டெல்லி: கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் தனிநபர் தேவை குறைந்து நுகர்வு தன்மையும் குறைந்து காணப்பட்டதாலும், எதிர்பார்த்த நிலையான முதலீடுகளும் சிறிதளவே அதிகரித்துள்ளதாலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவை எட்டவில்லை என்று மத்திய நிதியமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் வெளியிட்ட அறிக்கையில், ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்ததால் வங்கிகளின் நிதிப்புழக்கம் அதிகரித்து பொருளாதாரம் வளர்ச்சி காணும் என்ற தெரிவித்திருந்தது.
தற்போது சுனக்கமாக உள்ள ஏற்றுமதி விகிதம் அதிகரித்தால் வரும் காலங்களில் இந்தியப் பொருளாதாரம் இன்னும் வேகமாக வளரும் என்றும் நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
தம்பட்டம்
தான் கடந்த ஐந்து ஆண்டுகளாக எடுத்து வரும் கடுமையான ஸ்திரமான உறுதியான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவிகிதத்தை விரைவில் எட்டிவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி போகும் இடமெல்லாம் தம்பட்டம் அடித்துகொண்டு இருந்தார்.
பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை
மோடி சொல்வது வாஸ்தவமான சத்தியமான உண்மைதான் என்று நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார நிபுணர்கள் மட்டுமல்லாமல், உலகத்தின் அத்தனை பொருளாதார நிபுணர்களும் கற்பூரம் அடித்து சத்தியம் செய்தனர். இதே போக்கில் சென்றால் இந்தியப் பொருளாதாரம் விரைவில் சீனாவை முந்தி இரண்டாம் இடத்திற்கு வந்துவிடும் என்றும் நம்பிக்கை அளித்தவண்ணம் இருக்கின்றனர்.
மந்த கதியில் தான் உள்ளது
பிரதமர் மோடி மற்றும் பொருளாதார நிபுணர்களின் கணிப்பு தவறானது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்த கதியிலேயே உள்ளது என்றும் வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று நாட்டிலுள்ள அனைத்து எதிர்கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன.
வேலையில்லாத் திண்டாட்டம்
எதிர்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மை என்பது போல் கடந்த ஏப்ரல் மாதத்திய வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்ந்து அதிகரித்து 7.6 சதவிகிதத்தை எட்டியுள்ளது என்று மத்திய பொருளாதார கண்காணிப்பு மையம் புள்ளிவிவரம் வெளியிட்டு பீதியை கிளப்பியுள்ளது.
2018-19ஆம் ஆண்டில் வளர்ச்சி குறைவுதான்
மத்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்ட புள்ளி விவரத்தை தொடர்ந்து, தற்போது மத்திய நிதி அமைச்சகமும் கடந்த மார்ச் மாத பொருளாதார வளர்ச்சி பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 2018-9ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது போல் தெரிகிறது என்று சூசகமாக தெரிவித்துள்ளது. அதேபோல் மத்திய புள்ளியியல் அலுவலகமும் கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 7.2 சதவிதித்தில் இருந்து 7 சதவிகிதமாக குறைத்து மறு மதிப்பீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
5 ஆண்டுகளில் இல்லாத சரிவு
கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் ஏற்பட்ட சரிவு 5 ஆண்டுகளில் இல்லாத சரிவாகும். இதையடுத்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான ரெப்போ விகிதத்தை குறைத்ததால், நாட்டின் பணப்புழக்கம் அதிகரித்து அதனால் பொருளாதாரம் வளர்ச்சி காணும் என்று தெரிவித்திருந்தது.
நம்பிக்கை பொய்த்தது
மத்திய நிதியமைச்சகம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நம்பிக்கை அளித்திருந்த நிலையில், நேற்று மார்ச் மாதத்திற்கான பொருளாதார வளர்ச்சி பற்றிய அறிக்கையை மத்திய நிதியமைச்சம் வெளியிட்டுள்ளது. அதில் அனைவரும் எதிர்பார்த்தது போலவே நாட்டின் பொருளாதார வளர்ச்சி சற்று குறைந்திருக்கும் போல் தெரிகிறது என்று சொல்லி அதிர்ச்சியளித்துள்ளது.
எல்லாமே மந்த கதியில்
தனியார் நுகர்வு தன்மை கடந்த 2018-19ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் குறைந்துவிட்டதாலும் நிலையான முதலீடுகள் சிறிதளவே அதிகரித்துள்ளதாலும், வாகன விற்பனையில் ஏற்பட்ட சரிவினாலும், நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி மந்த கதியில் இருந்தாலும் மத்திய அரசு எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி சற்று குறைந்திருக்கக்கூடும் என்று பூசி மெழுகி மதிப்பிட்டுள்ளது.
தொடர்ந்து முதலிடத்தில்
தற்போது வளர்ச்சி விகிதம் குறைந்திருந்தாலும், வேகமான பொருளாதார வளர்ச்சி காணும் நாடுகளில் பட்டியிலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இவ்வளர்ச்சி விகிதம் வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும். வேளாண் துறையில் வளர்ச்சியை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
அந்நியச் செலாவணி இருப்பு
கடந்த 2018-19ஆம் நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் அந்தியச் செலாவணி இருப்பு விகிதம் சற்று உயர்ந்துள்ளது. இதே காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான நடப்புக் கணக்கு பற்றாக்குறை விகிதம் குறைந்துள்து. இதுதான் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள சரிவை தடுத்துள்ளது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.