டெல்லி: நடப்பு 2019-20ஆம் ஆண்டின் சந்தைப் பருவத்தில் மத்திய மாநில அரசுகள் இதுவரையிலும் சுமார் 55.17 லட்சம் டன் கோதுமையை கொள்முதல் மையங்கள் மூலமாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்துள்ளன.
இந்திய உணவுக் கழகமும் மாநில அரசுகளும் கொள்முதல் மையங்கள் மூலமாக விவசாயிகளிடம் நேரடியாக கோதுமையை கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
மத்திய அரசு நடப்பு 2019-20ஆம் ஆண்டில் 3.57 கோடி டன் கோதுமையை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் கோதுமை விளைச்சல் சுமார் 1000 லட்சம் டன் என்ற அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காரிப் பருவம், ரபி பருவம்
கோதுமை வட மாநிலங்களான பஞ்சாப், ஹரியான, உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் விளையும் பணப்பயிராகும். கோதுமை விளைச்சல் என்பது கரீப் பருவம் (காரிப் பருவம்) என்னும் தென்மேற்கு பருவ மழை (ஜூன்-அக்டோபர்) காலத்திலும் ரபி என்னும் குளிர் காலத்திலும் (அக்டோபர்-மார்ச்) அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
3.57 கோடி டன்
நடப்பு 2019-20ஆம் சந்தைப் பருவ காலத்தில் 3.57 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல் நடப்பு ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான சந்தைப் பருவத்தில் கோதுமை விளைச்சல் சுமார் 10 கோடி டன் இலக்கை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரலில் தொடங்கும்
கோதுமை கொள்முதலுக்கான உரிய பருவம் ஏப்ரல் மாதத்தில் தொடங்குகிறது என்றாலும் சில மாநிலங்களில் மார்ச் மாதமே கொள்முதல் பணிகள் ஆரம்பாகிவிடுகிறது. அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்திற்குள்ளேயே மத்திய மாநில அரசுகள் நிர்ணயித்த கொள்முதல் இலக்கு எட்டப்பட்டுவிடுகிறது.
குறைந்தபட்ச ஆதரவு விலை
இந்திய உணவுக்கழகமும் (Food Corporation of India-FCI), மாநில அரசுகளும் கொள்முதல் மையங்களை அமைத்து அதன் மூலமாக நெல், கோதுமையை ஆகியவற்றை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கின்றன. இதன் மூலம் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படுகிறது.
குவிண்டால் ரூ.1840
குறைந்தபட்ச ஆதரவு விலையின் மூலம் கொள்முதல் செய்யப்படும் கோதுமை மத்திய மாநில அரசுகளின் உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு இலவசமாகவும், சலுகை விலையிலும் வழங்கப்படுகிறது. மத்திய அரசு நடப்பு 2019-20ஆம் ஆண்டில் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (Minimum Support Price) ஒரு குவிண்டாலுக்கு ரூ.1840ஆக நிர்ணயம் செய்துள்ளது. கடந்த ஆண்டில் இது ரூ.1735ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
55.17 லட்சம் டன் கோதுமை
நடப்பு 2019-20ஆம் ஆண்டு சந்தைப் பருவம் தற்போதுதான் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டில் மத்திய அரசு இதுவரையிலும் சுமார் 55.17 லட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்துள்ளதாக மத்திய உணவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹரியானா முதலிடம்
நடப்பு சந்தைப் பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட கோதுமையில் சுமார் 28.54 லட்சம் டன் ஹரியான மாநிலத்தில் இருந்தும், சுமார் 18.89 லட்சம் டன் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்தும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், சுமார் 2.90 லட்சம் டன் கோதுமை பஞ்சாப் மாநிலத்திலிருந்தும், 2.78 லட்சம் டன் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்தும், 1.97 லட்சம் டன் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
குஜராத்தில் தொடங்கியது
குஜராத் மாநிலத்தில் தற்போது தான் கோதுமை கொள்முதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. வரும் வாரங்களில் கொள்முதல் சூடுபிடிக்கும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கை தாண்டியது
கடந்த 2018-19ஆம் சந்தைப் பருவத்தில் கொள்முதல் மையங்கள் மூலமாக 3.20 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் திட்டமிட்ட இலக்கையும் தாண்டி கடந்த சந்தைப் பருவத்தில் 3.58 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இறக்குமதி வரி 40 சதவிகிதம்
நடப்பு சந்தைப்பருவத்தில் கோதுமை விளைச்சல் அமோகமாக இருப்பதால், மலிவு விலையில் கோதுமையை இறக்குமதி செய்வதில் இருந்து விவசாயிகளைக் காக்கும் பொருட்டு மத்திய அரசு கோதுமை மீதான இறக்குமதி வரியை 30 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதமாக உயர்த்தி உள்ளது.