சான் பிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவனத்தின் 5ஜி மோடெம் திட்டத்தின் தலைவராக இருந்த ருபென் கபெல்லெரோ (Ruben Caballero), ஆப்பிள் நிறுவனத்தின் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார்.
இதற்கு முக்கிய காரணமாக சில நிர்வாக பிரிவுகளை மாற்றியமைத்தது மற்றும் ஆப்பிள் நிறுவனம் க்வால்காம் நிறுவனத்தோடு மோடம் டீல்களில் பணம் கொடுத்து கையெழுத்திட்டது என்கிறார்கள் ஆப்பிள் ரசிகர்கள்.
ருபென் பதவி விலகிய உடனேயே பேச்சு வார்த்தையே நடக்கவில்லை போல. உடனடியாக ருபென்னின் விவரங்கள் அனைத்தும் ஆப்பிள் நிறுவனத்தின் பதிவுகளில் இருந்து எடுத்துவிட்டார்களாம். அதோடு ஆப்பிள் நிறுவன ஊழியர்களின் பதவி சார்ட்களிலும் ருபென்னின் பெயரை உடனடியாக எடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
2005 முதல்
ருபென் கடந்த 2005-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் முன்னிலையிலேயே வேலைக்கு சேர்ந்திருக்கிறார். ஆப்பிள் நிறுவனத்தின் பல முன்னனி திட்டங்களில் பணியாற்றி இருக்கிறார். ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட முதல் 3ஜி போன்கள், ஐபோன்கள், எல் டி இ போன்ற வொயர் லெஸ் நெட்வொர்க்கிங் என பல நுணுக்கமான திட்டங்களிலும் பணியாற்றி இருக்கிறாராம்.
சமாதானம்
சமீபத்தில் தான் ஆப்பிள், க்வால்காம் நிறுவனத்துடன் 5 - 6 பில்லியன் அமெரிக்க டாலரைக் கொடுத்து அனைத்து வழக்குகளையும் முடித்துக் கொள்ளுமாறு பேசி இருக்கிறார்கள். இதில் ஆப்பிள் நிறுவனம் க்வால்காம் நிறுவனத்துக்கு ப்ராசசர்களை தயாரிக்கக் கொடுத்த ஒப்பந்தங்கள் தொடர்பான வழக்குகள், உட்பட அனைத்து வழக்குகளையும் பின் வாங்குமாறு ஆப்பிள் க்வால்காமிடம் சமாதானம் பேசி இருக்கிறதாம்.
பதில் இல்லை
இவ்வளவு பெரிய விஷயத்தைப் பற்றி ஆப்பிள் நிறுவன தரப்பில் இருந்தோ, ஆப்பிள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளிடம் இருந்தோ இதுவரை ஒரு சின்ன மறுப்பு அல்லது ஏற்பு என ஒரு ரியாக்ஷனும் வெளியாகவில்லை. அவ்வளவு ஏன்..? சம்பிரதாயத்துக்கு ஒரு ஏற்பு அல்லது மறுப்புக் கடிதம் கூட வெளியாகவில்லை. எனவே ஆப்பிள் இப்படி க்வால்காமுடன் பணம் கொடுத்து சமாதானமாக போவது உண்மையாக இருக்கலாம் என பல செய்திகளூம், ஆப்பிள் ரசிகர்களும் கசப்பாக ஏற்றுக் கொள்கின்றார்களாம்.
க்வால்காம் சிப்புடன் ஆப்பிள் ஐபோன்
இதை எல்லாம் ஒரு பக்கம் வைத்து விடுங்கள். வரும் 2020-ம் ஆண்டில் தான் க்வால்காம் நிறுவனத்தின் ப்ராசசர்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் முதல் ஆப்பிள் ஐபோன் சந்தைக்கு வர இருக்கும் விஷயம் தெரியும் தானா..? அந்த செய்தியையும் இங்கு நினைவு கூற வேண்டி இருக்கிறது. எல்லாம் வியாபாரம் படுத்தும் பாடு.