டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் ஜிஎஸ்டி வரி உயர்வாலும் மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்துள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
வீடுகளுக்கு வழங்கும் மானியத்துடன் கூடிய சிலிண்டர் விலை 28 காசுகள் உயர்ந்துள்ளது. அதேபோல் மானியமில்லாத சிலிண்டல் விலையானது ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது.
பெரும்பாலான மாநிலங்களில் லோக்சபா தேர்தல் முடிந்துவிட்டதால்தான் சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
சமையல் கேஸ் சிலிண்டர்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்ப இங்கும் தினசரி விலையை மாற்றியமைக்கும் முறை கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது. பின்னர் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதந்தோறும் மாற்றியமைக்கும் முறை அமலுக்கு வந்தது. அதன்படி ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
கேஸ் சிலிண்டர் விலை உயர்வு
அதேபோல் இந்த மாதமும் சிலிண்டர் விலையை சிறிதளவு உயர்த்தி உள்ளது. லோக்சபா தேர்தல் நடைபெற்றுகொண்டிருப்பதால் சிலிண்டர் விலை உயர்வு இருக்காது என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக சிலிண்டர் விலையை உயர்த்தி உள்ளது.
6 ரூபாய் அதிகம்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நடப்பு 2019ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சிறிதளவு குறைந்தது. இந்நிலையில் நேற்று மானியத்துடன் கூடிய வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் 28 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. மானியமில்லாத வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 6 ரூபாய் அதிகரித்துள்ளது.
மானிய சிலிண்டர் விலை
வீடுகளுக்கு வழங்கும் 14.2 கிலோ மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சென்னையில் ரூ.484.02, டெல்லியில் ரூ.495.61, கொல்கத்தாவில் ரூ.499.29, மும்பையில் ரூ.493.86 என்ற விலையில் விற்கப்படுகிறது. அதாவது டெல்லியில் 28 காசுகளும் மும்பையில் 29 காசுகளும் கூடியுள்ளது.
மானியம் இல்லாத சிலிண்டர்
அதேபோல் 14.2 கிலோ மானியம் இல்லாத வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையானது சென்னையில் ரூ.728, கொல்கத்தாவில் ரூ.738.50, டெல்லியில் ரூ.712.50, மும்பையில் ரூ.684.50 என்ற விலையில் விற்கப்படுகிறது. அதாவது மானியம் இல்லாத சிலிண்டருக்கு ரூ. 6 உயர்த்தப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மண்ணெண்ணையின் விலையும் 26 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி மும்பையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணையின் விலை ரூ.31.13க்கு விற்கப்படுகிறது. தலைநகர் டெல்லியில் மாசு அதிகரிப்பின் காரணமாக மானிய விலையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படுதில்லை. இதன்காரணமாக டெல்லியில் மண்ணெண்ணையின் விலை ரூ.64.17க்கு விற்கப்படுகிறது.
விலை உயர்வுக்கு காரணம் என்ன
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் ஜிஎஸ்டி வரி உயர்வு போன்ற காரணிகள் தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் எனக் கூறியுள்ளது.
ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் லோக்சபா தேர்தல் முடிந்துவிட்டதால் தான் மக்களைப் பற்றி சிந்திக்காமல், மானிய சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.