டெல்லி: நாட்டில் சர்க்கரை பயன்பாடு அதிகரித்து தேவை கூடியதால் நடப்பு சந்தைப் பருவத்தில் உற்பத்தி எதிர்பார்க்கப்பட்ட அளவை விட 1.5% அதிகரித்து 3.21 கோடி டன்களாக உயர்ந்துள்ளது என்று இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நடைபெற்ற சர்க்கரை உற்பத்தியை விட, 10 விழுக்காடு அதிகம் என இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் கூறியிருக்கிறது.
ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக தேவை அதிகரித்து காணப்பட்டதால் உலகின் சர்க்கரை உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் 2.60 கோடி டன்களுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
சர்க்கரை ஆலைகளின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில்,பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல், கடந்த மாதம் வரையிலான காலகட்டத்தில், 3 கோடியே 21 லட்சம் டன்கள் சர்க்கரை உற்பத்தியாகி உள்ளது.
சர்க்கரை உற்பத்தி
சர்வதேச அளவில் சர்க்கரை உற்பத்தியில் பிரேசில் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களின் பங்கு 70 சதவிகிதமாக உள்ளது. சர்க்கரை உற்பத்தியில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது.
சர்க்கரை உற்பத்தி எவ்வளவு
கடந்த 2013-14 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் செப்டம்பர் வரை சர்க்கரை உற்பத்தி 2.83 கோடி டன்னாக இருந்தது. 2015-16 ஆண்டு பருவத்தில் 2.51 கோடி டன்னாக குறைந்துள்ளது. 2016-17ஆம் பருவத்தில் 2.03 கோடி டன்னாக சரிந்தது. ஆனால் கடந்த 2017-18ஆம் ஆண்டு பருவத்தில் 3.25 கோடி டன்னாக அதிகரித்தது.
ஐசிஆர்ஏ மதிப்பீடு
இந்தியாவில் சர்க்கரை உற்பத்தியின் சந்தைப் பருவம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு செப்டம்பரில் நிறைவடைகிறது. நடப்பு 2019ஆம் ஆண்டில் சர்க்கரை உற்பத்தி 3.07 கோடி டன்களாக இருக்கும் என்று ஐசிஆர்ஏ (Investment Information and Credit Rating Agency-ICRA) தர நிறுவனம் மதிப்பிட்டு இருந்தது.
உற்பத்தி சரிவு
முன்னதாக சர்க்கரை உற்பத்தி நடப்பு சந்தைப் பருவத்தில் சுமார் 3.15 கோடி டன்களாக இருக்கும் என்று ஆசிஆர்ஏ(ICRA) மதிப்பிட்டு இருந்தது. ஆனால் இந்தியாவில் சர்க்கரை உற்பத்தியில் முன்னணியில் உள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தில் சர்க்கரை உற்பத்தி அளவு சரிந்து விட்டதால், ஐசிஆர்ஏ பின்னர் சர்க்கரை உற்பத்தி மதிப்பீட்டு அளவை குறைத்துவிட்டது.
3.30 கோடி டன் இலக்கு
நடப்பு சந்தைப் பருவத்தில் அக்டோபர் முதல் ஏப்ரல் வரையில் சுமார் 3.21 கோடி டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் (Indian Sugar Mills Association-ISMA) தெரிவித்துள்ளது. மேலும் நடப்பு பருவம் முடிவதற்குள் 3.30 கோடி டன்களை எட்டக்கூடும் என்றும் ISMA தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் 3.25 கோடி டன்கள்
தற்போது பெரும்பாலான சர்க்கரை ஆலைகள் உற்பத்தி இலக்கை எட்டிவிட்டன. இருந்தாலும் சில ஆலைகள் மட்டுமே தொடர்ந்து இயங்கிவருகின்றன என்றும் ISMA தெரிவித்துள்ளது. கடந்த 2017-18ஆம் ஆண்டின் சந்தைப் பருவத்தில் சர்க்கரை உற்பத்தி சுமார் 3.25 கோடி டன்களாக இருந்தது.
மொலாசிஸ் தேவை
உலகின் சர்க்கரை உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் வருடாந்திர சர்க்கரை தேவையானது சுமார் 2.6 கோடி டன்களாகும். ஆனால் தேவையைக் காட்டிலும் தற்போது உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது. எத்தனால் உற்பத்திக்கு தேவைப்படும் மொலாசிஸ் எரிபொருளுக்காகவே சர்க்கரை ஆலைகள் தொடர்ந்து உற்பத்தி செய்து வருகின்றன என்று ஐசிஆர்ஏ தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருந்தது.
உத்தரப்பிரதேசம் முதலிடம்
நாட்டிலுள்ள சர்க்கரை ஆலைகளில் ஏப்ரல் மாத நிலவரப்படி, சுமார் 100 ஆலைகள் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகின்றன. சர்க்கரை உற்பத்தியில் நாட்டின் முதல் 3 இடங்களில் உள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுமார் 1.12 கோடி டன்களும், மஹாராஷ்டிராவில் சுமார் 1.07 கோடி டன்களும், கர்நாடகாவில் சுமார் 43.2 லட்சம் டன்களும் நடப்பு 2018-19ஆம் ஆண்டு சந்தைப் பருவத்தில்உற்பத்தி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சாகுபடி குறைவு உற்பத்தி அதிகம்
நடப்பு சந்தைப் பருவத்தில் கரும்பு சாகுபடி கடந்த ஆண்டைவிட குறைவாக இருந்தாலும், கரும்பு உற்பத்தி முந்தைய ஆண்டைவிட சற்று கூடுதலாக இருந்தது என்று இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் கரும்பு உற்பத்தி முந்தைய ஆண்டைக்காட்டிலும் கணிசமான அளவில் அதிகரித்து காணப்பட்டது.
தென்மாநிலங்களில் உற்பத்தி குறைவுதான்
இந்தியாவின் மற்ற பகுதிகளில், குறிப்பாக மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் சர்க்கரை உற்பத்தி கூடுதலாக இருந்தாலும் வட மாநிலங்களை விட உற்பத்தி குறைவாகவே இருந்து என்று ISMA தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் சர்க்கரை உற்பத்தி 3.3 கோடி டன்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதாவது கடந்த ஆண்டை விட 5 லட்சம் டன்கள் கூடுதல் என்றும் ISMA தெரிவித்துள்ளது.
சர்க்கரை இருப்பு 1.47 கோடி டன்கள்
சர்க்கரை உற்பத்தியில் 2018-19ஆம் ஆண்டின் சந்தைப் பருவத்தில் ஆரம்ப சர்க்கரை இருப்பு (Opening Stock) சுமார் 1.07 கோடி டன்களாகவும் இறுதி இருப்பாக (Closing Stock) சுமார் 1.47 கோடி டன்களாகவும் காட்டப்பட்டுள்ளன என்று ISMA தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி 30 லட்சம் டன்கள்
சர்க்கரை உற்பத்தி சுமார் 3.3 கோடி டன்களாவும், நாட்டின் சர்க்கரை தேவை சுமார் 2.6 கோடி டன்களாகவும் ஏற்றுமதியின் அளவு 30 லட்சம் டன்களாகவும் இருக்கும் என்றும் ISMA மதிப்பிட்டிருந்தது.
2019-20ஆம் ஆண்டில் உற்பத்தி சரியும்
2019-20ஆம் ஆண்டின் சந்தைப் பருவத்தில் மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் மழை வளம் குறைந்து சர்க்கரை உற்பத்தி சரிவை சந்திக்கும் என்றும் தொழில் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சர்க்கரை ஏற்றுமதி
கடந்த பருவத்தின் அதிக உற்பத்தி காரணமாக ஏற்றுமதியை அதிகரிக்கவும், உள்நாட்டில் கையிருப்பை குறைக்கவும் சர்க்கரை ஏற்றுமதி மீதான வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அதே சமயம் இறக்குமதியாகும் சர்க்கரைக்கு வரி 100 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இறக்குமதி வரி முன்பு 50 சதவிகிதமாக இருந்தது. நடப்பு 2018-19 பருவத்தில் இந்திய ஆலைகள் 50 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆலைகள் 30-35 லட்சம் டன் மட்டுமே ஏற்றுமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.