புதுடெல்லி: கடந்த 18 ஆண்டுகளில் பிரதமர் மோடி 5 முறையும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 6 முறையும் வருமான வரி ரீபண்ட் பெற்றுள்ளனர்.
வருமானவரி செலுத்துவோரிடம் கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட வரியை, முழுமையான கணக்கு தணிக்கைக்குப் பிறகு வருமான வரித்துறை அவர்களுக்கே திருப்பி கொடுத்து விடும் (ரீபண்ட்) வழக்கம் நடைமுறையில் உள்ளது. அதன்படி, இந்த கூடுதல் வரி தொகையை யார் எல்லாம் திரும்ப பெற்றுள்ளார்கள் என்பதை, வரி செலுத்துவோர்களின் பான் எண்ணை பயன்படுத்தி, வருமான வரித்துறை இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
இதில் கடந்த 2001-02-ம் நிதியாண்டு முதல் இந்த விவரம் கிடைக்கிறது. மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவுடன் சொத்து விவரம், பான் எண் உள்ளிட்ட தகவலை தெரிவிக்க வேண்டும். விஐபி வேட்பாளர்களின் பான் எண் மூலம் அவர்கள் இதுவரை எத்தனை முறை வருமானவரி கூடுதல் தொகையை திரும்ப பெற்றுள்ளனர் என்ற விவரம் செய்தியாக வெளியாகியுள்ளது.
மோடி 5 முறை- ராகுல் 6 முறை
அதன்படி, பிரதமர் மோடி கடந்த 18 ஆண்டுகளில் கூடுதலாக செலுத்திய வருமான வரியை 5 முறை திரும்ப பெற்றுள்ளார் என்றும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 6 முறை திரும்ப பெற்றுள்ளார் என்றும், சோனியா காந்தி 5 முறையும் வருமான வரி கூடுதல் தொகையை திரும்ப பெற்றுள்ளார்.
அமித்ஷாவுக்கு நிலுவை ஏதும் இல்லை
இதே பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு கடந்த 2015-16ம் ஆண்டில் இந்த கூடுதல் தொகை, நிலுவைத் தொகையுடன் சமன் செய்யப்பட்டுள்ளது. கடந்த 18 ஆண்டுகளில் வேறு எந்த கூடுதல் வரி தொகையையும் திரும்ப பெறவில்லை என்பது கவனிக்கதக்கது.
சரி எப்படி இந்த ரீபண்டை பெறலாம்
மாதச்சம்பளம் வாங்குவோரும், தனிநபர் பிரிவினரும், நிறுவனங்களும், தங்கள் வருமானத்திற்கு உரிய வரியை விட கூடுதலான வரியை செலுத்தி இருந்தால் உபரி வரியை (Refund) வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்த நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் வட்டியுடன் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலை நிலவி வந்தது. ஆனால் இதற்காக தற்போது மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையின் படி, முன்னதாக வரி செலுத்துவோரின் உபரி வரியை திரும்ப பெறுவதற்கும் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது.
விரைவில் ரீபண்ட் பெறுவதற்கான மென்பொருள்
தற்போது மத்திய அரசின் முயற்சியால் கால விரயமும் பண விரயமும் முற்றிலும் தடுக்கப்படும் விதமாக ஒரே நாளில் ரீபண்ட் பெறுவதற்கான புதிய மென்பொருள் தயாரிக்கப்பட உள்ளது என்றும், இதன் மூலம் மாத சம்பளம் வாங்குவோரும், நிறுவனங்களும் வருமான வரிக் தாக்கல் செய்த அடுத்த நாளே பெறமுடியும் என்றும் அறிவித்திருந்தார்.