கடந்த 2018-ல் ஒரே வருடத்தில் உலகில் 150.06 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்கப்பட்டிருக்கின்றன. இதில் சாம்சங் முதலிடத்தில் இருக்கிறது. 2018 டிசம்பர் கணக்குப் படி சாம்சங் தான் 19.45% ஸ்மார்ட்ஃபோன் சந்தையை கையைல் வைத்திருக்கிறது.
கடந்த 2018-ல் சாம்சங் நிறுவனம் மட்டும் சுமார் 29.18 கோடி ஸ்மார்ட்போன்களை உலகம் முழுக்க விற்று இருக்கிறார்கள்.
சாம்சங்கைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனமும், சீனாவின் ஹூவாய் (Huawei)நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆப்பிள் 2018-ல் 20.63 கோடி ஸ்மார்ட்போன்களையும், ஹூவாய் நிறுவனம் 20.52 கோடி ஸ்மார்ட்போன்களையும் விற்று இருக்கிறார்கள்.
இது எங்க ஏரியா..?
ஒவ்வொரு பிராண்ட் செல்போன்களுக்கும் ஒரு தனி கஸ்டமர் பேஸை வைத்திருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் ஷியாமி, நோக்கியா, சாம்சாங் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் என்றால் பட்ஜெட் கஸ்டமர்கள் தான். ஆனால் குறைவான போனை விற்றாலும் நல்ல லாபம் பெற விலை உயர்ந்த போன்களை, கொஞ்சம் அதிக வசதியோடு கொடுக்க வேண்டும் எனவும் யோசிக்கிறார்கள். அப்படி 35,000 ரூபாய்க்கு மேல் விலை உள்ள போன்களை இந்திய சந்தைகளில் விற்க ஆப்பிள், சாம்சங், ஒன்பிளஸ் போட்டி போடுகிறார்கள்.
இவ்வளவு தானா..?
முன்பே சொன்னது போல இந்தியாவில் 150 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை ஆனாலும், வெறும் 4.5 கோடி ஸ்மார்ட் போன்கள் தான் இந்த 35,000 ரூபாய்க்கு மேல் விலை வைத்து விற்கப்பட்டவைகள். அதாவது மொத்த இந்திய சந்தையில் வெறும் 3 சதவிகிதம். இந்த எலைட் பிரியர்களின் கையில் சென்று சேரத் தான், இந்த மூன்று பெரு நிறுவனங்களும் அடித்துக் கொள்கிறார்கள்.
சந்தையை பிடிக்க வேண்டும்
இன்று 35,000 ரூபாய் செல்போனால் என்ன வேலைகளை எல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாமே 10,000 ரூபாய் போனும் கிட்டதட்ட செய்துவிடுகிறது. ஆனால் நிச்சயமாக 35,000 ரூபாய் செல்போன் அளவுக்கு திறமையாக செய்ய முடிவதில்லை. ஆக இந்த 35,000 ரூபாய்க்கு மேல் விலை உள்ள செல்போன்களை விற்பது அத்தனை சிரமமான விஷயமாக இருக்கிறது. எனவே எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்துவிட்டு விலையைக் குறைக்க முடிவு செய்திருக்கிறார்கள் பெரு நிறுவனங்கள். ஆம் ஆப்பிள், சாம்சங் மற்றும் ஒன்பிளஸ் என அனைவருமே தங்கள் ஸ்மார்ட் போன் விலையை வரிசையாக குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு சில உதாரணங்களும் இருக்கின்றன.
எவ்வளவு குறைத்திருக்கிறார்கள்
ஆப்பிள் தன் XR ரக ஐபோனின் விலையை 23,000 ரூபாய் வரை குறைத்து வெறும் 53,000 ரூபாய்க்கு விற்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
சாம்சங் தன் கெலாக்ஸி S10 ஸ்மார்ட் போனை 11,000 ரூபாய் குறைத்து சுமார் 47,000 ரூபாய்க்கு கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
ஒன்பிளஸ் தன் ஒன்பிளஸ் 7 சீரிஸை மே 14-ம் தேதி சுமார் 45,000 ரூபாயில் (கணிப்பு தான்) களம் இறக்க இருக்கிறது. இதுவரை வெளியான ஒன்பிளஸ் மாடல்களை சாம்சங் மற்றும் ஆப்பிள் உடன் ஒப்பிட்டால் தொடர்ந்து விலை குறைவாகவே கொடுத்து வந்திருக்கிறது. ஆக இந்த மூன்று பெரு நிறுவனங்களில் விலையின் அடிப்படையில் ஒன்பிளஸ் சந்தையை ஏற்கனவே பிடித்திருக்கிறது.
எப்படியும் வாங்கலாம்
இதுவரை 35,000 ரூபாய்க்கு மேல் விலை உள்ள போன்கள் அனைத்துக்குமான விலை வித்தியாசம் 10,000 தொடங்கி 30,000 வரை கூட அசால்டாக இருக்கும். அதற்கு கெலாக்ஸி சீரிஸ் ரக சாம்சங் செல்போன்களுக்கும் ஐபோன்களுக்குமான விலையே சாட்சி. ஆனால் இப்போது கூடுமான வரை எல்லா பிரீமியம் ஸ்மார்ட் போன்களையும் 50,000 ரூபாய்க்குள் நாம் எதிர்பார்க்கலாம். ஆக 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலவழித்தால், எந்த பிராண்டின் ஸ்மார்ட் போனையும் வாங்க முடியும் அளவுக்கு விலை வித்தியாசம் குறைந்திருக்கிறது. சுருக்கமாக, மீண்டும் இந்தியாவில் விலை தான் விற்பனையைத் தீர்மானிக்கிறது. அதை ஆப்பிள், சாம்சங் மற்றும் ஒன்பிளஸ் ஒப்புக் கொண்டார்கள்.