டெல்லி: கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் இந்தியர்கள் 5.40 லட்சம் கோடி ரூபாய்க்கு ஆடைகளை வாங்கிக் குவித்திருக்கிறார்கள் என கணக்கு சொல்கிறது CARE மதிப்பீட்டு நிறுவனம். இது கடந்த 2010-ம் ஆண்டு இந்தியர்கள் 1.92 லட்சம் கோடி ரூபாய்க்கு ஆடைகளை வாங்கியதை விட சுமார் மூன்று மடங்கு அதிகமாம்.
ஆக கடந்த 10 ஆண்டில் ஆண்டுக்கு சுமார் 13 சதவிகிதம் என ஆடைகள் வியாபாரம் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. இத்தனை பெரிய வளர்ச்சிக்கு மக்களிடம் அதிகரித்திருக்கும் வருமானம், அதிலும் குறிப்பாக செலவு செய்வதற்காக ஒதுக்கப்படும் பணத்தின் அளவு (Disposable Income)அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது.
அதோடு மக்கள் தங்கள் சொந்த ஊர்களை விட்டு பெரு நகரங்களுக்கு குடியேறுவது, பிராண்டின் மீதான மோகம் அதிகரித்திருப்பது, பிராண்டட் ஷோரூம்கள் பெரு நகரங்கள் மட்டும் இன்றி டயர் 1 மற்றும் டயர் 2 நகரங்களிலும் திறந்திருப்பது எல்லாமே, இந்த மூன்று மடங்கு வளர்ச்சிக்கு முக்கிய காரணம் எனச் சொல்கிறது CARE மதிப்பீட்டு நிறுவனம்.
பெண்கள் இல்லை
ஆடைகள் என்றாலே பெண்கள் தான் அதிகம் செலவழிப்பார்கள் என்கிற எண்ணத்தை மாற்றுகிறது இந்த CARE மதிப்பீட்டு நிறுவனத்தின் தரவுகள். அட ஆமாங்க, 2018-ம் ஆண்டில் அதிகம் ஆடைகளை வாங்கிக் குவித்திருப்பவர்கள் ஆண்கள் தான். கொஞ்ச நெஞ்சமல்ல 2.21 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்கள்.
யாருக்கு எவ்வளவு
2018-ல் செலவு செய்த 5.40 லட்சம் கோடி ரூபாயில், 2.21 லட்சம் கோடி ரூபாய்க்கு ஆண்கள் தான் ஆடைகளை வாங்கிக் குவித்திருக்கிறார்கள். அதற்கு அடுத்து தான் பெண்கள் 2.06 லட்சம் கோடி ரூபாய்க்கு ஆடைகளை வாங்கி இருக்கிறார்கள். கடைசியாகத் தான் குழந்தைகள், 1.13 லட்சம் கோடி ரூபாய்க்கு மட்டுமே குழந்தைகளின் ஆடைகளுக்கு செலவழித்திருக்கிறார்கள்.
கோட் சூட்டுகள் அதிகம்
பெண்கள் செலவழித்திருக்கும் 2.06 லட்சம் கோடி ரூபாயில் வழக்கம் போல சேலைகளுக்கே முதலிடம். அதற்கு அடுத்து ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் கோட் சூட்டுகள் இடம் பிடிக்கின்றன. பெண்கள் விரும்பி எடுக்கும் துணிகளில் டெனிம் ரக துணிகளுக்கு முதலிடமாம்.
சொந்த சம்பாத்தியம்
ஆக பெண்கள் இப்படி கோட் சூட்டுகள் அதிகம் வாங்குவது, சேலைகள் தவிர டெனிம் ரக துணிகளை அதிகம் எடுப்பதற்கு "நிறைய பெண்கள் தங்கள் சொந்த காலில் நின்று சம்பாதிக்கத் தொடங்கியது, நிறைய பெண்கள் கல்லூரிகளில் காலடி எடுத்து வைத்திருப்பது தான் கோட் சூட் மற்றும் டெனிம் ரக துணிகளை பெண்கள் அதிகம் வாங்குவதற்கான முக்கிய காரணம்" எனச் சொல்கிறார்கள் CARE மதிப்பீட்டு நிறுவனம்.
இ-காமர்ஸ்
ஐந்து வருடங்கள் முன்பு வரை, அனைத்து பெரிய பிராண்டுகளுக்கும் மெட்ரோ நகரங்கள் மற்றும் டயர் 1 நகரங்கள் தான் பெரிய சந்தை இலக்குகளாக இருக்கும். ஆனால் இன்று இ-காமர்ஸ் வந்த பின் டயர் 2 நகரங்கள் கூட ஆன்லைனில் ஷாப்பிங் செய்கிறார்கள். இதனாலும் பல்வேறு பிராண்டுகளால் தங்கள் விற்பனையை அதிகரித்துக் கொள்ள முடிந்திருக்கிறது என்கிறது CARE மதிப்பீட்டு நிறுவனம்.
பெரிய பிராண்டுகள்
கடந்த 10 ஆண்டுகளில் தான் H&M, Zara, Forever 21, Uniqlo போன்ற உலக பிராண்டுகள் இந்தியாவில் களம் இறங்கின. இவை அனைத்துமே உலகின் அதிமுக்கிய ஆடை பிராண்டுகள். இதில் Zara பிராண்டின் ஆடைகள் இந்தியாவில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் விற்றுத் தீர்ந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.