டெல்லி: இந்திய விமான சேவை நிறுவனங்களிலேயே ஒழுங்காக நேரத்துக்கு (Punctuality) விமானங்களை இயக்குவது மற்றும் விமானங்களை ரத்து செய்யாமல் இருக்கும் விஷயத்தில் கெட்டிக் காரணமாக ஒரு நிறுவனம் முதலிடம் பிடித்திருக்கிறது. அந்த நிறுவனத்தின் பெயர் GO Air.
GO Air இந்தியாவில் இயக்கும் 100 விமானங்களில் 95 விமானங்களை சொன்ன நேரத்துக்கு ஒரு நொடி கூட தாமதிக்காமல் இயக்குகிறார்களாம். அந்த அளவுக்கு இந்திய மக்கள் மற்றும் இந்திய விமானப் பயணிகள் இயக்குநகரத்திடமும் நல்ல பெயரைப் பெற்ற GO Air இப்போது மேலும் ஒரு நல்ல விஷயத்தைச் செய்திருக்கிறார்கள்.
ஃபானி புயல் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளான ஒடிஸா, மேற்கு வங்கம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் வழியாகத் தான் கரையைக் கடக்க இருக்கிறது. எனவே கொஞ்சம் பாதிப்புகளும் வலுவாக இருக்கும் எனக் கணித்திருக்கிறார்கள் இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள்.
ஃபானி புயல் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகம் தொடங்கி 190 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும், சில நேரங்களில் 200 கிலோ மீட்டர் வேகத்தில் கூட காற்று வீசலாம் எனவும் பயங்கரமான எச்சரிக்கையை விடுத்திருக்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம்.
சென்னையில் வீசிய வர்த்தா புயலின் போது சென்னை வீசிய காற்றின் வேகம் சராசரியாக 130 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்தது. அதற்கே என்ன மாதிரியான விளைவுகளை எதிர் கொண்டோம் என்பது நமக்கு தெரியும் தானே..? சரி இப்போது குறைந்தபட்சம் காற்றின் வேகமே 160 கிலோ மீட்டர் வேகம் என்றால் என்ன செய்வது..?
இதற்காக சுமார் 70-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள், விமான சேவைகளை எல்லாம ரத்து செய்திருக்கிறது அரசு. இந்த நேரத்தில் ராஞ்சி, கொல்கத்தா, புபனேஸ்வர் போன்ற விமான நிலையங்களுக்கு வரப் போகும் விமானங்கள் அல்லது மேலே சொன்ன விமான நிலையங்களில் இருந்து புறப்படும் விமானங்களுக்கு மே 02 முதல் மே 05, 2019 வரை ரத்து செய்தாலோ அல்லது விமானங்களையோ அல்லது பயணத் திட்டங்களை இலவசமாக மாற்றலாம் என அறிவித்திருக்கிறது GO Air.
அதாவது விமானப் பயணச் சீட்டுகளை ரத்த செய்யவோ அல்லது பயணத் திட்டங்களை மாற்றவோ எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படாது எனச் சொல்லி இருக்கிறார்கள். அதோடு பயணங்களை மேற்கொள்ள முடியாதவர்கள் ஃபானி புயல் ஓய்ந்து அடுத்த 7 நாட்களுக்குள் மற்றொரு விமானத்தில் தங்கள் பயணத்தை முன் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் விமானப் பயணிகள் வயிற்றில் பால் வார்த்திருக்கிறார்கள்.