வணிக ரீதியிலான விமானங்கள் மற்றும் போர் விமானங்களைத் தயாரிக்கும் பிரெஞ்சு நாட்டு நிறுவனமான Airbus-ன் மார்ச் 2019 காலாண்டு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.
கடந்த மார்ச் 2018-ல் ஈட்டிய 2,250 கோடி ரூபாய் லாபத்தில் சுமார் 86% சரிந்து வெறும் 315 கோடி ரூபாயைத் தான் லாபமாக ஈட்டி இருக்கிறார்களாம். ஆனால் ஏர்பஸ் நிறுவனத்தின் வருவாய் 24% அதிகரித்து 12.5 பில்லியன் யூரோக்களாக இருக்கிறது.
இதற்கு என்னய்யா காரணம் எனக் கேட்டால் Airbus A380 ரக விமானம் நிறுத்தப்பட்டது மிகப் பெரிய வியாபாரம் காரணம் என கதறுகிறது Airbus நிறுவனம்.
நஷ்டங்கள்
கடந்த மார்ச் 2019 காலாண்டில் நீண்ட நாட்களாக பிரச்னையில் இருந்த 190 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான டீல் காலியானது. 83 மில்லியன் யூரோ, டாலர் ப்ரீ டெலிவரி பேமண்ட் பிரச்னைகளில் ஒத்துப் போகாமல் துருத்திக் கொண்டிருந்தது. அதை மீண்டும் மறு மதிப்பீடு செய்ததில் ஏற்பட்ட நஷ்டம் எல்லாம் நிதி சார்ந்த பிரச்னைகள். ஆனால் வியாபார ரீதியில் Airbus A380 இனி தயாரிக்கப்படாது என அறிவித்ததால் வர வேண்டிய குறைந்தபட்ச ஆர்டர்களும் வராமல் போனதால் தான் இன்னொரு 61 மில்லியன் யூரோ நஷ்டம் என களங்கிக் கொண்டிருக்கிறார்களாம்.
ஏர்பஸ் ஏ380
டிசம்பர் 2000-ம் ஆண்டில் Airbus A380-க்கான அடிக்கல் நாட்டப்பட்டு வேலையைத் தொடங்கினார்கள். ஏர்பஸ் திட்டப்படி இந்த Airbus A380-ல் 850 பயணிகள் பயணிக்கலாம். நான்கு அசுர இன்ஜின்களைக் கொண்ட ராட்சசன், இதன் போட்டி விமானமான போயிங் 757 இன் ஜின்களை விட 30% கூடுதல் சக்தி வாய்ந்த இன்ஜின்கள் கொண்ட இரண்டடுக்கு விமானத்தை கட்டமைத்தார்கள். அதோடு விமானத்தின் எடையைக் குறைக்க ஏகப்பட்ட காம்போசைட் மெட்டீரியல்களை புதிதாக உருவாக்கி அதனை மூலப் பொருளாக வைத்து விமானத்தைத் தயாரித்தார்கள்.
ஏர்பஸ் ஏ380 தூரம்
ஒரு தடவை தரையை விட்டு கிளம்பினால் தொடர்ந்து 13 மணி நேரம் அல்லது 14,500 கிலோமீட்டர் வரை தொடர்ந்து பறக்கும். நடுவில் எரிபொருள் நிரப்பத் தேவை இல்லை என புதிய உலக சாதனை படைத்தது. இன்றைய தேதி வரை உலகின் சிறந்த நேவிகேஷன் சிஸ்டங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட அதிக பயணிகள் பயணிக்க கூடிய விமானமும் நம் Airbus A380 தானாம்.
சொகுசு விமானம்
Qatar Airways, Ethihad airways, Emirates airways என சொகுசு விமானங்களை அதிகம் பயன்படுத்தும் விமான நிறுவனங்கள் நம் ஏ380-க்குத் தான் டிக் அடித்திருக்கிறார்கள். இதுவரை 313 ஏ380 ஆர்டர்களில் 123 ஆர்டர்கள் எமிரேட்ஸ் நிறுவனம் கொடுத்தது. அந்த அளவுக்கு சொகுசு அறைகள், பார்கள், உணவகங்கள், கெசினோக்கள் என பல வசதிகளோடு கூடிய விமானங்களில் ஏ380 ஈடு இணையற்றது.
அதனால் தான் ஏர்பஸ் ஏ380
1970-ல் இருந்து போயிங் சம்பாதித்து வைத்திருக்கும் பெயரை காலி செய்து சந்தையில் தன் பெயரை நிலை நாட்டிக் கொள்ளத் தான் ஏர்பஸ் தன்னுடைய ஏ380 மாடலுக்கு உயிர் கொடுத்தது. அந்த முயற்சியில் தாங்கள் தோற்றுவிட்டதை ஒப்புக் கொண்டது ஏர்பஸ். இனி ஏ380-க்கான ஆர்டர்கள் வாங்கப்படாது, உற்பத்தியை நிறுத்த இருக்கிறது ஏர்பஸ் நிறுவனம். Airbus A380 பயணிகளைக் கவர்ந்த அளவுக்கு விமான நிறுவனங்களைக் கவரவில்லை. குறைவான மைலேஜ் கொடுப்பது, எளிதில் அனைத்து இருக்கைகளும் நிரம்பாதது என இந்த இரண்டு காரணங்களும் Airbus A380-க்கு நோ சொல்ல வைத்தது.
ஏன் நிறுத்தம்
ஒரு பொருளை உற்பத்தி செய்ய வேண்டும் என்றால் அந்த பொருளுக்கு ஒரு குறைந்த பட்ச தேவை வேண்டும். அப்போது தான் ஒரு நிறுவனம் ஒரு பொருளை தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டே இருக்க முடியும். ஆனால் ஏ380 ரக விமானத்துக்கான தேவை நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருகிறது. 2007-ல் தொடங்கிய ஏ380-ன் உற்பத்தி 2012 - 13 காலங்களில் ஆண்டுக்கு 30 விமானம் என வந்தது தான் மிகப் பெரிய ஆர்டர்களாம். அதன் பின் போதுமான ஆர்டர்கள் வரவில்லையாம். அதனால் கடந்த பிப்ரவரி 2019-ல் நாங்கள் எங்கள் செல்லம் Airbus A380-க்கு விடை கொடுக்கிறோம் என அழுதே விட்டார்கள் Airbus நிர்வாகிகள்.