டெல்லி : கடந்த எட்டு மாதங்களாக மழையின்மை காரணமாக எங்கு பார்த்தாலும் வறட்சி நிலவி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் வெதர்மேன் தனது பேஸ்புக்கில் தமிழகத்தில் கூடிய விரைவில் மழை பெய்யும் என்று கூறியுள்ளார்.
தனியார் வானிலை ஆர்வலர், தமிழ் நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் கோடைக்காலத்திற்கான மழை அறிகுறிகள் தென் பட தொடங்கி விட்டன. இது மிக மகிழ்ச்சியான செய்தி என்றும் கூறியுள்ளார்.
வரும் வாரத்தில் உள்மாவட்டங்களில் அதாவது கடற்கரையில் இருந்து தள்ளியுள்ள மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. அதேசமயம் சென்னையை பொறுத்தவரை தற்போது நிலவும் அதே 36 டிகிரி வெப்ப நிலையே இருக்கும்.
ஆனால் வட மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் போன்ற மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களில் திரு நெல்வேலி, கன்னியாகுமரி, விருது நகர் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்புள்ளது. ஆனால் இந்த மழை பயங்கர மழையாக இருக்காது. ஆங்காங்கே இருக்கும்.
இந்த மழை அரைமணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை பெய்யக்கூடும். அதில் நீலகிரி , தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். இந்த பகுதிகளில் தொடர்ந்து 2,3 நாட்கள் கூட நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது.
இந்த மழைக்குக் காரணம் மேற்கில் உள்ள காற்றும் கிழக்கில் உள்ள காற்றும் மோதிக் கொள்வதும் பூமத்திய பகுதியிலிருந்து நுழையும் காற்று ஏற்படுத்தும் தாக்கத்தாலும் இந்த மழை பெய்யவிருக்கிறது. இவ்வாறு வெதர்மேன் கணித்துக் கூறியுள்ளார்.
எது எப்படியோ இந்த செய்தியால் விவசாயிகள் மிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வறட்சியால் தற்போது உள்ள காய்ந்துபோய் கிடக்கும் விவசாய பூமிகள் வானத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. இந்த நிலையில் இந்த மழை செய்தி மக்களுக்கு சற்றே ஆறுதலாக உள்ளது.
கடந்த எட்டு மாதங்களாக மழை இல்லாததால், தற்போது ஆரம்பிக்க உள்ள மழையின் காரணமாக இனியாவது பயிர்கள் பிழைக்குமே என்ற எண்ணத்திலும், இதன்மூலம் இந்த வருடம் உற்பத்தி குறையாது என நினைக்கிறோம், மழை பெய்தால் அனைவருக்கும் நல்லதே. கிராமப்புறங்களின் ஆதாரங்களைக் காப்பற்ற இது வழிவகை என்றும் கூறுகிறார்கள் ஆர்வலர்கள்.
கடந்த சில மாதங்களாகவே வெளியிடப்படும் விவசாய உற்பத்திக் குறியீடுகள் மிக குறையும் என்றே சொல்லி வருகின்றன. ஆனால் கடந்த ஆண்டு சரியான மழை இல்லாத காரணத்தினாலேயே உற்பத்தி வெகுவாக குறைந்தது. இந்த நிலையில் இந்த அறிவிப்பு உண்மையானால் ரொம்ப சந்தோஷமே என் கிறார்கள் விவசாயிகள்.