டெல்லி: நவம்பர் 08, 2016. இந்திய வரலாற்றில், அனைவரையும் பொருளாதாரம் பேச வைத்த நாள். ஒரே நாளில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது என பிரதமர் மோடி அறிவித்த நாள். பணமதிப்பிழப்பு என்கிற வார்த்தைக்கான பொருளை இந்திய மக்கள் அன்று தான் உணர்ந்தார்கள்.
ஏன் பணமதிப்பிழப்பு கொண்டு வந்தார்கள் எனக் கேட்டதற்கு கறுப்புப் பணத்தை ஒழிக்க, பொருளாதாரத்தை மேம்படுத்த, தீவிரவாதத்தைத் தடுக்க, வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க என பட்டியல் நீண்டது.
இந்த பணமதிப்பிழப்பினால் என்னவெல்லாம் நடந்தது என்பதை நாமே கண் கூடாக பார்க்க முடிந்தது. ஆனால் வருவான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை பணமதிப்பிழப்புக்குப் பின் சரியத் தொடங்கியது. தொடர்ந்து சரிந்து கொண்டே இருக்கிறது. இதை, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருமான வரித் துறையே சொல்கிறது.
பாஜக ஆட்சிக்கு முன்
2014 - 15 மதிப்பீட்டு ஆண்டில் (Assessment Year)-ல் 4.31 கோடி பேர் வருமான வரித் துறையிடம் பதிவு செய்து கொண்டார்கள். ஆனால் 3.41 கோடி பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்தார்கள். பதிவு செய்து கொண்டவர்கள் மற்றும் வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்குமான விகிதம் பார்த்தால் 79.3 சதவிகிதத்தினர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள்.
பாஜக ஆட்சியில்
2015 - 16 மதிப்பீட்டு ஆண்டில் (Assessment Year)-ல் 5.22 கோடி பேர் வருமான வரித் துறையிடம் பதிவு செய்து கொண்டார்கள். ஆனால் 4.33 கோடி பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்தார்கள். பதிவு செய்து கொண்டவர்கள் மற்றும் வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்குமான விகிதம் பார்த்தால் 83.0 சதவிகிதத்தினர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள்.
2016 - 17 மதிப்பீட்டு ஆண்டில் (Assessment Year)-ல் 6.21 கோடி பேர் வருமான வரித் துறையிடம் பதிவு செய்து கொண்டார்கள். ஆனால் 5.28 கோடி பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்தார்கள். பதிவு செய்து கொண்டவர்கள் மற்றும் வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்குமான விகிதம் பார்த்தால் 85.1 சதவிகிதத்தினர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள்.
பணமதிப்பிழப்பின் போது
2017 - 18 மதிப்பீட்டு ஆண்டில் (Assessment Year)-ல் 7.36 கோடி பேர் வருமான வரித் துறையிடம் பதிவு செய்து கொண்டார்கள். ஆனால் 6.74 கோடி பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்தார்கள். இந்த ஆண்டில் தான் 2016 - 17 நிதி ஆண்டுக்கான வருமானத்தைக் கணக்கு காட்டி வரி தாக்கல் செய்ய வேண்டும். பதிவு செய்து கொண்டவர்கள் மற்றும் வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்குமான விகிதம் பார்த்தால் 91.6 சதவிகிதத்தினர் வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகபட்சமான அளவு இது தான்.
இப்போது
2018 - 19 மதிப்பீட்டு ஆண்டில் (Assessment Year)-ல் 8.45 கோடி பேர் வருமான வரித் துறையிடம் பதிவு செய்து கொண்டார்கள். ஆனால் 6.68 கோடி பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்தார்கள். பதிவு செய்து கொண்டவர்கள் மற்றும் வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்குமான விகிதம் பார்த்தால் 79.1 சதவிகிதத்தினர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள்.
சரிவு
சுருக்கமாக 2014 - 15-ல் பதிவு செய்து கொண்டவர்கள் மற்றும் வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்குமான விகிதம் 79.3 சதவிகிதமாக இருந்திருக்கிறது. ஆனால் 2018 - 19-ல் மீண்டும் இந்த 79.3-வை விட குறைவாக 79.1%-க்கு மட்டுமே பதிவு செய்து கொண்டவர்களில் வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள். வரி அனலிஸ்டுகள் இப்படி பணமதிப்பிழப்புக்குப் பின் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை சரிந்திருப்பதைக் ஆச்சர்யத்தோடு கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள்.
ஃப்ரியா விடு
அரசும், நடுத்தர வர்க்க மக்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமல் விட்டுக் கொடுத்துப் போவதாகவும் சில அதிகாரிகள் சொல்கிறார்கள். அதற்கு மக்களவைத் தேர்தலைச் சுட்டிக் காட்டுகிறார்கள். பாஜகவின் வெற்றி வாய்ப்பை அதிக அளவில் 2014-ல் உறுதிப்படுத்தியது, இதே நடுத்தர வர்கத்தினர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறித்த காலத்துக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் 1,000 ரூபாய் 2,000 ரூபாய் தொடங்கி 10,000 ரூபாய் வரை அபராதம் வசூலிக்க வருமான வரிச் சட்டங்களைக் கொண்டு வந்ததும் இதே பாஜக அரசு தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.