பெங்களூரு: தொடர்ந்து இறங்குமுகமாக இருக்கும் இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்றம் பெறுமா அல்லது இன்னும் இறங்குமா என்பதை அடுத்து வரும் ஆட்சி தான் தீர்மானிக்கும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக லோக்சபா தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும், அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து இறங்கு முகமாகவே உள்ளது.
லோக்சபா தேர்தல் முடிந்து, முடிவுகள் வெளியாகி புதிய அரசு பொறுப்பேற்ற பின்பு, புதிய அரசு எடுக்கும் வர்த்தக கொள்கை முடிவுகளைப் பொறுத்தே டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கூடுமா அல்லது சரியுமா என்பது தெரியவரும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு மாதத்தில் 1 சதவிகிதம் குறைவு
கடந்த 2018ஆம் ஆண்டு இறுதி வரையிலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து இறங்குமுகமாகவே இருந்து வந்தது. அதன் தாக்கம் நடப்பு 2019ஆம் ஆண்டிலும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 1 சதவிகிதம் சரிந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை ஏற்றம்
ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா விதித்த தடையின் காரணமாக கடந்த ஒரு மாதமாக கச்சா எண்ணெயின் விலை கூடிக்கொண்டே சென்றதாலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
வட்டி விகிதம் குறைப்பு
ரூபாயின் மதிப்பை வலுப்படுத்தும் விதமாக மத்திய ரிசர்வ் வங்கி நடப்பு 2019ஆம் ஆண்டில், வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகளை குறைத்தது. இதன் காரணமாக பணப்புழக்கம் அதிகரித்து உற்பத்தியும் ஏற்றுமதியும் அதிகரித்து டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கூடும் என்று தப்புக் கணக்கு போட்டது.
தலைவிதி தெரியும்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், தற்போது லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடைசியில் வரும் மே 19ஆம் தேதி தேர்தல் முடிந்து வரும் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, அதில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் புதிய அரசு எடுக்கும் வர்த்தகக் கொள்கை முடிவுகளைப் பொறுத்து டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயருமா அல்லது சரியுமா என்பது தெரியவரும்.
மோடி ராஜ்ஜியம்தான்
ஆளும் கட்சியின் சார்பாக பிரதமர் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் மிகச் சிறந்த ஆளுமை மிக்க பிரதமராக அனைவராலும் அறியப்பட்டுள்ளார். ஆகவே மோடியே மீண்டும் அமோக வெற்றி பெற்று மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வருவார் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ரூபாய் மதிப்பு இறங்கு முகம்
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் ஏறிக்கொண்டே செல்கிறது. இதனால் டாலரின் மதிப்பும் வலுவடையத் தொடங்கியுள்ளது. ஆகவேதான் இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து இறக்கத்தை சந்தித்து வருகிறது என ANZ நிறுவனத்தின் ஆசியா ஆராய்ச்சியின் தலைவரான கூன் கோ தெரிவிக்கிறார்.
கொள்கை முடிவுகள்
ஒட்டுமொத்தமாக, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு இரண்டாவது அரையாண்டில் வலுப்பெறும். தற்போது உள்ள பணவீக்க விகிதம் மற்றும் ரிசர்வ் வங்கியின் ஸ்திரமான நிதிக்கொள்கை முடிவுகளின் படி ரூபாய் மதிப்பு உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்றாலும் புதிய அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளுக்கு ஏற்பவே ரூபாய் மதிப்பு வலுப்பெறுமா என்பது தெரிய வரும் என்றும் கூன் கோ தெரவித்தார்.
இன்னும் கூட சரியும்
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி முதல் மே 2ஆம் தேதி வரையிலும் கிட்டத்தட்ட 50 தடவை நடத்திய கணக்கெடுப்பில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு அடுத்த ஆறு மாதங்களில் தற்போது இருப்பதை விட சுமார் 2 சதவிகிதம் குறைந்து 70.67 என்று அளவை எட்டும் என்றும் பின்னர் ஒரு வருடத்தில் படிப்படியாக அதிகரித்து 70.50 என்ற அளவில் வலுப்பெறும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.