கேன்சலான ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் - டிக்கெட் ரீஃபண்ட் உடனே கிடைக்காது
டெல்லி: கடந்த 17ஆம் தேதி முதல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது விமான சேவையை முற்றிலும் நிறுத்திவிட்டதால், இதில் பயணம் செய்ய முன் பதிவு செய்திருந்த பயணிகளுக்கு டிக்கெட் ரீஃபண்ட் திரும்ப கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இப்போதைக்கு ரீஃபண்ட் கிடைக்க வாய்ப்பு இல்லை என்று ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
விமான சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகளின் ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுக்கான ரீஃபண்ட் தொகையை திரும்பப் பெறுவதற்கு ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் அதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டியது கட்டாயமாகும்.
ஜெட் ஏர்வேஸ் கடுமையான நிதிச்சிக்கல் மற்றும் கடனில் சிக்கித் தவிப்பதால் உடனடியாக இது சாத்தியமில்லை என்றும் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டால் தான் இது சாத்தியம் என்று விமான சேவைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் ஏப்ரல் 18ஆம் தேதி வரையிலும் சேவை முழுதும் நிறுத்தப்படும் வரை ரத்து செய்யப்பட்ட சேவைகளுக்கான பயணிகள் டிக்கெட்டுகளுக்கான தொகை திரும்ப பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உடனே ரூ.400 கோடி வேண்டும்
கடுமையான நிதிச்சுமையிலும் கடன் சுமையிலும் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தன்னுடைய விமான சேவையை தொடரவும் ஊழியர்கள், பைலட்களுக்கு சம்பளம் தருவதற்கும் ரூ.400 கோடியை உடனடியாக வழங்க எஸ்பிஐ வங்கிகள் தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்புக்கு உத்தரவிடக்கோரி பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் வான்வழித்துறை ஆகியவற்றுக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடிதம் எழுதியிருந்தது. எங்களால் எதுவும் செய்ய முடியாது
கடன் மற்றும் சம்பளம் மட்டுமல்லாமல், ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு டிக்கெட்டுக்கான ரீஃபண்ட் தொகையையும் வழங்கவேண்டுமானால் கண்டிப்பாக ரூ.400 கோடியை கொடுக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நாங்கள் எப்படி உதவ முடியும்
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கடிதத்தை அடுத்து சிவில் விமான போக்குவரத்துதுறை அமைச்சகம் தன் அதிகாரபூர்வ ட்வீட்டரில், ரீஃபண்ட் டிக்கெட் ரத்து செய்தது, மாற்று புக்கிங் விதிமுறைகளை கவனமாக ஆராய்ந்து பரிசீலித்து வருகிறோம். அனைத்து நடைமுறைகளும் ஒழுங்காகக் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வோம் என்று நம்பிக்கை அளித்துள்ளது. ஆனால் அதே சமயம், அந்த நிறுவனத்திடம் போதிய நிதியில்லை என்ற சூழ்நிலையில் மத்திய அரசு எப்படி ரீஃபண்ட் தொகைக்கு உத்தரவாதம் அளிக்க முடியும் என்பது தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது.
இங்க எல்லாமே சிஸ்டம்தான்
விமான டிக்கெட்டை பதிவு செய்து பெற்றுத் தரும் ட்ராவல் ஏஜெண்டுகள் தங்களுக்கான சேவைக் கட்டணத்தை (Service Charge) ஐஏடிஏ (IATA) அமைப்பின் மூலம் எளிதாக திரும்பப் பெற முடியும். ஆனால் ஒரு குறிப்பிட்ட விமான சேவை நிறுவனத்திடமிருந்து பெற வேண்டிய டிக்கெட்டுக்கான ரீஃபண்ட் தொகை அந்த நாளின் ஒட்டுமொத்த டிக்கெட் புக்கிங் தொகையை விட அதிகமாக இருந்தால் ஐஏடிஏ அமைப்பு ரீஃபண்ட் தொகையை தானாகவே நிறுத்தி விடும், இதனால் ட்ராவல் ஏஜென்டுகளும் பயணிகளுக்கு ரீஃபண்ட் தொகையை திரும்ப அளிக்க முடியாது.
பணம் வந்தால் தான் ரீஃபண்ட்
எஸ்பிஐ வங்கி தலைமையிலான 26 வங்கிகள் அடங்கிய வங்கிகள் கூட்டமைப்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்கு விற்பனையை முடிக்கும் வரை பயணிகளுக்கு டிக்கெட் ரீஃபண்ட் தொகையை அளிப்பதற்கு எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலை உள்ளது. ஆனாலும் ஏப்ரல் 18ஆம் தேதி வரையிலும் சேவை முழுதும் நிறுத்தப்படும் வரை ரத்து செய்யப்பட்ட சேவைகளுக்கான பயணிகள் டிக்கெட்டுகளுக்கான தொகை திரும்ப பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications