டெல்லி: CBRE என்கிற அமைப்பு இந்தியாவில், ஒவ்வொரு காலாண்டிலும் எவ்வளவு அலுவலக நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டிருக்கின்றன என்கிற தரவுகளை வெளியிடுகின்றன. இந்த மார்ச் 2019-க்கு 'India Flexible Space Quarterly Digest' என்கிற பெயரில் தன் தரவுகளை வெளியிட்டிருக்கிறது.
இந்தியாவின் ஏழு முக்கிய பெரு நகரங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு, இந்தத் தரவுகளை வெளியிட்டிருக்கிறார்கள்.
கடந்த ஜனவரி 2019 முதல் மார்ச் 2019 வரையான மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 2.9 மில்லியன் சதுர அடி அலுவலக நிலங்களை குத்தகைக்கு விட்டு இருக்கிறார்கள் கோ வொர்க்கிங் ஆபரேட்டர்கள்.
கடந்த மார்ச் 2018 காலாண்டில் தற்போது குத்தகைக்கு விட்டிருக்கு 2.9 மில்லியன் சதுர அடி அலுவலக நிலங்களில் சுமார் 25 சதவிகிதத்தைத் தான் குத்தகைக்கு விட்டு இருந்தார்கள். அதாவது வெறும் 0.8 மில்லியன் சதுர அடி மட்டுமே குத்தகைக்கு விட்டு இருந்தார்கள்.
இந்தியா தான், கோ வொர்க்கிங் ஆபரேட்டர்கள் சந்தையில் ஆசிய பசிஃபிப் பிராந்தியத்திலேயே மிகப் பெரிய சந்தையாக இருக்கிறது. மேலும் இந்த துறை இன்னும் பெரிய வளர்ச்சிகளைக் காணும், முதலீட்டாளர்களும் அதிகம் முதலீடு செய்வார்கள் என நம்புகிறோம் என்கிறார்கள் 'India Flexible Space Quarterly Digest' அறிக்கையை வெளியிட்ட CBRE அமைப்பினர்.
வரும் 2020-ம் ஆண்டுக்குள், இந்த அலுவலக நிலங்களைக் குத்தகைக்கு விடும் கோ வொர்க்கிங் ஆப்பரேட்டர்ஸின் வியாபாரம் 10 மில்லியன் சதுர அடி வரைத் தொடலாம் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள் CBRE அமைப்பினர்கள்.
இந்தியாவிலேயே இந்த கோ வொர்க்கிங் ஆபரேட்டர்கள் அதிகம் இருக்கும் இடம் பெங்களூரூ தானாம். இந்த ஒரு பெரு நகரத்தில் மட்டும் மார்ச் 2019 நிலவரப்படி, சுமார் 1.2 மில்லியன் சதுர அடி அலுவலக நிலங்கள் குத்தகைக்கு விட்டு இருக்கிறார்களாம். மார்ச் 2018 நிலவரப்படி பெங்களூரில் வெறும் 0.2 மில்லியன் சதுர அடி நிலங்கள் மட்டுமே குத்தகைக்கு விட்டு இருந்தார்களாம்.
பெங்களூரை அடுத்து ஹைதராபாத்தில், கோ வொர்க்கிங் ஆபரேட்டர்கள் நல்ல வியாபாரம் பார்த்து வருகிறார்கள். மார்ச் 2019 நிலவரப்படி ஹைதராபாத்தில் மட்டும் சுமார் 0.7 மில்லியன் சதுர அடி அலுவலக நிலங்களைக் குத்தகைக்கு விட்டு இருக்கிறார்களாம். மார்ச் 2018-ல் ஒரு சதுர அடி கூட கோ வொர்க்கிங் ஆபரேட்டர்களால் குத்தகைக்கு விடப் படவில்லை என்பது தான் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்.