டெல்லி : ஐ.எல்&எஃப்.எஸ் ஒரு தனியார் நிதி நிறுவனம் என்றாலும், இதன் குழும நிறுவனங்களின் பங்கு மற்றும் கடனில் பொதுத் துறை நிறுவனங்களின் முதலீடு பெருமளவு இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயமாகும். இந்த நிலையில் சமீபத்தில் பெரும் நிதி நெருக்கடியில் திவால் ஆகும் நிலைக்கு ஆளான ஐ.எல் & எஃப்.எஸ் நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளை நிர்வகித்து வந்த டிலாய்ட் நிறுவனத்துக்கு அரசு ஐந்து ஆண்டுகள் தடை விதிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.எல் & எஃப்.எஸ் மிகப்பெரிய கட்டுமானத் திட்டங்கள் மற்றும் நிதி சேவைகள் செய்து வரும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் இந்திய வங்கிகளில் 91,000 கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்த முடியாமல் திவால் ஆகும் நிலைக்கு ஆளாகி வருகிறது. இந்த நிலை இந்திய வங்கிசாரா நிதி நிறுவனங்கள் துறையையே தடுமாற செய்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் அரசு நேரடியாக தலையிட்டு, நிறுவனத்தின் நிர்வாகக் குழுவை மாற்றி அமைத்து தேவையான சீரமைப்பு மற்றும் நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டு வருகிறது.

இந்த நிலையில் ஐ.எல் & எஃப்.எஸ் நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளை நிர்வகித்து வந்த டிலாய்ட் நிறுவனத்தின் மீது அரசின் கவனம் திரும்பியுள்ளது. ஐ.எல் & எஃப்.எஸ் கணக்கு தணிக்கையில் டிலாய்ட் நிறுவனம் சமர்ப்பித்துள்ள கணக்கு விவரங்களில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கணக்குகளில் முரண்பாடு
ஐ.எல் & எஃப்.எஸ் நிறுவனத்தில் 347 துணை நிறுவனங்கள் உள்ளன. இந்த துணை நிறுவனங்களில் பல வெளிநாடுகளிலும் இயங்குகின்றன. இவற்றின் கணக்குகளில் முரண்பாடுகள் இருப்பதன் மூலம் பெரிய அளவில் நிறுவனத்தின் கணக்குகளில் மோசடி நிகழ்ந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே, டிலாய்ட் நிறுவனத்தின் மீது நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்கவும் தற்போது திட்டமிட்டுள்ளது அரசு.
ஐந்து ஆண்டுகள் வரை தடை
கடந்த வாரம் டிலாய்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியிடம், இதுகுறித்து விசாரணையை விசாரணைக் குழு நடத்தியது. இந்த நிலையில் இந்நிறுவனத்துக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை தடை விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இன்னும் என்னென்ன மோசடிகள்
இதற்கு முன் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மோசடி விவகாரத்தில் அதன் கணக்குகளை நிர்வகித்து வந்த பிரைஸ் வாட்டர் ஹவுஸ் நிறுவனத்துக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். அந்த வகையில் இந்தியாவில் மிக நீண்ட காலம் தடை செய்யப்பட்ட ஆடிட்டிங் நிறுவனமாக டிலாய்ட் இருக்கும். உலகின் மிகப்பெரிய நான்கு ஆடிட்டிங் சேவை நிறுவனங்களில் ஒன்றாக டிலாய்ட் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் இன்னும் என்னன்ன மோசடிகள் இருக்கின்றனவே பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.


Click it and Unblock the Notifications