சான் பிரான்சிஸ்கோ: ஆர்.எஸ்.ஏ செக்யூரிட்டி என்கிற நிறுவனம் சமூக வலைதள குற்றங்கள் குறித்து ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸப் போன்ற இடங்களில் தான் இப்போது திருடர்கள் அதிகம் நடமாடத் தொடங்கி இருக்கிறார்களாம்.
கடந்த 2018 ஒரு வருடத்தில் மட்டும் சமூக வலை தளங்களில் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை, 2017-ம் ஆண்டை விட 43 சதவிகிதம் அதிகரித்திருக்கிறதாம். சைபர் திருடர்கள் தற்போது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸப் போன்ற சமூக வலைதளங்களையே தங்களுக்குள் பேசிக் கொள்ள பயன்படுத்துகிறார்களாம்.
வெறும் பேசிக் கொள்வதோடு நிற்காமல் திருடிய விஷயங்களை (Credentials-களை) விற்கவும் சமூக வலைதளங்களையே அதிகம் பயன்படுத்துகிறார்களாம். மிக எளிதில் யார் வேண்டுமானாலும் சமூக வலைதளங்களில் கணக்கைத் தொடங்கி பயன்படுத்தும் வசதி, கட்டணங்கள் செலுத்தத் தேவை இல்லாதது போன்றவைகள் சமூக வலைதளங்களில் அதிக குற்றங்கள் நடக்க அடி நாதமாக இருக்கிறதாம்.
2019-ல் தொடரும்
2018-ஐப் போல 2019-லும் சமூக வலைதள குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனச் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.ஏ செக்யூரிட்டி என்கிற நிறுவனம் வெளியிட்டிருக்கும் ‘Current State of Cybercrime - 2019' அறிக்கை. இந்த ஆர்.எஸ்.ஏ செக்யூரிட்டி நிறுவனத்தின் ஆராய்ச்சியில் மொபைல் போன் வழியாகத் தான் 70 சதவிகிதத்துக்கு மேலான குற்றங்கள் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
முதல் இலக்கு
இந்த திருடர்களூக்கு நாம் நம் ஸ்மார்ட்போனில் பதிந்து வைத்திருக்கும் க்ரெடிட் கார்ட் எண்கள், வங்கி நெட் பேங்கிங் கடவுச் சொற்கள், ஏடிஎம் கார்ட் எண்கள் போன்றவைகளை திருடுவது தான் முதல் இலக்காம். கடந்த 2015-ம் ஆண்டில் 100 சமூக வலைதள குற்றங்கள் நடந்தது என்றால் 2018-ல் 680 சமூக வலைதள குற்றங்கள் நடந்திருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சமூக வலைதள குற்றங்களின் எண்ணிக்கை சுமார் 6.8 மடங்கு அதிகரித்திருக்கிறது.
போலி அப்ளிகேஷன்கள்
கடந்த 2018-ம் ஆண்டில் நடந்த மொத்த சைபர் திருட்டுக்களில் 20% திருட்டுக்கள் போலி அப்ளிகேஷன்கள் மூலம் நிதானமாக திட்டமிட்டு செய்யப்பட்டவைகள். நாள் ஒன்றுக்கு சராசரியாக 82 போலி மொபைல் செயலிகளை ஆர்.எஸ்.ஏ செக்யூரிட்டி நிறுவனத்தால் அசால்டாக கண்டு பிடிக்க முடிந்ததாம். அதுவும் நல்ல ஆப் ஸ்டோர்களிலேயே கிடைக்கிறதாம்.
எச்சரிக்கை
எனவே இந்த டிரெண்டு இந்த 2019-ம் ஆண்டிலும் வரும் என்பதால், நம்மை எச்சரிக்கையாக இருக்கச் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.ஏ செக்யூரிட்டி நிறுவனத்தினர்கள். அதோடு சைபர் திருடர்கள் ஒவ்வொரு நாளும் புதுப் புது டெக்னிக்குகளிலும், புதிய டெக்னாலஜிகளையும் பயன்படுத்தி திருட முயற்சிக்கிறார்கள். புது புது வழிகளில் பிஷ்ஷிங் மற்றும் மால்வேர்களை வைத்து மொபைல் பயன்பாட்டாளர்களைத் திருட முயற்சிக்கிறார்கள் எனவும் எச்சரிக்கிறது ஆர்.எஸ்.ஏ செக்யூரிட்டி அறிக்கை.