டெல்லி: சமீபத்தில் தான் Employees' Provident Fund Organisation (EPFO)-ன் உறுப்பினர்கள் (பிஎஃப் கணக்குதாரர்களுக்கு) 2018 - 19 நிதி ஆண்டுக்கு 8.65 சதவிகிதம் வட்டி வழங்கலாம் என Employees' Provident Fund Organisation (EPFO) டிரஸ்டீக்கள் முடிவு செய்து, மத்திய நிதி அமைச்சகத்துக்கு பரிந்துரைத்திருக்கிறார்கள்.
கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் பிஎஃப் கணக்குதாரர்களுக்கு 8.55 சதவிகிதம் மட்டும் வட்டி வழங்கினார்கள். இந்த 8.55 சதவிகிதம் என்பது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
டிரஸ்டீக்கள் நல்ல எண்ணத்தில் பிஎஃப் கணக்குதாரர்களுக்குக் கூடுதலாக வட்டியைக் கொடுக்க முன் வந்தாலும், நிதி அமைச்சகம் ஒரு கணக்கை வைத்துக் கொண்டு கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறதாம்.
அந்தக் கணக்கு
தற்போது Employees' Provident Fund Organisation (EPFO)கையில் இருக்கும் பணத்தில், 2018 - 19-ம் ஆண்டுக்கு, பிஎஃப் கணக்குதாரர்களுக்குக் கடந்த வருடம் போல 8.55 சதவிகிதம் மட்டுமே வட்டி கொடுத்தால் உபரி 771.37 கோடி ரூபாயாக இருக்கும். ஒருவேளை டிரஸ்டீக்கள் சொல்வது போல 8.65 சதவிகிதமாக வட்டியை உயர்த்தினால் உபரி 151.67 கோடி ரூபாய்க்கு சரிந்து விடும். இதுவே 8.7 சதவிகிதம் கொடுத்தால் Employees' Provident Fund Organisation (EPFO) அமைப்பு, கணக்குதாரர்களுக்கு முழுமையாக வட்டி கொடுக்க 158 கோடி ரூபாய் தன் கைகாசைப் போட வேண்டி இருக்குமாம்.
மத்திய நிதி அமைச்சகம் கேள்வி
மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் Employees' Provident Fund Organisation (EPFO) அமைப்பிடம், பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஆண்டுக்கு 8.65 சதவிகிதம் வட்டி கொடுக்கும் அளவுக்குப் பணம் இருக்கிறதா..? என மத்திய நிதி அமைச்சகம் கேள்வி எழுப்பி இருக்கிறது. Employees' Provident Fund Organisation (EPFO) அமைப்பின் 57-வது ஸ்டாண்டிங் கமிட்டியின் அறிக்கையில் சுமார் 575 கோடி ரூபாயை தொழிலாளர் நல அமைச்சகம், திவாலான ஐ எல் அண்ட் எஃப் எஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ததாகச் சொல்கிறது. அதை அடிக்கோடிட்டுக் கேள்வி எழுப்பி இருக்கிறது மத்திய நிதி அமைச்சகம்.
சமாளிக்க முடியுமா..?
அதோடு இன்னும் ஐ எல் அண்ட் எஃப் எஸ் நிறுவனம் போல, முதலீடு பறிபோகும் ரீதியில், ரிஸ்க் எடுத்துச் செய்திருக்கும் முதலீட்டு விவரங்களையும் கேட்டுக் கேள்வி எழுப்பி இருக்கிறது மத்திய நிதி அமைச்சகம். திடீரென மத்திய நிதி அமைச்சகம், ஏன் தொழிலாளர் நல அமைச்சகத்தின் முதலீடுகளைக் கேட்கிறது என்றால், Employees' Provident Fund Organisation (EPFO) அமைப்புச் செய்திருக்கும் முதலீடுகளில் ஏதாவது பலமான நஷ்டமடைந்தால் கூட, சொன்னபடி 8.55 சதவிகிதம் வட்டி கொடுக்க முடியுமா..? என்பதைத் தெரிந்து கொள்ளத் தான் இந்தக் கேள்வி எழுப்பி இருக்கிறார்களாம்.
தேவைக்குக் கொஞ்சம் குறைவு தான்
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லும் விதத்தில், நிதி அமைச்சக அதிகாரிகளோடு, தொழிலாளர் நல அமைச்சக அதிகாரிகள் பல முறை பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார்கள். பல கடிதங்களில் பதிலும் அளித்திருக்கிறார்களாம். அதில் ஆண்டுக்கு 8.65 சதவிகிதம் வட்டி கொடுக்கத் தேவையான நிதியில் கொஞ்சம் துண்டு விழுவதையும் தொழிலாளர் நல அமைச்சக அதிகாரிகள் மென்று முழுங்கி ஒப்புக் கொண்டார்களாம்.
அரசின் பொறுப்பு
ஒருவேளை மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தால் பிஎஃப் கணக்குதாரர்களுக்குச் சொன்ன படி வருமானத்தைக் கொடுக்க முடியவில்லை என்றால், அந்தச் சுமையை மத்திய அரசு நேரடியாக சுமக்க வேண்டி இருக்குமாம். ஏற்கனவே, நிதி நெருக்கடியில் தவிக்கும் மத்திய அரசு மேற்கொண்டு கடன் வாங்கி செலவு செய்ய முடியாது என்பதில் தெளிவாக இருக்கிறது. அதனால் தான் உஷாராக எல்லா விஷயங்களைக் கேட்டு தெரிந்து கொள்கிறது மத்திய நிதி அமைச்சகம்.
பிஎஃப் தரப்பு
இது குறித்துத் தொழிலாளர் நல அமைச்சகத்தின் அதிகாரிகள் பேசிய போது "இப்படிப் பிஎஃப் தாரர்களுக்குக் கடந்த 20 வருடங்களுக்கு மேல் வட்டியைக் கணக்கிட்டுக் கொடுத்து வருகிறோம். இதுவரை எங்கள் கணிப்புகள் தப்பியதில்லை. இப்போதும் மத்திய நிதி அமைச்சகம் சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு விளக்கமளித்து வருகிறோம்" எனச் சிம்பிளாக முடித்துவிட்டார்கள்.
கட்டுப்படுத்து
கடந்த 2016-ம் ஆண்டிலும் இப்போது போலப் பிஎஃப் டிரஸ்டீக்கள் பிஎஃப் கணக்குதாரர்களுக்கான வட்டியை 8.80 சதவிகிதமாக அதிகரித்தார்கள். ஆனால் மத்திய நிதி அமைச்சகம் 8.70 சதவிகிதம் கொடுக்கத் தான் அனுமதித்தது. இப்படிப் பல முறை மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் முடிவுகளில் நேரடியாகவே மத்திய நிதி அமைச்சகம் களம் இறங்கி திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறது. எனவே இப்படி இரண்டு அமைச்சகமும் மாறி மாறி பேசிக் கொண்டிருப்பது பிஎஃப் விஷயத்தில் ஒன்றும் புதிதல்ல என்கிறார்கள் பிஎஃப் வட்டார அதிகாரிகள்.