வாஷிங்டன் : நடப்பு நிதியாண்டில் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் அதிகரிக்கும் என்று பல்வேறு கருத்துகணிப்புகள் அறிக்கைகள் கூறியிருந்தாலும் தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் அதன் வளர்ச்சி 7.2 சதவிகிதம் அளவில் இருக்கும் என்று கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐ.எம்.எஃப் நிதியத்தின் ஆண்டு கூட்டமைப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறியதாவது, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட சவால்களை மேற்கொள்வதற்கு இந்தியா குறைந்தபட்சம் 8 சதவிகிதம் அளவிற்காவது அதன் வளார்ச்சி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அதற்கு மேலான வளர்ச்சியை எட்ட முடியும் கூறியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியான 7.5 சதவிகிதத்தை சராசரியாக எட்டி வருகிறது, இருப்பினும் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகவே இருந்து வருகிறது. மேலும் நிலம் மற்றும் தொழிலாளர் துறையில் சில பல சீர்திருத்தங்களையும் செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வேளாண் துறையில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்
இதுவே அடிப்படை சீர்திருத்தங்களில் முக்கியமான விஷயம் வேளாண் சந்தையாகும். இதன் கட்டமைப்பு வசதிகளையும் சீர் செய்வது முக்கியமான விஷயமாகும். இது பெரும்பாலும் மாநில அரசுகளின் கைகளிலேயே உள்ளது. மேளும் வேளாண் சந்தையில் தனியார் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் விவசாய பொருட்கள் உற்பத்தியும் மேம்படும். உற்பத்தி பொருள் கெடாமல் பாதுகாக்கப்படும். இதற்காக சேமிப்பு கிடங்குகள் எண்ணில் அடங்குபவயாகவே உள்ளன. இதனால் இத்தகைய நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகள் தங்களது கொள்கைகளை முற்றிலுமாக மாற்றினால்தான் சீர்திருத்தங்கள் செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார்.
பணவீக்கம் குறித்த மிகைப்படுத்தப்படும் காரணங்கள்
மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும், நடப்பு நிதி ஆண்டில் 7.2 சதவிகித வளர்ச்சியை எட்ட வேண்டியது என்பது மிக சவாலான சூழலே. மேலும் கச்சா எண்ணெய் இறக்குமதி காரணமாக அதிகரிக்கும் பண வீக்கம் குறித்த விவரங்கள் மிகைப்படுத்தப் படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கச்சா எண்ணெய் விலை குறைய வேண்டும்
கச்சா எண்ணெய் உயர்ந்து பிறகு குறையும் போது பண வீக்கம் கட்டுக்குள் இருக்கும் சூழலிலேயே உள்ளது என்றும், இருப்பினும் தொடர்ந்து கச்சா எண்ணெய் உயர்ந்தால் அது அதிகரிக்கும் பணவீக்கத்திற்கு வழிவகுக்கும் என்றும் கூறுயுள்ளார். அதேசமயம் கச்சா எண்ணெய் விலை எந்த அளவுக்கு உயர்கிறது என்பதைப் பொருத்தே பணவீக்க அளவு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும்
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிக்குமாயின் அது நிச்சயம் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும். அதேபோல நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் அதிகரிக்கும். இதன் காரணமாக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் சரிவடையும். சமீப காலத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் வங்கித் துறைகளில் நிலவி வரும் சிக்கல்கள், மேலும் ஏற்றுமதியில் காணப்படும் மந்த நிலை ஆகியவை இந்தியாவின் வளர்ச்சியை மேலும் மந்தமடையவே செய்துள்ளன. இதனால் இது போன்ற சவால்கள் இந்தியாவுக்கு தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதையும் சமாளித்து வளார்ச்சியை கொண்டு வருவது சற்று கடினமான விஷயம் என்றாலும், அதை செய்ய வேண்டிய கட்டாயத்தில் தான் உள்ளோம் என்றும் கூறுகிறார்.
பொருளாதாரத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும
தொடர்ந்து இரண்டு முறையாக 0.25 சதவிகிதம் என்ற அளவில் வட்டிக் குறைப்பு நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது. எனினும் ரிசர்வ் வங்கியின் முக்கிய நோக்கமே வளர்ச்சியை தூண்டுவதுதான். பொருளாதார நிலையை நிலைப்படுத்துவதுமாகும் மற்றும் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வருவதும் ரிசர்வ் வங்கியின் முக்கிய பணியாக உள்ளது.
சர்வதேச பொருளாதாரம் காரணமாக வட்டி குறையலாம்
ஏற்கெனவே 7.4 சதவிகித வளர்ச்சி இலக்கு அறிவித்திருந்தாலும், தற்போது இது 7.2 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டதற்கு காரணமே சர்வதேச அளவில் நிகழும் பொருளாதார சூழல்தான் என்றும் கூறியுள்ளார். சர்வதேச அளவில் நிகழும் மாற்றங்கள் சாதகமாக இருந்தால் அடுத்து வரும் மாதங்களிலும் வட்டிக் குறைப்பு நடவடிக்கையை நிச்சயம் இந்திய ரிசர்வ் வங்கி எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.