மும்பை: Jet airways நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நரேஷ் கோயல் உணர்ச்சிகரமான, ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்தில் தன்னால் முடிந்த வரை, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை இயக்க, அனைத்து தியாகங்களையும் செய்ததாகச் சொல்லி கடிதத்தைத் தொடங்கி இருக்கிறாராம்.
அதோடு வரும் மே 10, 2019-க்குள் வங்கி சொல்வது போல ஒரு நிறுவனம் ஜெட் ஏர்வேஸில் முதலீடு செய்தோ அல்லது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்கியோ காப்பாற்றுவார்கள் என இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்களாம். மேகங்களால் மறைக்கப்பட்டிருக்கும் சூரியன் மேகங்களில் இருந்து மீண்டும் வருவது போல ஜெட் ஏர்வேஸும் மீண்டு வரும். மே 10, 2019-ல் மீண்டும் வரும் என நம்பிக் கொண்டிருக்கிறாராம்.
அந்தக் கடிதத்தில், தன்னுடைய Jet airways நிறுவனப் பங்குகளை பிணையாக வங்கிகளுக்குக் கொடுத்தது மட்டும் இல்லாமல், ஜெட் ஏர்வேஸின் துணை நிறுவனம் மூலம் வங்கிக்கு 250 கோடி ரூபாய் கிடைக்கச் செய்து, நிறுவனத்தை கொஞ்ச நாள் உயிர்ப்போடு வைத்திருந்ததையும் சுட்டிக் காட்டுகிறார். அதற்கு அடுத்த வரியே ஜெட் ஏர்வேஸுக்காக அதன் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்த தியாகங்கள் மிக உன்னதமானவை மிகப் பெரியவை எனச் சொல்லி பெருமைப்படுத்தி இருக்கிறார். அப்படி உழைத்தவர்களுகு சரியான நேரத்தில் அவர்களுக்கான சம்பளங்களைக் கொடுக்க முடியாதது பெரிய வருத்தமளிப்பதாகச் சொல்லி இருக்கிறார் நரேஷ் கோயல்.
ஒவ்வொரு ஆண்டும் மே 05-ம் தேதி நமக்கு மிக மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். ஆனால் இந்த மே 05, 2019 நமக்கு எல்லாம் ஒரு துக்கமான நாளாக அமைந்துவிட்டது. நம் ஜெட் ஏர்வேஸ் தொடங்கி 26-ம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் இந்த நேரத்தில், ஒரு ஜெட் ஏர்வேஸ் விமானம் கூட வானில் பறக்கவில்லையே என உருகி இருக்கிறார்.
தற்போது வரை எஸ்பிஐ எப்படியாவது ஜெட் ஏர்வேஸை விற்று தங்கள் கடன் 8500 கோடி ரூபாயை மீட்டுக் கொண்டு போக துடித்துக் கொண்டிருக்கிறார்கள். TPG Capital, Indigo Partners, National Investment and Infrastructure Fund (NIIF) and Etihad Airways போன்ற நிறுவனங்கள் ஜெட் ஏர்வேஸை வாங்க இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் எந்த ஒரு நிறுவனமும் non disclosure agreement-ல் கூட இதுவரை கையெழுத்து போடவில்லை என்கிற செய்தியும் வெளியாகி இருக்கிறது. ஆக உண்மையாகவே ஜெட் ஏர்வேஸ் விற்று எஸ்பிஐ தன் கடனை மீட்குமா..? ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் தப்பிப்பார்களா..? இன்னும் சில நாட்களில் தெரிய வரும்.