டெல்லி: நடப்பு 2019ஆம் ஆண்டில் பருவமழையை பஞ்சாங்கம் ஏற்கனவே கணித்து கூறியுள்ள நிலையில், நாடு முழுவதும் பருவமழை பரவலாக பெய்யும் என்றும் கரீப் பருவ விவசாயத்திற்கு கை கொடுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய 3வது பொருளாதார நாடாக விளங்கும் இந்தியாவில் பருவமழைதான் விவசாயத்திற்கு சுமார் 70 சதவிகித தண்ணீரை வழங்குகிறது.
மழையை நம்பித்தான் விவசாயம் செய்கின்றனர். ஓராண்டிற்கு பெய்து கெடுத்தால் மற்றொரு ஆண்டிற்கு காய்ந்து கெடுக்கிறது. பருவமழை சாதாரண அளவில் இருந்தால் இந்திய விவசாயம் பெருமளவில் பாதிக்கப்படும். கடந்த ஆண்டு கேரளா, கர்நாடகா, கொடகு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை அபரிமிதமாக பெய்தது. ஆறுகள் , குளங்கள் ஏரிகள் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி அழிந்தன. மற்றொரு புறம் தண்ணீர் இல்லாமையால் விவாசாயம் பாதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமபை பொய்த்துப் போனதன் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு இந்த ஆண்டும் தொடர்கிறது. பல பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை எட்டி பார்க்கிறது. பிப்ரவரி மாதத்தில் இருந்தே கடும் வெயில் வாட்டி வரும் நிலையில் நடப்பு ஆண்டில் ஜூன் மாதம் தொடங்க வாய்ப்புள்ள தென்மேற்கு பருவமழை சராசரி அளவுக்கு பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைகள்
கடந்த ஆண்டு பருவமழை சராசரிக்கும் குறைவான அளவே பெய்தது. இதனால் பருப்புகள், எண்ணெய் வித்துகள் மற்றும் தானியங்கள் உற்பத்தி குறைந்துள்ளன. தென்மேற்குபருவமழை 11% பற்றாக்குறையை கண்டுள்ளது. இதோடு வட கிழக்குபருவ மழையும் வழக்கத்தை விட 31% குறைந்துள்ளது.
பருப்பு உற்பத்தி குறைவு
தமிழ் நாட்டில் மட்டும்அல்லாமல் குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைகள் கடந்த ஆண்டு குறைந்ததை அடுத்து உற்பத்தியும் குறைந்துள்ளது. இதனால் ஏற்கனவே கரீப் மற்றும் ராபி பருவ பயிர்களானபருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி உள்ளிட்ட பல பாதிக்கப்பட்டுள்ளன.
பருவமழை பற்றிய ஆய்வு
இந்த நிலையில் நடப்பாண்டு பருவமழை பற்றி இந்திய வானிலை மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் , நாட்டின் பெரும்பாலான மாநிலங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் தென்மேற்கு பருவமழை பொழிவு குறித்து ஆய்வு நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.
பருவமழை பொழிவு எப்படி
1951ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலாக மாதங்களில், தென்மேற்கு பருவமழையின் சராசரி அளவு 89 சென்டி மீட்டர் என்றும், நடப்பு ஆண்டிலும் இதே அளவிலான மழை பொழிவு இருக்கக் கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சராசரியை விட கூடுதலாகவோ, அதிக அளவிலோ மழை பெய்ய வாய்ப்பு மிக, மிக குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது.
பருவமழை பாதிக்காது
தென்மேற்கு பருவமழை நாடு முழுக்க பரவலாக நன்றாக பெய்யும் என்றும் கரீப் பருவ விவசாயத்திற்கு மழை கை கொடுக்கும் என்றும் கூறியுள்ள வானிலை மையம், பருவமழை குறித்து ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் கணிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.
நார்மல் மழைதான்
இந்திய வானிலை மையம் ஆறுதல் செய்தி கூறும் அதே நேரத்தில் இந்தியாவில் பருவ மழைப்பொழிவு இந்த ஆண்டு சாதாரண அளவிலேயே இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கை மெட் தெரிவித்துள்ளது. இதனால் பண்ணை பொருளாதாரம் 2.6 டிரில்லியன் குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எல் நினோ தாக்கம் எப்படி
பசிபிக் பெருங்கடலில் சராசரியை விட வெப்பம் அதிகமாகி விட்டது, மார்ச் - மே மாதங்களில் எல் நினோவின் தாக்கம் 80 சதவிகிதம் என்பது ஜூன் முதல் ஆகஸ்டு வரை 60 சதவிகிதமாக குறைந்து விடுகிறது என்று ஸ்கைமெட்டின் நிர்வாக இயக்குநர் ஜாட்டின் சிங் கூறியுள்ளார். நடப்பு ஆண்டில் எல் நின்வோவின் அளவு குறைவதால் பருவமழை இந்த ஆண்டு மிகச் சாதாரண அளவிலே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.