டெல்லி: விமானங்களில் பயணம் செய்பவரிகளின் எண்ணிக்கை கடந்த மார்ச் மாதத்தில் குறைந்துள்ளது என்றும், கடந்த 4 வருட காலங்களில் இது மிகக் குறைந்த அளவு என்றும் சிவில் விமானப் போக்குவரத்து துறை இயக்குநரகம் வெளியிட்ட தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் பெரும்பாலானவை குத்தகை பாக்கியால் நிறுத்தப்பட்டதாலும் விமானங்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிகிறது.
ஒட்டுமொத்தமாக உள்நாட்டு விமானப் போக்குவரத்தை கணக்கில் எடுத்தால், கடந்த 2018ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தோடு ஒப்பிடும்போது நடப்பு 2019ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 0.01 சதவிகிதம் மட்டுமே குறைந்துள்ளது.
பக்கா பிளான்
வழக்கமாக கோடைகாலம் ஆரம்பிக்கும் முன்பே பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளுக்கும், குளிர்பிரதேசங்களுக்கும் சுற்றுலா செல்ல முன்கூட்டியே விமான டிக்கெட் முன்பதிவு செய்துவிடுவது வழக்கம். முன்கூட்டியே டிக்கெட்டுகளை எடுப்பதால் விலை மலிவாக கிடைக்கும் என்பதாலேயே அனைவரும் திட்டமிட்டு முன்பதிவு செய்துவிடுவது வழக்கம்.
விட்டாச்சு லீவு
மார்ச் மாதத்தின் மூன்றாம் வாரத்திலேயே நாட்டின் பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளுக்கு தேர்வு முடிந்து விடுமுறையும் விடப்பட்டிருக்கும். இதனால் எப்போது விடுமுறை விடப்படும் என்று காத்திருப்பவர்கள், தேர்வு முடிந்தவுடன் கோடை வெய்யிலில் இருந்து தப்பிக்க விட்டால் போதும் என்று மூட்டை முடிச்சுகளுடன் அனைவரும் குளிர் பிரதேசங்களுக்கு சென்று விடுவார்கள்.
பயணிகள் கவனிக்கவும்
ஆண்டு தோறும் தொடரும் வழக்கமான நடைமுறைதான். இதன் காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கும். ஆனால் இந்த ஆண்டு நிலைமை அப்படி இல்லை. நடப்பு 2019ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் விமான பயணிகளின் கணிசமாக குறைந்துள்ளது.
லோக்சபா தேர்தல்
நடப்பு 2019ஆம் ஆண்டில் விமான பயணிகளின் எண்ணிக்கு குறைந்ததற்கு இரண்டு முக்கிய காரணங்களாகும். முதலில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் லோக்சபா தேர்தல் காரணமாக அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரங்களில் பிஸியாக இருந்ததால், கோடை சுற்றுலாவை தற்காலிகமாக மறந்துவிட்டனர். தேர்தல் முடிந்தவுடன் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைப்பில் இருந்தவிட்டனர். இதன் காரணமாக மார்ச் மாதத்தில் விமான பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
ஜெட் ஏர்வேஸ் பிரச்சனை
மார்ச் மாதத்தில் விமான பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு மற்றொரு காரணம் ஜெட் ஏர்வேஸ் விமான சேவையில் ஏற்பட்ட தொய்வு. பைலட்களின் சம்பளப் பிரச்சனையாளும், குத்தகை பாக்கிகளாலும் பெரும்பாலான ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் படிப்படியாக நிறுத்தப்பட்டன. இதனால் ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் பயணம் செய்ய முடியாமல் போனது. இதுவும் மார்ச் மாதத்தில் விமான பயணிகளின் எண்ணிக்கை குறைந்தததற்கு காரணமாகும்.
மார்ச்சில் சிறிதளவே இறக்கம்
உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் சிறிதளவே அதிகரித்துள்ளது. இதற்கு ஜெட் ஏர்வேஸ் பிரச்சனைதான் முக்கிய காரணம் என்றும், இதனால் 0.14 சதவிகிதம் என்ற அளவிலேயே உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை கூடியுள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு விமான பயணிகள்
கடந்த மார்ச் மாதத்தில் 11 உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கையானது சுமார் 1 கோடியே 15 லட்சத்து 90 ஆயிரம் பேர். இதுவே கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 1 கோடியே 15 லட்சத்து 80 ஆயிரம் மட்டுமே. இதனால் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை பெரிய அளவில் சரிவை சந்திக்கவில்லை.
ஜெட் ஏர்வேஸ் ரத்து
ஒரு காலத்தில் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் விமான சேவை நிறுவனமாக இருந்த ஜெட் ஏர்வேஸ் கடன் பிரச்சனை, குத்தகை பாக்கி, பைலட்களின் சம்பளப் பிரச்சனையால் இதன் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் ஜெட் ஏர்வேஸ் தக்க வைத்திருந்த உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை கடந்த மார்ச் மாதத்தில் சுமார் 5.37 சதவிகிதமாக சரிந்தது. இதுவே கடந்த 2018ஆம் ஆண்டில் 10 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜெட்லைட் 6.71 லட்சம்தான்
குறைந்த விலையில் உள்நாட்டு விமான சேவையை வழங்கிவரும் மற்றொரு விமான நிறுவனமான ஜெட்லைட்(JetLite)ன் உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை கடந்த மார்ச் மாதத்தில் 6.71 லட்சமாக இருந்தது. அதுவே கடந்த 2018ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 15 லட்சமாக இருந்தது.
இண்டிகோ ஏர்லைன்ஸ் 54 லட்சம்
உள்நாட்டு விமான பயணிகளுக்கு பிடித்தமான பட்ஜெட் விமான சேவை நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸில் கடந்த மார்ச் மாதத்தில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 46.9 சதவிகிதம் அதாவது 54 லட்சமாகும். இதன் போட்டி நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் விமான பயணிகளின் எண்ணிக்கை ஒட்டுமொத்த விமான பயணிகளின் எண்ணிக்கையில் 13.6 சதவிகிதம் மட்டுமே.
ஏர் இந்தியா கேன்சல்
அரசுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா விமான பயணிகளின் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் அவ்வளவாக சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. இதற்கு போதிய அளவில் பயணிகளிடம் வரவேற்பு இல்லாததால் பெரும்பாலான ஏர் இந்தியா விமானங்கள் சேவையை ரத்து செய்துவிட்டு ஓடுதளத்தில் ஓரங்கட்டப்பட்டன. மொத்தத்தில் 8.94 சதவிகித விமான சேவையை மட்டுமே ஏர் இந்தியா விமானங்கள் தந்துள்ளன.
முதலிடத்தில் கோ ஏர்தான்
விமானங்களை சரியான நேரத்தில் திட்டமிட்டபடி இயக்கி பயணிகளை கவர்வதில் கடந்த 6 மாதங்களில் 95.2 சதவிகிதத்துடன் கோஏர் நிறுவனம் முதலிடத்திலும், ஸ்பைஸ்ஜெட் 91.4 சதவிகிதத்துடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது.