பெங்களூரு: Amazon நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனமான அமேஸான் ரீடெயில் இந்தியா ஒரு பெரிய முடிவை எடுத்திருக்கிறது. அதுவும் வியாபாரத்தை விரிவுபடுத்தும் சம்பந்தமாக எடுத்திருக்கிறார்கள்.
இந்தியாவின் 60 டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் Amazon ரீடெயில் இந்தியாவின் சேவையை வழங்கப் போகிறார்களாம். தற்போது வரை இந்தியாவின் 100 பெரு நகரங்களில் மட்டுமே தன் சேவையை வழங்கி வருகிறது அமேஸான் இந்தியா.
எனவே இந்தியாவின் பல டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் தங்கள் டெலிவரி செண்டர்களை அமைக்கும் வேலைகளில் இருக்கிறார்களாம்.
சீனா வேண்டாம்
சீனாவில் இருக்கும் போட்டி நிறுவனங்கள், அமேஸானால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு கடினமான சீன சட்ட திட்டங்கள், சீன ஊழியர்கள் பிரச்னை, அமெரிக்க சீன வர்த்தகப் போர் போன்ற காரணங்களால் அமேஸான் சீனாவில் இருந்து வெளியேறுவதாகச் சொன்னது.
இந்தியா தான்
எனவே சீனாவில் இனி இ காமர்ஸ் வியாபாரம் பெரிதாகச் செய்யப் போவதில்லை எனச் சொல்லி இருக்கிறார்கள். உலகின் அதிக மக்கள் (வாடிக்கையாளர்கள்) கொண்ட நாட்டில் இருந்து பின் வாங்கிவிட்டார்கள். இனி அமேஸானின் கவனம் உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை (வாடிக்கையாளர்களைக்) கொண்ட நாடான இந்தியாவில் முழு கவனத்தையும் கொடுக்கப் போவதாகவும் சொன்னது.
240 கோடி முதலீடு
இந்த மாத தொடக்கத்தில் தான் அமேஸான் நிறுவனம் தன் துணை நிறுவனமான அமேஸான் ரீட்டெயில் இந்தியாவில் 240 கோடி ரூபாயை முதலீடு செய்தது. இந்தியாவில் முதல் இலக்காக மளிகை சாமான்களைக் குறி வைத்திருக்கிறதாம். அதற்கு வாகாக அமேஸான் பாண்ட்ரி (Pantry) மற்றும் அமேஸான் ப்ரைம் நவ் (Prime Now) என இரண்டு பிராண்டுகளை அமைத்திருக்கிறார்கள். இந்த இரண்டுமே பிரத்யேகமாக மளிகை சாமான்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை டெலிவரி செய்வதற்கே அமைத்து இருக்கிறார்களாம்.
மளிகை சாமானுக்கு ஓகே
கடந்த டிசம்பர் 2018-ல் வந்த இ - காமர்ஸ் அரசு கொள்கைகள் படி அந்நிய நேரடி முதலீடுகள் மூலம் இந்தியாவில் இயங்கும் நிறுவனங்களுக்கு கடுமையான நெறிமுறைகளைக் கொண்டு வந்தன. ஆனால் இந்த நெறிமுறைகள் இந்தியாவின் உணவுத் துறையில் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களுக்கு பொருந்தாது எனச் சொல்லிவிட்டது அரசு. எனவே தற்போது அமேஸான் ரீட்டெயில் இந்தியாவால் இந்திய மளிகை சாமான்களில் கை வைக்க முடிந்திருக்கிறது.
மளிகை சாமான் தான்
2018-ல் ஃப்ளிப்கார்ட் நிறுவனமும் தன் மளிகை சாமான்கள் இ-காமர்ஸ் வியாபாரத்தை காப்பாற்றிக் கொள்ள, பன்மடங்கு பெருக்க தனியாக கடையைப் போட்டு வியாபாரம் பார்த்து வருகிறது. இப்போது அமேஸானும் மளிகைக் கடைகளில் கால் வைத்திருக்கிறது. இந்தியாவில் கால் வைக்கும் அனைத்து இ-காமர்ஸ் நிறுவனங்களுக்குமே மளிகை சாமான்களை, பெரிய பிசினஸாகப் பார்க்கிறார்கள். காரணம் மீண்டும் மீண்டும் வாங்குவார்கள். ஒரு முறை வாடிக்கையாளரை கவர்ந்துவிட்டால், நிச்சயம் மீண்டும் மீண்டும் வருவார்கள் என்பதால் இதற்கு அடித்துக் கொள்கிறார்கள் இ காமர்ஸ் நிறுவனங்கள்.