சான் பிரான்சிஸ்கோ: உலகின் முன்னனி ஆன்லைன் பேமெண்ட் சிஸ்டங்களில் ஒன்றான பேபல் (Paypal), உலகின் மிகப் பெரிய டாக்ஸி அக்ரிகேட்டர் நிறுவனமான உபரில் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யப் போகிறார்களாம்.
சமீபத்தில் தான் உபர் டெக்னாலஜீஸ் நிறுவனம் சுமாராக 80 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 120 பில்லியன் அமெரிக்க டாலர் வரை அமெரிக்க பங்குச் சந்தைகளில் ஐபிஓ (IPO - Initial Public Offering) வழியாக திரட்ட விண்ணப்பித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.
அதோடு, கோல்டுமேன் சாக்ஸ் மற்றும் மார்கன் ஸ்டான்லியின் சில அதிகாரிகளும் ஒரு நல்ல பெரிய தொகையை ஐபிஓ மூலம் திரட்டிக் கொடுக்க திட்டமிட்டுக் கொண்டிருப்பதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
முதலீடு செய்
பேபல் (Paypal) நிறுவனம் தொடர்ந்து இப்படிப்பட்ட முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் தன்னளவில் ஒரு நல்ல வளர்ச்சி காட்ட முடியும். இப்படிப்பட்ட உலகின் முன்னனி நிறுவனங்களில் முதலீடு செய்தால் தான் பேபல் (Paypal) நிறுவனத்துக்கு லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களையும், அவர்களின் தரவுகளையும் பெற முடியும். அப்படியே தன் வியாபாரத்தையும் பெருக்கிக் கொள்ள முடியும் என்கிறார்கள் அனலிஸ்டுகள்.
உபரோடு வியாபாரம்
கடந்த மார்ச் 2019-ல் தான் பேபல் (Paypal) நிறுவனம் அர்ஜெண்டினாவின் மிகப் பெரிய இ காமர்ஸ் நிறுவனமான மெர்காடொ லிப்ரே (Mercado libre) என்கிற இ காமர்ஸ் நிறுவனத்தில் முதலீடுகளை மேற்கொண்டார்கள். கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து, பேபல் (Paypal) நிறுவனம், உபர் நிறுவனத்தின் பேமெண்ட்களை பெறும் பேமெண்ட் சிஸ்டம்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உபரின் முக்கிய பேமெண்ட் சிஸ்டங்களில் ஒன்றாக இன்று வரை இருந்து வருகிறது. ஆனால் மற்ற சில பேமெண்ட் சிஸ்டம் நிறுவனங்களும் உபரில் இருக்கின்றன் என்பதும் கவனிக்க வேண்டும்.
2-வது பெரிய முதலீடு
சில வாரங்களுக்கு முன் தான் உபர் நிறுவனம் ஜப்பானின் சாஃப்ட் பேங்க் மற்றும் டொயோட்டா நிறுவனங்களிடம் இருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கு நிதி திரட்டியது. இப்போது மீண்டும் உபர் நிறுவனம் பேபல் (Paypal) நிறுவனத்திடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டாலரைத் திரட்டுகிறது. ஆக உபர் நிறுவனம் வரும் மே 2019-க்குள் ஐபிஓ மூலம் 80 - 120 பில்லியன் அமெரிக்க டாலர், நிதி திரட்ட விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்த ஐபிஓ விண்ணப்பத்துக்குப் முன் உபர் நிறுவனம் பெறும் இரண்டாவது பெரிய முதலீடு இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த் மஹிந்திரா
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் நம் இந்தியாவின் கார் உற்பத்தியாளர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா உபரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். "எப்படி லாபமே இல்லாமல், இப்படி ஒவ்வொரு முறையும் கோடிக் கணக்கில் முதலீடுகளைத் திரட்டுகிறார்கள். லாபம் இல்லாத ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்ய, வெஞ்சர் ஃபண்டிங் நிறுவனங்களுக்கு எப்படி மனம் வருகிறது, எதைப் பார்த்து இந்த பிசினஸ் தேரும் என முதலீடு செய்கிறார்கள் எனத் தெரியவில்லை, என்னால் இந்த ஸ்டார்ட் அப் ஃபண்டிங் முறையை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை" என்றார்.