சான் பிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய ஐபோன்களுக்கான தேவை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதை வெளிப்படையாக அமெரிக்க பங்குச் சந்தைகளுக்கும், அதன் நெறிமுறையாளர்களுக்கும் தெரிவிக்கவில்லை என ஒரு வழக்கு பதிவு செய்திருக்கிறார்களாம்.
The City of Roseville employees' retirement fund என்கிற அமைப்பு தான் ஆப்பிள் நிறுவனம் மீது இந்த வழக்கைப் பதிவுச் செய்திருக்கிறார்களாம். வடக்கு கலிஃபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட இருக்கிறதாம்.
ஆப்பிள் நிறுவனத்துக்கு கடந்த நவம்பர் 2018-லேயே தன் ஐபோன் விற்பனை சரிந்திருப்பது, எதிர்காலத்தில் சரியப் போவது தெரிய வந்துவிட்டது. இருப்பினும் அவைகளை முதலீட்டாளர்களிடம் இருந்து மறைத்து வைத்து முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தி இருக்கிறது என வழக்கு பதிந்திருக்கிறார்களாம்.
பெரிய டிமாண்ட்
2018 நவம்பர் மாதம், ஆப்பிள் நிறுவனம், தன் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு வலுவான டிமாண்ட் ஏற்பட்டிருப்பதாகச் சொன்னது. அதோடு நவம்பர் 2018-ல் தன் பங்குதாரர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் எழுதிய கடிதத்தில் வரும் டிசம்பர் 2018 காலாண்டில் 89 - 93 பில்லியன் டாலர் வரை வருவாய் வரும் எனவும் கணித்துச் சொல்லி முதலீட்டாளர்களை உசுப்பேத்திவிட்டது.
சொல்லவில்லை
அதே காலகட்டத்தில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் ஏற்பட்ட வர்த்தகப் போர் ஆப்பிள் நிறுவனத்தை பெரிய அளவில் பாதித்தது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் மற்றும் சேவைகளுக்கான தேவை சீனாவில் பெரிய அளவில் குறைந்தது. இந்த விஷயம் 2018 நவம்பர் மாதத்திலேயே அறிந்து கொண்டது ஆப்பிள் நிறுவனம். ஆனால் வாய் திறக்க வில்லை எனக் குற்றம் சாட்டுகிறார்கள் The City of Roseville employees' retirement fund அமைப்பினர். அதோடு டிசம்பர் 2018-ல் பங்கு தாரர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் டிசம்பர் 2018 காலாண்டில் 84 பில்லியன் வரை வருவாய் வரலாம் என குறைத்து கணிப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள்.
9% நட்டம்
ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது கணிப்புப் படியே டிசம்பர் 2018-க்கான வருவாய் 84.3 பில்லியன் டாலராகவே இருந்தது. இது கடந்த டிசம்பர் 2017-ஐ விட 5% குறைவு. இந்த செய்தி வெளியான ஒரே நாளில் ஆப்பிள் நிறுவனப் பங்குகளில் விலை 15 டாலர் வரை (9%) சரிந்தது. அந்த டிசம்பர் 2018 காலாண்டு முடிவு அறிக்கைகளில் ஆப்பிள் நிறுவனம் சீன வர்த்தகப் போரால் தான் தங்களின் வருவாய் குறைந்திருப்பதாக ஒப்புக் கொள்கிறார்கள்.
நஷ்ட ஈடு
ஆக நவம்பர் 2018-ல் தவறான விவரங்களைச் சொல்லி ஆப்பிள் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய வைத்திருக்கிறார்கள். அதனால் ஆப்பிள் நிறுவனப் பங்குகளின் விலை செயற்கையாக விலை ஏற்றப்பட்ட வர்த்தகமாகி வருகின்றன எனவும் The City of Roseville employees' retirement fund அமைப்பினர் சொல்லி இருக்கிறார்கள். இந்த இழப்பைச் சரிகட்ட ஒரு பெரும் தொகையை நஷ்ட ஈடாகக் கேட்டிருக்கிறார்களாம்.