிதத்தைக் கணக்கிடுவதற்கான அத்தியாவசியப் பொருள்களுக்கான விலையை, 2004-05ஆம் ஆண்டின் சந்தை விலையின் அடிப்படையில் கணக்கிட்டு, 2011-12ஆம் ஆண்டுக்கான ஜிடிபி விகிதத்தை வெளியிட்டு, ஜிடிபி வளர்ச்சி அடைந்துள்ளதாகக் காண்பித்தது. இதன் மூலம், ஜிடிபி விகித வளர்ச்சியை 4.7 சதவிகிதத்திலிருந்து 6.9 சதவிகிதமாக மாற்றி, தமது அரசு சிறப்பாகச் செயல்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.
9.42 சதவிகித வளர்ச்சி
கடந்த 2004-05ஆம் நிதி ஆண்டை அடிப்படையாக கொண்டே விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்த நிலையில், பின்னர் இது 2011-12ஆம் ஆண்டை அடிப்படையாக கொண்டு மாற்றி அமைக்கப்பட்டது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் முதல் 3 ஆண்டுகள் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வந்தது. உலக பொருளாதார மந்தநிலை ஏற்பட்ட 2007-08ஆம் ஆண்டில் தான் இந்திய பொருளாதார வளர்ச்சி சற்று சரிவை சந்தித்தது. அப்போது கூட 9.79 சதவிகிதம் என்ற நிலையில் இருந்து 7.16 சதவிகிதமாக சரிந்தது. அடுத்த 2009-10ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 8.99 சதவிகிமாகவும், 2010-11ஆம் ஆண்டில் 9.42 சதவிகிதமாகவும் மீண்டும் உயர்ந்தது.
பொருளாதார கொள்கை
மத்திய அரசு அமைத்துள்ள சுதிப்டோ முன்ட்லே தலைமையிலான பொருளாதார நிபுணர் குழு, 0.3 முதல் 0.5 சதவிகிதம் வரை ஒவ்வொரு ஆண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி அடையும் என கணித்துள்ளது. அதே பாணியைத்தான் ஆட்சிக்கு வந்த மறு ஆண்டே கடைப்பிடித்தது மோடி அரசு. அதாவது 2015 ஜனவரியில், மோடி அரசு மேற்கொண்ட முதல் பொருளாதாரக் கொள்கை முடிவுகளில் ஒன்றாக, ஜிடிபி-யைக் கணக்கிடும் அடிப்படை ஆண்டையும் முறையையும் மாற்றியமைப்பதும் இடம்பெற்றது.
வளர்ச்சியா வீழ்ச்சியா
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 7.1 சதவிகிதமாகச் சரிந்தது. கடந்த 2011-12ஆம் நிதியாண்டு அடிப்படையில் பொருளாதார வளர்ச்சி கணக்கிடப்பட்டதில் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் ஜிடிபி 7.1 சதவிகிதமாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 6.3 சதவிகிதமாக இருந்தது. அதேநேரத்தில், முந்தைய ஏப்ரல் - ஜூன் காலாண்டை விட (8.2 சதவிகிதம்) வளர்ச்சி சரிந்துள்ளது. ஜனவரி - மார்ச் காலாண்டில் ஜிடிபி 7.7 சதவிதமாகவும், அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 7 சதவிகிதமாகவும் இருந்தது. ஆனால், சீனாவை விட அதிக வளர்ச்சி பெற்றுள்ளது. நடப்பு ஆண்டில், சீனப் பொருளாதார வளர்ச்சி ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 6.5 சதவிகிதமாக மதிப்பிடப்பட்டுள்ளது" என அதில் மத்தியப் புள்ளியியல் துறை மேலும் குறிப்பிட்டிருந்தது.
ஜிடிபி வளர்ச்சி அதிகரிப்பு
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-18ஆம் நிதியாண்டில் 6.7 சதவிகிதமாக உள்ளது என மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி பிரதமராக பதவி ஏற்ற 2014ஆம் ஆண்டு முதல் கடந்த நான்காண்டுகளில் மிகவும் குறைவான ஜிடிபி வளர்ச்சி இதுவாகும். ஆனால், கடந்த 7 காலண்டுகளில் இல்லாத வகையில் கடந்த நிதி ஆண்டின் கடைசி காலாண்டான (ஜனவரி- முதல் மார்ச் வரை) ஜிடிபி 7.7 சதவிகிதமாக அபார வளர்ச்சியை எட்டியுள்ளது. இது ப்ளூம்பர்க் நிதி நிறுவனம் கணித்த 7.4 என்ற ஆளவை விட 0.3 சதவிகிதம் அதிகமாகும். கடந்த நிதி ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளின் ஜிடிபி முறையே 5.6 %, 6.3 %, 7.0% என இருந்தது.
ஜிடிபி சாதனை
இந்தியாவின் வளர்ச்சி 2018-19 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 8.2% ஆக, கடந்த 15 காலாண்டுகளில் இல்லாத, அதாவது கடந்த 3 3/4 வருடங்களில் இல்லாத அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
2014-15 நிதி ஆண்டின் 2வது காலாண்டு அதாவது ஜூலை - செப்டம்பர் மாதங்களின் போது இந்திய வளர்ச்சி ஜிடிபி 8.4 சதவிகிதமாக வளர்ந்து சாதனை படைத்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 2018-19 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 33.74 லட்சம் கோடி ஆக உள்ளது. கடந்த 2017-18 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 31.18 லட்சம் கோடி ஆக மொத்த உள்நாட்டு உற்பத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
யார் ஆட்சியில் எத்தனை சதவிகித வளர்ச்சி
வளர்ச்சியை கணக்கிடும் போது மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் ஸ்கூட்டர், கார், வாகனங்கள், டிராக்கர் விற்பனை சதவிகிதம் அதிகரித்துள்ளது. சிமெண்ட் உற்பத்தி, வருமானவரி, கார்ப்பரேசன் வரி வருமானம் அதிகரித்துள்ளது. ரயில் பயணிகள் வருமானம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் மோடி ஆட்சி காலத்தில் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெட்ரோலியம் பொருட்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் அதிக அளவில் போடப்பட்டுள்ளன.
1,35,676 கிலோமீட்டர் நீளம் சாலைகள்
மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் 70ஆயிரத்து 548 கிலோமீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் மார்ச் 31, 2014ஆம் ஆண்டு வரை போடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் 2019 மார்ச் வரைக்கும் 1,35,676 கிலோமீட்டர் நீளம் வரை தேசிய நெடுங்சாலைகள் போடப்பட்டுள்ளது.