டெல்லி: கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு 12 சதவிகிதத்திற்கும் மேல் இருந்த பணவீக்க விகிதம் தற்போது 3.18 சதவிகிதமாக சரிவடைந்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது பணவீக்கத்தை கட்டுப்படுத்துவோம் என்ற முழக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. 2014 தேர்தலில் பாஜகவின் முதன்மையான வாக்குறுதிகளில் ஒன்று அதிகரித்து வரும் விலைவாசியைக் கட்டுப்படுத்துவோம் என்பதுதான். 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் பணவீக்கம் படிப்படியாக குறையத்தொடங்கியது. விலைவாசியும் கட்டுப்பதுத்தப்பட்டது.
2017ஆம் ஆண்டில் சராசரியாக ஆண்டு விகிதம் வெறும் 3% அளவிற்குக் குறைவாகவே இருந்தது. லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் இந்த நேரத்தில் பணவீக்கம் 3.18 உயர்ந்திருப்பது பேசு பொருளாகி உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பணவீக்கம் 3.18 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. உணவு பொருட்களின் மார்ச் மாத மொத்தவிலை பணவீக்கம் 5.68 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மார்ச் மாதம் சில்லறை பணவீக்கம் 2.57 சதவிகிதத்திலிருந்து 2.86 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு பணவீக்கம் இரட்டை இலக்க அளவை எட்டியது. விலைவாசி விண்ணை எட்டியது. பணவீக்கம் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத மிக அதிகபட்ச அளவான 12 சதவிகித்தைத் தாண்டியது. 2014ஆம் ஆண்டு மே மாதம் வரைக்கும் பண வீக்கம் ஊசலாட்டத்துடனே காணப்பட்டது. 2014ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த பின்னர் அடிப்படை விலைவாசி சரிந்து, தனிநபர்களின் சேமிப்பு அதிகரித்தது, செலவினங்கள் குறைந்தது இது மோடியின் நிர்வாகத்திறனால் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி என்கின்றனர் ஆளுங்கட்சியினர்.
ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்ட 2017ஆம் ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் மாதத்தில் 5. 21 சதவிகிதமாக இருந்த பணவீக்க விகிதம் 5.07 சதவிகிதமாக குறைந்து பின்னர் கைகொடுத்த பருவமழையால் அதிகரித்த விவசாய உற்பத்தி மற்றும் தொழில்துறை உற்பத்தி அதிகரிப்பால் படிப்படியாக குறைந்து வந்த பணவீக்கம் மார்ச் மாத இறுதியில் மொத்த விலை பணவீக்கம் 3.18 சதவிகிதமாக உயர்ந்தது.
தேவை குறைவு விளைச்சல் அதிகம்
பொருளாதார வளர்ச்சியிலும் தனிநபர் வருவாயிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் பணவீக்கத்தை எளிமையாக சொல்வதென்றால், தேவைக்கும் வழங்கலுக்கும் இடையில் (Demand and supply) உள்ள வித்தியாசமாகும். தேவை அதிகமாகவும் உற்பத்தியும் விளைச்சலும் குறைவாகவும் இருந்தால் பணவீக்க விகிதம் அதிகமாக இருக்கும். அதற்கு மாறாக தேவை குறைவாகவும் விளைச்சல் அதிகமாகவும் இருக்குமானால் பணவீக்க (பணவாட்டம்) விகிதம் குறைவாகவும் இருக்கும். அதாவது பணப்புழக்கம் அதிகரிப்பதால் தொடர்ந்து நிலைக்கும் விலைவாசி உயர்வைக் குறிப்பிடுவதே இந்தப் பணவீக்கம்.
பணவீக்கம் புள்ளிவிபரம்
மொத்த விற்பனை விலைப் பட்டியல் பணவீக்கம் (Wholesale Price Index Inflation மற்றொன்று நுகர்வோர் விலைப் பட்டியல் பணவீக்கம் (Consumer Price Index Inflation. இந்தியாவில் மொத்த விற்பனை விலைப் பட்டியல் பணவீக்கம் (WPI) முறையை உபயோகப்படுத்துகின்றனர். வளர்ந்த நாடுகளில் நுகர்வோர் விலைப் பட்டியல் பணவீக்கம் (CPI) முறையைப் பயன்படுத்துகின்றனர். 2012 ஜனவரி மாதத்தில் இருந்து நுகர்வோர் விலை பணவீக்கம் (சி.பி.ஐ) எனப்படும் சில்லரை விற்பனை விலை பணவீக்க புள்ளிவிவரத்தை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இந்த பணவீக்கம் கிராமம், நகரம் மற்றும் நாடு ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வெளியிடப்படுகிறது.
2019 மார்ச்சில் பணவீக்கம் எப்படி
மார்ச் மாதத்தில், சில்லறை விலை பணவீக்கம் 2.86 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 3 மாதங்களில் இல்லாத உயர்வாகும். முந்தைய பிப்ரவரி மாதத்தில் இப்பணவீக்கம் 2.57 சதவிகிதமாக இருந்தது. 2018-19ஆம் நிதியாண்டின் கடைசி மாதமான மார்ச் மாதத்தில், மொத்த விலை பணவீக்கம் 3.18 சதவீதமாக உயர்ந்துள்ளது. சென்ற நிதியாண்டின் கடைசி மாதமான இதே மார்ச் மாதத்தில் இந்தப் பணவீக்கம் 2.74 சதவிகிதமாக இருந்தது. பிப்ரவரி மாதத்தில் அது 2.93 சதவீதமாக இருந்தது.
ஜிஎஸ்டிக்குப் பின் பணவீக்கம்
சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்ட ஆண்டின் கடைசி மாதமான கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பரில் அதிகரித்து காணப்பட்ட பணவீக்க விகிதம் கடந்த ஜனவரி மாதத்தில் 5.07 சதவிகிதமாக குறைந்தது. கச்சா எண்ணை விலை அதிகரிப்பு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தபோதும், பருவமழை கைகொடுத்த்தால் விவசாய விளைபொருட்கள் விளைச்சல் அதிகரித்த்தால் சில்லறை பணவீக்க விகிதம் குறைந்தது.
ஏறி இறங்கிய பணவீக்கம்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மொத்த விற்பனை விலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்ந்து இருந்தது. அக்டோபர் மாதத்தில் அது 5.28 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் நவம்பரில் 4.64 சதவீதமாக குறைந்தது. டிசம்பர் மாதத்தில் 3.80 சதவீதமாக மேலும் குறைந்தது. ஜனவரியில் நல்ல முன்னேற்றமாக 2.76 சதவீதமாக குறைந்தது. அதே சமயம் பிப்ரவரி மாதத்தில் அது 2.93 சதவீதமாக உயர்ந்தது.
2018-19ஆம் நிதியாண்டு
மார்ச் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 3.18 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 2.74 சதவீதமாக இருந்தது. காய்கறி, எரிபொருள்கள், மின்சார பிரிவில் பணவீக்கம் அதிகரித்ததே இதற்கு காரணமாகும். மார்ச் மாதத்தில் காய்கறி பிரிவில் மொத்த விலை பணவீக்கம் 28.13 சதவீதம் இருக்கிறது. முந்தைய மாதத்தில் அது 6.82 சதவீதமாக இருந்தது. உணவுப்பொருட்களைப் பொறுத்தவரை மொத்த விலை பணவீக்கம் 5.68 சதவீதமாக உள்ளது. சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில் அது 0.22 சதவீதமாக இருந்தது. முந்தைய மாதத்தில் அது 4.28 சதவீதமாக இருந்தது. எரிபொருள் மற்றும் மின்சார பிரிவில் மொத்த விலை பணவீக்கம் 5.41 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. பிப்ரவரி மாதத்தில் அது 2.23 சதவீதமாக இருந்தது.
காய்கறிகள் பழங்கள் விலை உயர்வு
கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 4.44 சதவிகிதமாக குறைந்து காணப்பட்ட சில்லறை பணவீக்க விகிதம், ஜிஎஸ்டி அறிமுக நிதியாண்டின் இறுதி மாதமான மார்ச் மாதத்தில் 4.28 சதவிகிதமாக குறைந்தது. தானியங்கள், இறைச்சி, மீன் மற்றும் பழவகைகளின் விலை ஏற்றம் காரணமாக ஏப்ரல் மாதம் பணவீக்கம் 4.58 சதவிகிதமாக அதிகரித்ததாக மத்திய புள்ளி விவரத்துறை தெரித்தது. காய்கறிகள், பழங்கள், விலை உயர்ந்ததை அடுத்து ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரை குறைந்திருந்த சில்லறைப் பணவீக்க விகிதம் மே மாதத்தில் 4.87 சதவிகிதமா தடாலடியாக உயர்ந்தது. கிராமப்புற சில்லறைப் பணவீக்க விகிதம் 4.67 சதவிகிதமாகவும் நகர்ப்புற சில்லறைப் பணவீக்க விகிதம் 4.42 சதவிகிதமாகவும் இருந்தது.
கை கொடுத்த பருவமழை
விவசாய விளைபொருட்களின் விலை குறைந்து காணப்பட்டாலும், எரிபொருள் மற்றும் மின்சாரம் போன்றவற்றின் அதிகப்படியான தேவை காரணமாக ஜூன் மாத பணவீக்க விகிதம் 5 சதவிகிதத்தை எட்டியது என்று மத்திய புள்ளியியல் துறை தெரிவித்தது. ஜூலை மாதத்தில் பணவீக்க விகிதம் 4.17 சதவிகிதமாக குறைந்தது. தென்மேற்கு பருவமழை கணிசமான அளவில் பெய்ததால் உணவுப் பொருட்களின் விளைச்சல் அதிகரித்து காணப்பட்டது. இதனால் சில்லறை பணவீக்க விகிதம் குறைந்தது.
பணவீக்கம் குறைய காரணம்
தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கைகொடுத்து வந்ததால், விவசாய விளைபொருட்களின் விளைச்சல் அதிகரித்து உணவுப் பொருட்களின் விலை அதிரடியாக சரிந்து ஆகஸ்ட்டில் 3.69 சதவிகிதத்தை எட்டியது. இது ரிசர்வ் வங்கியின் இலக்கான 4 சதவிகிதத்துக்கும் குறைவாகும். மேலும் ஜூன் மாதத்தில் மத்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது. இதுவும் பணவீக்க விகிதம் குறைய ஒரு காரணமாகும்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு
மத்திய ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு செப்டம்பர் மாத சில்லறை பணவீக்க இலக்கை 4 சதவிகிதமாக நிர்ணயித்து இருந்தது. கூடவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது அதிகரித்ததால் செப்டம்பர் மாத சில்லறைப் பணவீக்க விகிதமானது ஆகஸ்டு மாதத்தை விட சிறிது உயர்ந்து 3.77 சதவிகிதத்தை எட்டியது. தென்மேற்கு பருவ மழையின் இறுதிக்கட்டத்திலும் மழை தொடர்ந்ததால் விவசாய விளைபொருட்களின் விலை குறைந்து காணப்பட்டது. மேலும் கச்சா எண்ணெய் விலையும் குறைந்ததால் அக்டோபர் மாத சில்லறைப் பணவீக்க விகிதம் 3.31 சதவிகிதமாக குறைந்தது.
நவம்பர் டிசம்பரில் பணவீக்கம்
தென்மேற்கு பருவமழை விட்ட இடத்தில் இருந்து வடகிழக்கு பருவமழை பிடித்துக்கொண்டது. இதனால் விவசாய விளைபொருட்களின் விலை தொடர்ந்து இறங்குமுகமாகவே இருந்து வந்தது. இதனால் நவம்பர் மாத சில்லறைப் பணவீக்க விகிதம் அக்டோபர் மாதத்தில் இருந்து 1 சதவிகிதம் குறைந்து 2.33 சதவிகிதத்தை எட்டியது.
வடகிழக்குப் பருவமழை சரியில்லை
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு கை கொடுக்கவில்லை என்றாலும் டிசம்பரில் பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 3.80 சதவிகிதமாகவும் ஜனவரியில் நல்ல முன்னேற்றமாக 2.76 சதவீதமாக குறைந்தது. அதே சமயம் பிப்ரவரி மாதத்தில் அது 2.93 சதவிகிதமாக உயர்ந்தது. இந்நிலையில், மார்ச் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 3.18 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 2.74 சதவீதமாக இருந்தது.
பணவீக்கத்தை நிர்ணயிக்கும் காரணி
ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளை பணவீக்கம்தான் நிர்ணயிக்கிறது. இவ்வங்கி முன்பு மொத்த விலை பணவீக்கம் அடிப்படையில் தனது கொள்கை முடிவுகளை எடுத்து வந்தது. ஆனால் இப்போது சில்லரை விற்பனை விலை பணவீக்கத்தையே கணக்கில் எடுத்துக் கொள்கிறது. இதனால் பணவீக்கத்தை துல்லியமாக அளவிட முடியும் என பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ரெப்போ ரேட் குறைப்பு
இந்திய ரிசர்வ் வங்கி நடப்பு நிதி ஆண்டில் 2019-20 முதல் முறையாக இம்மாதம் 4ஆம் தேதி தனது நிதிக்கொள்கை ஆய்வறிக்கையை வெளியிட்டது.
அப்போது வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை இவ்வங்கி 0.25 சதவீதம் குறைத்தது. எனவே ரெப்போ ரேட் 6 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ ரேட் 5.75 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
ரிசர்வ் வங்கி இரக்கு
சில்லரை விலை பணவீக்கம் 2019 ஜனவரி-மார்ச் காலாண்டில் 2.4 சதவிகிதமாக குறைந்து இருக்கும் என ரிசர்வ் வங்கி மதிப்பீடு செய்து இருந்தது. நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் (2019 ஏப்ரல்-செப்டம்பர்) இந்தப் பணவீக்கம் 2.9-3 சதவீதமாக இருக்கும் எனவும் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் 3.9 சதவிகிதமாக உயரும் என ரிசர்வ் வங்கி கணித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.