டெல்லி: இந்தியாவின் வங்கிகள் வழங்கும் சேவைகளில் உள்ள குறைபாடுகளை, முதலில் சம்பந்தப்பட்ட வங்கியிடமே பேசிப் பார்க்கலாம். அப்படிச் சரி வரவில்லை என்றால் வங்கி தீர்ப்பாயம் எனப்படும் Banking Ombudsman-யிடம் புகார் தெரிவிக்க வேண்டும். அதன் பின் தான் நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு எல்லாம் போக முடியும்.
அப்படி கடந்த ஜூலை 2017 முதல் ஜூன் 2018 வரையான காலத்தில் மொத்தம் சுமார் 1.63 லட்சம் புகார்கள் பதிவாகி இருக்கின்றன. அதில் சுமார் 10 சதவிகித புகார்கள், ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பது தொடர்பாக மட்டுமே பதிவாகி இருக்கின்றனவாம்.
கடந்த ஜூலை 2016 முதல் ஜூன் 2017 வரையான ஆண்டில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பது தொடர்பாக சுமார் 11 ஆயிரம் புகார்கள் தான் பதிவானதாம். ஆனால் 2016 - 17-ஐ விட ஜூலை 2017 முதல் ஜூன் 2018 வரையான காலத்தில் 16 ஆயிரத்துக்கு மேற்பட்ட புகார்கள் பதிவாகி இருக்கின்றன. சுமார் 50 சதவிகிதம் கூடுதல் வழக்குகள் பதிவாகி இருக்கின்றனவாம். இப்படி நாளுக்கு நாள் ஏடிஎம்-ல் பணம் எடுப்பது தொடர்பாக மட்டுமே புகார் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றன.
பொதுவாக, ஏடிஎம்மில் பணம் வராமல், நம் வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப்பட்ட பணம், பிரச்னையான அடுத்த ஏழு வேலை தினங்களுக்குள் மீண்டும் நம் வங்கிக் கணக்குக்கு வர வேண்டும். அப்படி வரவில்லை என்றால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் 100 ரூபாய் என்கிற கணக்கில், சம்பந்தப்பட்ட வங்கியிடமிருந்து நீங்கள் இழப்பீடாகப் பெறலாம் என்கிறது ரிசர்வ் வங்கியின் சட்டங்கள். இந்த விதி கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலில் இருக்கிறதாம். அப்படி நாளுக்கு 100 ரூபாய் கூடுதலாக வாங்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்..?
சரி ஏடிஎம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு என்ன செய்யலாம்.
1. உங்கள் ஏடிஎம் அட்டை எந்த வங்கியுடையதோ, அந்த வங்கியிடம் முதலில் விஷயத்தைச் சொல்லுங்கள்.
2. ஏடிஎம் இயந்திரங்களில் இருக்கும் உதவி எண்களுக்கு அழைத்தும் விஷயத்தைப் பதிவு செய்யுங்கள்.
3. புகார் அளித்து 7 வேலை நாட்கள் காத்திருக்கவும். அதற்குள் பணம் நம் வங்கிக் கணக்குக்கு வந்து சேர வேண்டும்.
4. 7 வேலை நாட்களுக்குள் பணம் வரவில்லை என்றால், நம் ஏடிஎம் கார்ட் கொடுத்த வங்கியிடம் சம்பவம் நடந்து 30 நாட்களுக்குள் முறையாக ஒரு புகார் அளிக்க வேண்டும்.
5. வங்கியிடமிருந்து பதில் பசப்புவதாக இருக்கிறதா, அடுத்த 30 நாட்களுக்குள் வங்கி கொடுத்த பதிலும் சரி இல்லை எனச் சொல்லி, வங்கித் தீர்ப்பாயத்தில் ஏடிஎம் பிரச்னை தொடர்பாக புகார் அளிக்கவும். வங்கித் தீர்ப்பாயம் நல்ல முடிவைத் தரும். ஒவ்வொரு நாள் தாமதத்துக்கு 100 ரூபாய் எனப் பெறலாம். இதற்கான ஆதாரங்கள், புகார்க் கடிதங்கள், எல்லாம் நம்மிடம் முறையாக இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.